வெள்ளி, 30 நவம்பர், 2012


உதித் நாராயண் பிற‌ந்த‌ நாள் டிச‌ம்ப‌ர் 01.
உதித் நாராயண் எனப் பரவலாக அறியப்படும் உதித் நாராயண் ஜா (நேபாளி: उदित नारायण) வணிக ரீதியான இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, அஸ்ஸாமி மற்றும் நேபாளி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் பின்னணிப் பாடகர் ஆவார். நாராயண் 500க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் மற்றும் 30 மாறுபட்ட மொழிகளில் 15,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். அவர் இந்தியாவின் உயரிய குடிமக்களின் கெளரவ விருதான பத்மஸ்ரீ விருதினை 2009 ஆம் ஆண்டில் பெற்றார்.
 வாழ்க்கை.
உதித் நாராயண் ஜா நேபாளத்தில் பிராமின் விவசாயி ஹரே கிருஷ்ண ஜா மற்றும் தாயார் புவனேஸ்வரி தேவி ஆகியோருக்கு அவரது தாய்வழி பாட்டன்பாட்டிகள் இல்லத்தில் டிசம்பர் 1, 1955 ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் தெற்கு நேபாளத்தில் சப்தாரி மாவட்டத்தில் ராஜ் பிஜாரி சிறுநகரத்தில் பிறந்தார் என வதந்திகளும் நிலவுகின்றன. திரு. நாராயண் அதனை மறுக்கிறார்.[3]
நாராயண் குணாலி பஜாரில் (சஹார்சா,தற்போது சுபால், பீகார்) பயின்றார். அங்கு அவர் அவரது எஸ்.எல்.சி. இல் தேறினார். மேலும் பின்னர் </gallery> ரத்னா ராஜ்ய லக்ஸ்மி கேப்பஸில் (காட்மண்டு) அவரது இடைநிலைப் படிப்பை நிறைவு செய்தார்.
உதித் நாராயண் நேபாளத்தில் அவரது தொழில் வாழ்க்கையை மைதிலி மற்றும் நேபாள நாட்டுப்புறப் பாடல்களுக்கான நிலையக் கலைஞராக காட்மண்டு வானொலி நிலையத்தில் பாடியதன் மூலம் தொடங்கினார். அதில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இந்தியத் தூதரகம் அவருக்கு பம்பாயில் மதிப்பு மிக்க, பாரதிய வித்யா பவனில் இசை ஊக்கத்தொகையில் மரபார்ந்த இசையைப் பயில்வதற்கான வாய்ப்பை வழங்கியது. அவர் 1978 ஆம் ஆண்டில் பம்பாயுக்கு இடம்பெயர்ந்தார்.
1980 ஆம் ஆண்டில் அவர் அவரது முதல் முன்னேற்றத்தை, குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் அவரது இந்தி திரைப்படம் உனீஸ் பீஸ் இல் பாடுவதற்காக கேட்ட போது அடைந்தார், அதில் அவர் முகமது ரஃபி மீதான அவரது ஈர்ப்பினால் அந்த வாய்ப்பைப் பெற்றார். எனினும், உண்மையில் அவரது தொழில் வாழ்க்கை வெற்றிக்கதை 1988 ஆம் ஆண்டில் வெற்றிகரமான பாலிவுட் திரைப்படம் கயாமத் சே கயாமத் தக் உடன் ஆரம்பமானது, அது அவருக்கு பிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத்தந்தது.[4] அந்தத் திரைப்படத்தினால், நடிகர் அமீர் கான், நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் பின்னணிப் பாடகி ஆல்கா யாக்னிக் ஆகியோரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றனர். கயாமத் சே கயாமத் தக்கின் வெற்றிக்குப் பிறகு, அவர் இந்தியத் திரைப்படத்துறையில் முன்னணிப் பின்னணிப் பாடகர்களில் ஒருவராக மாறினார்.
அதே நேரத்தில், அவர் நேபாளத்தில் நன்கு அறியப்பட்ட பிரபலமாகவும் மாறினார் மேலும் பல பிரபலமான நேபாளத் திரைப்படங்களுக்காகப் பாடியுள்ளார். அவர் குசுமெ ரூமல் மற்றும் பிராடி போன்ற சில நேபாளத் திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் அதில் பெருமளவில் வெற்றியடையவில்லை. அவர் நேபாளியத் திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார், குறிப்பாக இசையமைப்பாளர் ஷாம்பூஜீத் பாஸ்கோடாவுடன் பணியாற்றி இருக்கிறார். அவரது ஆரம்ப பாடகர் தொழில் வாழ்க்கையில், அவர் ஷிவ ஷங்கர், நாடிகாஜி மற்றும் கோபால் யோன்சான் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டில், அவர் அவரது முதல் தனிப்பட்ட நேபாளிய ஆல்பமான உபஹார் ஐ வெளியிட்டார், அதில் அவர் அவ்வரது மனைவி தீபா ஜாவுடன் இணைந்து ஜோடிப்பாடலும் பாடியிருக்கிறார்.
