புதன், 11 டிசம்பர், 2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12.

சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) என்பவர் ரஜினிகாந்த்[1] (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் துவக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் "சூப்பர் ஸ்டார்" என்றும் அழைக்கின்றனர்.

ரஜினிகாந்த்
Rajinikanth at the Inauguration of MGR Statue.jpg
எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த்
இயற் பெயர்
சிவாசி ராவ் கைக்வாட்
பிறப்பு
திசம்பர் 12, 1950 (அகவை 68)
இந்தியா கர்நாடகா, இந்தியா
நடிப்புக் காலம்
1975-தற்போது வரை
துணைவர்
லதா ரஜினிகாந்த்
பிள்ளைகள்
செளந்தர்யா
ஐஸ்வர்யா
2007 ஆம் ஆண்டில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.[3]

ரஜினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார்.

2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது.[4] இந்தியத் திரைப்படத்துறையின் ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு
பிறப்பு தொகு
ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பெங்களூர், மைசூர் (தற்போது கருநாடகம்) இந்தியாவில் பிறந்தார்.[5][6] ராமோசி ராவ் காயக்வாடுக்கும் (கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்), ரமாபாய்க்கும் (கோவை எல்லையில் பிறந்தவர்)[7] நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர்.[5]தாய் குடும்பத் தலைவியாக இருந்தார். இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட் ஆகும். மராட்டியப் பேரரசர் சிவாஜி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் மராத்திய மொழியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தார். ரஜினிகாந்தின் முன்னோர்கள் மகாராட்டிரம் மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள மாவதி கடெபதாரிலும் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குப்பத்திலும் வாழ்ந்தனர்.[8][9] இவருக்கு சத்ய நாராயண ராவ், நாகேஷ்வர ராவ் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் பாலுபாய் எனும் மூத்த சகோதரியும் உள்ளனர்.[10] 1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார்.[11] பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.[12]

நடத்துனராக தொகு
ஆரம்பகாலத்தில் சிவாஜி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார். இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு 10 பைசா கொடுக்கப்பட்டது. பின்னர் பெங்களூர் போக்குவரத்து சேவைத் தேர்வு எழுதி நடத்துனருக்கான உரிமம் பெற்றார். 19 மார்ச் 1970 அன்று ஓட்டுநர் ராஜ பகதூருடன் பணியில் சேர்ந்தார். இவர்களது பணி நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகும். பணி முடிந்த பிறகு மாலையில் அனுமந்த் நகரில் ராஜ பகதூர் வீட்டிற்கு சிவாஜி செல்வார். பெங்களூர் போக்குவரத்து சேவையால் நடத்தப்படும் நாடகங்களுக்கு இருவரும் ஒத்திகை பார்ப்பர். ஒத்திகை சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 வரை நடக்கும். எப்போதும் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் பார்ப்பர். சிவாஜிக்கு சிவாஜி கணேசன், ராஜ்குமார் மற்றும் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பிடிக்கும். அப்படக் காட்சிகளில் அவர்களைப் போல் சிவாஜி நடித்துக் காண்பிப்பார். அப்போது 25க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிவாஜி நடித்து இருந்தார். அப்போது இவருடன் இருந்த நண்பர்கள், நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இவர் ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறினர். சிவாஜிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் யாரிடமும் உதவி கேட்பதையும் விரும்பியதில்லை. அவர் உருவத்தில் அழகானவரும் கிடையாது. அவருக்குப் பின்புலமும் எதுவும் கிடையாது. நான் நடத்துனர் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டால் யாராவது வாய்ப்புக் கொடுப்பார்களா என்ற எண்ணம் மனதில் ஓடியது. பகதூரும் சிவாஜியின் மற்ற நண்பர்களும் அந்நேரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேருமாறு அவரை அறிவுறுத்தினர். ஒருவேளை திரைப்படத்துறையில் சேர முடியாவிட்டால் தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசாங்க நடத்துனர் பணியை விடுவதற்கு சிவாஜிக்கு விருப்பம் இல்லை. எனவே பணியிலிருந்து சாதாரண விடுப்பும் பின்னர் அங்கீகரிக்கப்படாத விடுப்பும் எடுத்தார். கே. பாலசந்தர் தன்னுடைய மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஏ.வி.எம். ராஜனின் கதாபாத்திரப் பெயரான ரஜினிகாந்தை இவருக்குச் சூட்டினார். இப்பெயருக்கு 'இரவின் நிறம்' என்று பொருள்.[13]