அவர் ராகுல் தேவ் பர்மன், ஏ. ஆர். ரகுமான், ஜக்ஜித் சிங், அனு மாலிக், ஜதின் லலித், லக்ஸ்மிகாந்த்-பியாரிலால், கல்யாண்ஜி-ஆணந்த்ஜி, பப்பி லஹரி, விஷால் பரத்வாஜ், நடீம்-ஸ்ராவன், ராஜேஷ் ரோஷன், சங்கர் மகாதேவன், ஹிமேஸ் ரெஷமியா, பிரீதம் சக்ரவர்த்தி, விஷால்-சேகர் போன்றை இசைக் கலைஞர்கள் மற்றும் யாஷ் சோப்ரா, சஞ்சய் லீலா பண்சாலி, அஷூடோஸ் குவாரிகர் மற்றும் கரண் ஜோஹர் போன்ற முன்னணி இயக்குனர்களுடனும் சுனிதி ஷௌஹான்,மஹாலஷ்மி ஐயர் போன்ற பாடகர்களுடனும் பணியாற்றி இருக்கிறார். அதில் லகான், டார், தில்வாலே துல்ஹனியா லேஜாயெங்கே, குச் குச் ஹோத்தா ஹை, தில் டு பாகல் ஹாய், மொகபத்தீன், தேவ்தாஸ், கல் ஹோ ந ஹோ, ஸ்வதேஸ் மற்றும் வீர் ஜாரா உள்ளிட்டவை அடங்கும்.
2004 ஹிட்ஸ் எஃப்எம் விருதுகளில், அவர் ஆண்டின் சிறந்த பதிவு மற்றும் ஆண்டின் சிறந்த ஆல்பம் ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளில் வென்றார்.[மேற்கோள் தேவை] பஜன் சங்கம், பஜன் வாடிகா, ஐ லவ் யூ, தில் தீவானா, யே தோஸ்தி, லவ் இஸ் லைஃப், ஜும்கா டே ஜும்கா, சோனா நோ காடுலோ, துலி கங்கா மற்றும் மா தாரினி போன்றவை நாராயணின் மற்ற பிற தனிப்பட்ட ஆல்பங்கள் ஆகும்.
அவர் சோனி டிவியில் பாடகர் கரானாவின் (பாடகர்களின் குடும்பம்) கூடுதல் சார்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான வார் பரிவாருக்கான நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். அவர் சக பின்னணிப் பாடகர் குமார் சானு மற்றும் பிரபல இசை இரட்டையர்கள் ஜதின்-லலித் ஆகியோரில் ஒருவரான ஜதின் பண்டிட் ஆகியோருடன் இணைந்து அப்பணியை மேற்கொண்டார்.
நாராயண் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். மேலும் அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். அதில் ஸ்க்ரீன் வீடியோகான் விருது, எம்.டி.வி சிறந்த வீடியோ விருது மற்றும் பிரைட் ஆஃப் இந்தியா கோல்ட் விருது உள்ளிட்டவையும் அடங்கும்.
தனிப்பட்ட வாழ்க்கை.
நாராயண் மும்பையில் வசித்து வருகிறார்.[5] அவர் திருமணமானவர், அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரது மனைவி தீபா நாராயனை (கொல்கத்தாவைச் சேர்ந்தவர்) அவர் 1985 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு பெங்காளிப் பாடகி ஆவார். மேலும் இருவரும் இணைந்து தில் தீவானா என்ற பெயரில் ஆல்பம் பதிவு செய்திருக்கின்றனர்.
அவரது மகன் ஆதித்யா நாராயண் 1990 ஆம் ஆண்டுகளில் இந்தித் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்குப் பாடுபவராக அவரது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் சமீபத்தில், அவர் இந்தியத் தொலைக்காட்சி பாட்டுப் போட்டியான ச ரீ க ம பா இன் இறுதி 2 பருவங்களைத் தொகுத்து வழங்கினார்.
20 ஏப்ரல் 2006 ஆம் ஆண்டில், பீகாரின் சுபால் மாவட்டத்தில் வசித்துவரும் ரஞ்சனா ஜா, உதித்நாராயணின் முதல் மனைவி என சர்ச்சையைக் கிளப்பினார்.[6] நாராயண் முதலில் அவரது குற்றச்சாட்டை மறுத்த போதும், பின்னர் அவர் அவரது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை வழங்கிய பின்னர், இறுதியாக அவரை இவரது முதல் மனைவியாக ஏற்றுக் கொண்டார். மேலும் அவருடன் உடன்படிக்கைக்கு முன்வந்தார்.
 சில குறிப்பிடத்தக்க தமிழ் பாடல்கள்.

சஹானா - சிவாஜி: தி பாஸ் (2007)
எங்கேயோ பார்த்த - யாரடி நீ மோஹினி (2008)
தேன் தேன் - குருவி (2008)
விருதுகள்
2009: பத்ம ஸ்ரீ, இந்தியாவின் 4வது உயரிய குடிமக்கள் கெளரவம்.

புதன், 28 நவம்பர், 2012

வாணிஜெயராம் பிறந்த நாள் நவம்பர் 30.



  தமிழகத்தின் வேலூர் நகரில் பிறந்த தமிழ்ப் பெண்ணான இவரது இயற்பெயர் 'கலைவாணி'. 
தன் கணவர் பெயருடன் சேர்த்து வாணிஜெயராமாக உருவெடுத்த வாணிஜெயராம் முதலில் கலக்கியது மராத்தி மொழியில். மராத்தியில் இவர் பாடிய பாடல் பல விருதுகளை இவர் குரலுக்கு பரிசாக கொடுத்தது.பின்னர் வட நாட்டில் மராத்தி உட்பட குஜராத்தி,மர்வாரி,போஜ்புரி என அணைத்து மொழிகளிலும் தென் நாட்டில் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பாடிய தமிழ் பாடகி என்ற் அந்தஸ்தை பெற்றார்.  
மற்றும் நாட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இந்தியாவின் அணைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.
 வாணிஜெயராம் அவர்கள் இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வட நாட்டில்தான். எடுத்த எடுப்பிலேயே அவரது இந்திப் பாடல் பிரமாத வெற்றி பெற்றுவிட்டதாகவும் . அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமைகூட வந்ததாகவும். வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் ஸ்டிரைக் செய்ததாகவும் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். இன்னமும் ஒரிஸாவிலும், வங்காளியிலும், நான்கு திராவிட மொழிகளிலும் வாணியின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.
வாணிஜெயராமின் குரலுக்கு, குடும்பப் பாடல்களே கவர்ச்சிகரமானவை. 'காபரே' பாடல்களை அவர் மிக அழகாகப் பாடினாலும், அவை என்னவோ வாணிஜெயராமின் குரலுக்கு ஒத்துவராதவைபோல் தோன்றும்.
இவர் காபரே பாடல்களை தவிர்ப்பது நல்லது என கவிஞர் கண்ணதாசனே தெரிவித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவரை பார்த்தாலே ஏதோ என்பது போல தோன்றும் ஆனால் இவர் பாடகி என்றவுடன் நிச்சயம் இவர் சங்கீத பாடகியாக இருப்பார் என நினைத்தால் அதுவும் தவறு. அழகான இவர் முகமும் அழகான இவர் குரலும் அழகாக பின்னப்பட்ட காவியம் ஆகும்
வாணி ஜெயராம், இந்திய இசை உலக மகுடத்தில் மின்னும் வைரம். கடந்த 37 ஆண்டுகளாக ரசிக நெஞ்சங்களில் இசைமழை பொழிந்துவரும் மேகம். 'வர்ண'ஜாலம் காட்டிவரும் வானம்பாடி.10000 பாடல்களை கடந்த  இவரது இசைப்பயணம் 2 வயதிலேயே தொடங்கிவிட்டது என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கு. அந்தப் பிஞ்சு வயதில் ராகங்களையும், இசைக் குறிப்புகளையும் இவரால் இனம் கண்டுகொள்ள முடிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 'கலைவாணியின்' பரிபூரண அருளுடன், முறையான சங்கீதப் பயிற்சியும் இவரது திறமையை மெருகேற்றின.
திருமணத்துக்குப் பிறகு மும்பை சென்றவர், உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி மெல்லிசைப் பயிற்சியும் பெற்றார். தினமும் 18 மணிநேர அசுர சாதகம்...தும்ரி பஜன் மற்றும் கஜல் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் வாணி. 1969, மார்ச் 1ம் தேதி அரங்கேற்றத்தில் பொழிந்த இசை மழையில் நனைந்த ரசிகர் கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது. மும்பையின் அத்தனை சபாக்களும் வாணியிடம் தேதி கேட்டு மொய்த்தன. இந்தி இசை அமைப்பாளர் வசந்த் தேசாயிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அடுத்த நாளே பாடல் பதிவு. இதைத் தொடர்ந்து மாரத்தி பாடல் வாய்ப்புகள் குவிந்தன. இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி, இசையமைப்பாளர் வசந்த் தேசாய் கூட்டணியில் உருவான 'குட்டி' திரைப்படத்தில் வாணியின் குரல் தேன் சொட்டியது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அந்த படத்தில் பாடிய 'போல் ரே பபி ஹரா' 5 விருதுகளை அள்ளிச் சென்றது. தான்சேன் விருதும் தானே வந்தது.
1976... 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒலித்த 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் தமிழ் ரசிகர்களை கிறங்க வைத்தது. தேசிய விருதும் தேடி வந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன், மீரா, சங்கராபரணம், ஸ்வாதிகிரணம்...என்று இந்த இசைக் குயிலின் தேவராகத்தில் பிறந்த பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களையும், விருதுகளையும் கொள்ளையடித்தன. நௌஷாத், மதன் மோகன், ஓ.பி.நையர், ஆர்.டி.பர்மன், கல்யாண்ஜி ஆன்ந்த்ஜி, லஷ்மிகாந்த் ப்யாரேலால், கே.வி. மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா...என்று இவர் பாடாத இசையமைப்பாளர்களே இல்லை. குஜராத், ஒரிசா, தமிழகம், ஆந்திர மாநில அரசுகளும் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன. பத்தாயிரம் பாடல்களைக் கடந்தும் இவரது இன்னிசைப் பயணம் தொய்வின்றி தொடர்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள், பக்ரைன், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ்...என்று இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள நாடுகளின் பட்டியல் நீள்கிறது. இவை இவரது சாதனை சரித்திரத்தில் சில பக்கங்கள் மட்டுமே.
வாணி ஜெயராம் பெற்ற விருதுகள்...
குடியரசுத் தலைவரின் தேசிய விருது அபூர்வ ராகங்கள் (தமிழ், 1976), 
சங்கராபரணம் (தெலுங்கு, 1980), ஸ்வாதிகிரணம் (தெலுங்கு, 1992).
மியான் தான்சேன் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1971 (இந்தி, போல் ரே பபி ஹரா)
குஜராத் அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1972 (குஜராத்தி, 'குங்கத்').
தமிழக அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை ஆராதிக்கிறேன்).
பிலிம்பேர் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (மீரா)
ஆந்திர அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்).
ஒரிசா அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
தமிழக அரசின் கலைமாமணி விருது 1991
மும்பை 'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட விருது 1992 1972 (குஜராத்தி, 'குங்கத்').
தமிழக அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை ஆராதிக்கிறேன்).
பிலிம்பேர் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (மீரா)
ஆந்திர அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்).
ஒரிசா அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
தமிழக அரசின் கலைமாமணி விருது 1991
மும்பை 'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட விருது 1992
தமிழக அரசு வழங்கும் 'எம்.கே. தியாகராஜ பாகவதர் - வாழ்நாள் சாதனையாளர்' விருது 2
என்னதான் பிரமிப்பான பாடகியாக இருந்த போதும் அவர் இசை 
தொகுப்பில் தலைவரின் இசை கலக்கும் போது அதன் சுகமே தனிதான் .