குடும்பம் தொகு
16 பெப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, செளந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார். தற்பொழுது இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது.[14]

பார்வைகள் தொகு
ரஜினிகாந்த் ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர்.[15] இவர் தியானமும் செய்யக்கூடியவர்.[16] இவர் எப்போதாவது இமயமலைக்கு யாத்திரை செல்கிறார்.[17] இவர் ராமகிருஷ்ண பரமஹம்சா,[18] சுவாமி சச்சிதானந்தா, இராகவேந்திரா சுவாமி,[19] மகாவதார் பாபாஜி,[20] மற்றும் ரமண மகரிஷி[18] ஆகியோரை தன் விருப்பமான ஆன்மீகத் தலைவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.

அறப்பணி தொகு
ரஜினிகாந்த்: த டெஃபனிட்டிவ் பயோக்ராபி, புத்தகத்தை எழுதிய நாமன் ராமச்சந்திரனின் கூற்றுப்படி ரஜினிகாந்தின் பெரும்பாலான மனிதநேய நடவடிக்கைகள் வெளியிடப்படுவதில்லை. ஏனென்றால் அவர் அதை வெளியிட விரும்புவதில்லை. 1980 களில், மூடநம்பிக்கைகள் பெரும்பான்மையான மக்களை கண்களை நன்கொடை செய்வதிலிருந்து தடுத்தபோது, ரஜினிகாந்த் தன் கண்களைத் தானம் செய்தார். தொலைக்காட்சி மற்றும் பொது இடப் பேச்சுகளால் கண் தானத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.[21] 2011 இல், காந்தியவாதி அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கான அவரது ஆதரவை ரஜினிகாந்த் அறிவித்தார். சென்னையிலுள்ள அவரது இராகவேந்திரா கல்யாண மண்டபத்தை ஊழலுக்கு எதிரான இந்தியா உறுப்பினர்களுக்கு அவர்கள் உண்ணாவிரதம் இருக்க இலவசமாக வழங்கினார்.[22][23] ரஜினிகாந்தின் ரசிகர்கள் அடிக்கடி இரத்த தானம் மற்றும் கண் தான முகாம்களை நடத்துகின்றனர், மற்றும் அவரது பிறந்த நாளில் அன்னதானம் செய்கின்றனர்.[24]

திரைப்படத்துறை தொகு
திரைப்படங்களில் தொகு
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், தன் நண்பர் ராஜ் பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.

ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு தொகு
ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.[25]

ஆரம்ப காலங்கள் (1975–1977) தொகு
"ரஜினிகாந்த் நான் அவரது பள்ளி என்று கூறுகிறார். ஆனால், நான் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த் இவர் அல்ல என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் தனது சொந்தத் தகுதி மற்றும் பலம் மூலம் பரிணாமம் அடைந்துள்ளார். நான் அவருக்கு ஒரு வாய்ப்பளித்தேன், அவரை உலகிற்கு வெளிப்படுத்தினேன். அவர் சென்று அதை வெற்றி கொண்டார்."
——கே. பாலசந்தர் ரஜினிகாந்தைப் பற்றி[26]
ரஜினிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையைத் தமிழ் திரைப்படமான அபூர்வ ராகங்கள் (1975) மூலம் தொடங்கினார்.[27] தன் முதல் காட்சியில் வாயிற்கதவைத் திறந்துகொண்டு ரஜினிகாந்த் ஒரு வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பார். திரைத்துறைக்குள்ளும் அடியெடுத்து வைத்தார். ரஜினிகாந்த்திற்கு ஸ்ரீவித்யாவின் கொடுமைக்கார கணவராக ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரத்தை கே. பாலச்சந்தர் கொடுத்தார்.[27][28][29] நாமன் ராமச்சந்திரனின் கூற்றுப்படி, ரஜினிகாந்தின் பாண்டியன் கதாபாத்திரம் முற்றிலும் எதிர்மறையாக இல்லை. பாண்டியன் ஒரு வில்லனாக தோன்றவில்லை; உண்மையில், அவர் ஒரு துறவி போல் தோன்றுகிறார். பாண்டியன் எந்த வில்லத்தனத்தையும் செய்யவில்லை. மாறாக, பைரவி (ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரம்) பிரசன்னாவுடன் (கமல்ஹாசனின் கதாபாத்திரம்) மகிழ்ச்சியாக இருப்பதை தெரிந்துகொள்ளும் போது அவர் தானாகவே பைரவியிடம் இருந்து விலகி இருக்க ஒப்புக்கொள்கிறார். பாண்டியன் இறந்த உடனேயே நடக்கும் மூன்று விஷயங்கள் இந்தத் திரைப்படம் அவரை ஒரு வில்லனாகப் பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. முதலில், பாண்டியன் இறக்கும்போது, பொதுவாக அனுதாபத்தை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரத்தின் மரணத்திற்கு இசைக்கப்படுவது போன்ற ஒரு வகையான துக்க இசை ஒலிக்கிறது; இரண்டாவது, அவள் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு விதவையைப்போல பைரவி தன் குங்குமத்தைத் துடைக்கிறார்; மற்றும் மூன்றாவது, பாண்டியனின் இறந்த விரல்கள் ஒரு குறிப்பைப் பிடித்திருப்பதாகக் காணப்படுகிறது. அவரது கடைசி ஆசை ராகமும் மற்றும் தாளமும் இணைவதைப் பார்க்க வேண்டும் என்று அதில் உள்ளது. பாடகி பைரவி மற்றும் மிருதங்கம் வாசிக்கும் பிரசன்னா ஆகியோரின் கச்சேரி பற்றிய தெளிவான குறிப்பு. எனவே, ரஜினிகாந்த் ஒரு வில்லனாக அறிமுகப்படுத்தவில்லை.[30] இப்படம் வெளியானபோது சர்ச்சைக்குள்ளானது. விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இது அதற்கடுத்த வருடம் நடந்த 23வது தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.[31] தி இந்து பத்திரிகையின் ஒரு விமர்சனம் இவ்வாறு குறிப்பிட்டது: "புதுமுக நடிகர் ரஜினிகாந்த் கண்ணியமாகவும் மற்றும் ஈர்க்கும் வகையிலும் நடிக்கிறார்".[32] பின் கதா சங்கமா (ஜனவரி 1976) இவர் நடிப்பில் வெளியானது. இது புட்டன்ன கனகல் தயாரித்த ஒரு சோதனை முயற்சி ஆகும்.[33] இந்தப் படம் மூன்று சிறுகதைகளின் ஒரு இணைப்பாக இருந்தது.[34] இவரது அடுத்த படம் அந்துலேனி கதா. இது பாலசந்தரால் இயக்கப்பட்ட ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும்.[34] தனது சொந்தத் தமிழ் திரைப்படமான அவள் ஒரு தொடர் கதையை (1974) பாலசந்தர் மறு ஆக்கம் செய்தார். ரஜினிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.[34] அடுத்தடுத்த படங்களில், இவர் தொடர்ச்சியான எதிர்மறையான பாத்திரங்களைச் தொடர்ந்தார்.[35]