செவ்வாய், 27 நவம்பர், 2012

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிற‌ந்த‌ நாள் நவம்பர் 29,

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்,
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடாவிற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இழமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
அண்ணல் காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பினனர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமது ஊரான அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.
கொலைக் குற்றச்சாட்டு.
அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.
இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்.
அம்பிகாபதி
மதுரைவீரன்
நல்லதம்பி
இவர் இயக்கிய படங்கள்..
பணம்
மணமகள்
இவர் பாடிய பாடல்கள்..
ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)
மறைவு
1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மறைந்தார்.
கலைவாணர் அரங்கம்.
தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.
என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..
என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...
                நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!      
வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!
                ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
                'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
                தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
                 என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை  கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
                என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
                'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
                உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
                1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
                'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
                சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
                சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
                ''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
                கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
                ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
                'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
                தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
                கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
                சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
                சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
                கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
                ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!

ஞாயிறு, 18 நவம்பர், 2012

நடிகை ஷாலினி பிற‌ந்த‌ நாள் நவம்பர் 20,



ஷாலினி (பிறப்பு. நவம்பர் 20, 1980, சென்னை) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி ஷாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகியுள்ளார்.
 இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
அலைபாயுதே
காதலுக்கு மரியாதை
கண்ணுக்குள் நிலவு
அமர்க்களம்
பிரியாத வரம் வேண்டும்.

இசைய‌மைப்பாள‌ர் தேவா பிற‌ந்த‌ நாள் நவம்பர் 20,


தேவா (நவம்பர் 20, 1950) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும்.



வியாழன், 15 நவம்பர், 2012

ஜெமினி கணேசன் பிற‌ந்த‌ நாள் ந‌வ‌ம்ப‌ர் 17



ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு.
தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.
ஜெமினி கணேசனின் திரை வரலாறு ஆரம்ப காலத் திரை வாழ்க்கை.

திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணி ஆற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தபோது, திரையுலகுடனான அவரது வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பின்னாளில் எந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் அவர் நாயகனாக நடித்தாரோ, அதே நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு வருபவர்களை நேர்காணல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்!
1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், திரையுலகத்தின் பொற்கதவுகள் அவருக்கு உடனடியாகத் திறந்து விடவில்லை. பலரது கவனத்தையும் ஈர்த்து மஞ்சள் ஒளி அவர் மீது விழ வைத்தது 1952ஆம் ஆண்டின் வெளியீடான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் காண்பவர் மனம் மயங்கும் வண்ணம் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் கதாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)
ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான எஸ்.பாலச்சந்தர் ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்". இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்ரியை அவர் மணந்து கொண்டார்.
காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.
இயக்குனர்களின் நாயகன்

ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.
புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி" போன்ற பல படங்களை இயக்கினார்.
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.
  
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.
எம்.ஜி.ஆர் உடன் ஜெமினி கணேசன் "முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.
தமக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன். முத்துராமன் ஆகியோருடனும் அவர் பல படங்களில் இணைந்து நடித்தார்.
திரை நாயகியர்
எந்த ஒரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்ரி, அஞ்சலிதேவி, பத்மினி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சாவித்ரியுடன் அவர் நடித்த முதல் படம் "மனம்போல மாங்கல்யம்". இதன் படப்பிடிப்பு நடைபெறும் வேளையில்தான் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இதன் பிறகும், இருவரும் இணைந்து "பாசமலர்", "பாதகாணிக்கை", "ஆயிரம் ரூபாய்", "யார் பையன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இவற்றிற்கு முந்தைய படமான "மிஸ்ஸியம்மா"வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும்.
சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.
அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
பின்னணிப் பாடகர்கள்

பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம்.சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ். இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம்.ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப்பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை.
1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்.
குணச்சித்திர வேடங்கள்
ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".
சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான அவ்வை சண்முகி.
மரணம்
சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இயற்கை எய்தினார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது.
ஜெமினி கணேசன் நடித்த புகழ் பெற்ற திரைப்படங்கள் சில
ஜெமினி கணேசன் சாந்தி நிலையம் திரைப்படத்தில் காஞ்சனாவுடன்
மிஸ் மாலினி* தாயுள்ளம்*பெண் *மளாணனே மங்கையின் பாக்கியம்* கணவனே கண் கண்ட தெய்வம்* *மிஸ்ஸியம்மா* *மாமன் மகள்* வஞ்சிக்கோட்டை வாலிபன்*பார்த்திபன் கனவு*கல்யாணப்பரிசு* கொஞ்சும் சலங்கை*தேன் நிலவு*சுமைதாங்கி*பாசமலர்*பார்த்தால் பசி தீரும்*பாதகாணிக்கை*களத்தூர் கண்ணமா*கற்பகம்*சித்தி*சின்னஞ்சிறு உலகம்
*பணமா பாசமா*ராமு*இரு கோடுகள்*புன்னகை*கண்ணா நலமா*தாமரை நெஞ்சம்*நான் அவனில்லை*உன்னால் முடியும் தம்பி (தெலுங்கில் ருத்ரவீணா)*அவ்வை சண்முகி
பிற மொழிப் படங்களில் ஜெமினி கணேசன்.
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.
அவரது கல்யாணப்பரிசு இந்தி மொழியில் நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் அவர் நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் "மிஸ் மேரி" (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார். தமிழ் நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டிய பாலிவுட் தமிழ் நடிகர்களை வெகு காலத்திற்கு வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் அவரது பங்களிப்பு மிகக் குறைவே.
தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ் ரேவதி சுவாமிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
சுவையான செய்திகள் சில
ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.
ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.
தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்". இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய "இதயமலர்" திரைப்படத்தில் "லவ் ஆல்" என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.
ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.
இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.
ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகவில்லை அல்லது புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.
ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.