1977ல், இவர் தெலுங்குப் படமான சிலகம்மா செப்பின்டியில் தனது முதல் முன்னணிப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.[36] ரஜினிகாந்த் எப்பொழுதும் கே. பாலச்சந்தரை தனது வழிகாட்டியாக குறிப்பிடுகின்றபோதிலும்,[37] இவரை மெருகேற்றியவர் எஸ். பி. முத்துராமன் ஆவார்.[38] முத்துராமன் முதன்முதலில் "புவனா ஒரு கேள்விக்குறியில்" (1977) சோதனை முயற்சியாக இவரை ஒரு நல்லவராக நடிக்க வைத்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் முதல் பாதியில் ஒரு தோல்வியடைந்த காதலன் ஆகவும் மற்றும் இரண்டாவது பாதியில் ஒரு கதாநாயகனாகவும் நடித்தார்.[38] இந்தத் திரைப்படத்தின் வெற்றி, 1990கள் வரை 24 திரைப்படங்களுக்கு இருவரையும் ஒன்றாக இணைத்தது.[38] அந்த வருடத்தில் பெரும்பாலான படங்களில் ரஜினிகாந்த் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். அவற்றுள் சிலவற்றில் "வில்லனாக" நடித்தார்.[39] மொத்தத்தில், அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட 15 படங்களில் இவர் இருந்தார். இது முந்தைய வருடங்களைவிட மிக அதிகம்.[40]

பரிசோதனை முயற்சி மற்றும் திருப்புமுனை (1978–1989) தொகு
1978ல், ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 20 வெவ்வேறு படங்களில் நடித்தார்.[41][42] அந்த ஆண்டில் இவரது முதல் படம் பி. மாதவனின் சங்கர் சலீம் சைமன் ஆகும். இதன்பின்னர் முன்னணி கன்னட நடிகரான விஷ்ணுவர்தனுடன் கில்லாடி கிட்டுவில் நடித்தார். இவரது அடுத்த படமான அண்ணாடாமுல சவாலில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுடன் இரண்டாவது முன்னணி நடிகராக நடித்தார். ரஜினிகாந்த் கன்னடப் படமான சகோதரர சவாலில் தான் நடித்த கதாபாத்திரத்திலேயே மீண்டும் இப்படத்தில் நடித்தார். இவர் பின்னர் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இது ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் என்று கூறப்பட்டது. பிறகு, இவர் முக்கிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் தன் 25வது படமான மாத்து தப்பாடமகவில் நடித்தார். எம். பாஸ்கர் இயக்கிய பைரவி, அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. இதுவே ரஜினிகாந்த் ஒரு முக்கியக் கதாநாயகனாக நடித்த முதல் தமிழ் படமாகும்.[43][44] இந்தப் படத்தில் தான் இவர் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் பெற்றார்.[44] படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான எஸ். தாணு, ரஜினிகாந்திற்கு 35 அடிக்கும் உயரமான ஒரு கட் அவுட்டை வைத்தார்.[45] இவரது அடுத்த படம் இளமை ஊஞ்சலாடுகிறது. இது சி. வி. ஸ்ரீதரால் எழுதப்பட்ட ஒரு நாற்கரக் காதல் கதை ஆகும். கமல்ஹாசன் ஏற்று நடித்த நண்பன் கதாப்பாத்திரத்திற்காக தன் காதலைத் தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தார். இந்தத் திரைப்படத்தின் வெற்றி தெலுங்கில் ஸ்ரீதர் இப்படத்தை மறு ஆக்கம் செய்யும்படி தூண்டியது. அப்படம் வயசு பிலிச்சண்டி என்ற பெயரில் வெளியானது. தமிழ்ப் படத்தில் நடித்தவர்களே தெலுங்கிலும் அப்படியே நடித்தனர்.

இவரது அடுத்த படம் வணக்கத்திற்குரிய காதலியே ஆகும். முதன்முதலில் படத்தில் இவர் தோன்றுவதைக் குறிக்க அறிமுக பாடல் இப்படத்தில் இருந்துதான் ஆரம்பமானது. விரைவில் இவரது அடுத்த படங்களிலும் இந்த ஒரு பாணி பின்பற்றப்பட்டது.[44] அதே காலகட்டத்தில் வெளியான முள்ளும் மலரும் விமர்சன ரீதியாகப் பலரது பாராட்டைப் பெற்றது.[46] ஜெ. மகேந்திரன் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் திரைக்கதை கல்கி பத்திரிக்கையில் வெளியான முள்ளும் மலரும் நாவலில் இருந்து உருவானது.[44] இது இறுதியாகச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதினை வென்றது. தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளில் ரஜினிகாந்த்திற்கு சிறந்த நடிகருக்கான ஒரு சிறப்பு பரிசை வென்றது.[44] இதைத் தொடர்ந்து, மலையாளச் சினிமாவில் கற்பனைத் திரைப்படமான அலாவுதீனும் அற்புத விளக்கும் மூலம் களமிறங்கினார். இது புகழ்பெற்ற அரேபிய இரவுகள் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதே வருடத்தில், இவர் தர்மயுத்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் தன் பெற்றோரின் மரணத்திற்கு பழிவாங்கும் ஒரு மனநோயாளியாக நடித்தார். பின்னர் இவர் என். டி. ராமராவுடன் டைகர் படத்தில் நடித்தார். டைகர் முடிந்தபொழுது நான்கு ஆண்டுகளில், நான்கு மொழிகளில் 50 படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இளமையான பொழுதுபோக்கான நினைத்தாலே இனிக்கும், தமிழ் கன்னட இருமொழிப்படமான ப்ரியா, தெலுங்குப் படமான அம்மா எவருக்கீனா அம்மா மற்றும் உணர்ச்சிமயமான ஆறிலிருந்து அறுபது வரை ஆகியவை இந்தக் காலத்தில் வெளியான வேறு சில பிரபலமான படங்கள் ஆகும். சுஜாதா ரங்கராஜனின் துப்பறியும் நாவலை அடிப்படையாகக் கொண்ட ப்ரியா இந்தியாவுக்கு வெளியே பெரும்பாலும் எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் முதல் படம் என்ற சிறப்பைப் பெற்றது. இப்படம் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் எடுக்கப்பட்டது.[44]

ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படங்களின் தமிழ் மறு ஆக்கங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்த மறு ஆக்கங்கள் பில்லா (1980), தீ (1981) மற்றும் மிஸ்டர் பாரத் (1986) ஆகியவை ஆகும்.[47]


ரஜினிகாந்த் 1989ல், ராஜா சின்ன ரோஜா படப்பிடிப்பின் இடையில்
தன் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், ரஜினிகாந்த் திடீரென்று நடிப்பதை விட்டு விலக முடிவெடுத்தார், ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் முடிவை மாற்றிக்கொண்டார்.[48] பில்லாவில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக ரஜினிகாந்தின் முதல் வெற்றிப் படமானது. ஸ்ரீதேவியுடன் இவர் இணைந்து நடிப்பது ஜானியிலும் தொடர்ந்தது. ஜானியில் ரஜினிகாந்த் மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்தார். பின்னர் வணிக ரீதியாக வெற்றிப் படமான முரட்டுக் காளையில் நடித்தார்.[38] பில்லாவின் வெற்றி ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ரஜினிகாந்த் அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்று கூறிய எதிர்ப்பாளர்களுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் ஒரு முழுமையான ஹீரோவாகப் பார்க்கப்பட்டார்.[48]

1981ல், இவர் கன்னடம் மற்றும் மலையாளத்தில் படம்பிடிக்கப்பட்ட கர்ஜனை படத்தில் நடித்தார். இதுவே அந்த இருமொழிகளிலும் இவர் நடித்தக் கடைசிப் படமாகும். இவரது முதல் முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் தில்லு முல்லு ஆகும். இது பாலச்சந்தரால் இயக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரஜினிகாந்த் பிரபலமாகிக் கொண்டிருந்த சண்டைப்பட கதாநாயகன் என்ற அச்சை உடைக்க இவர் வணிக ரீதியான பாத்திரங்கள் தவிர மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டுமென பாலசந்தர் வலுவாகப் பரிந்துரை செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒத்துக்கொண்டார்.[49] 1981ல் இவர் தீ படத்திலும் நடித்தார். இது அமிதாப்பச்சன் நடித்த இந்திப்படமான தீவார் (1975) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இதில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனின் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[50] 1982ல், இவர் போக்கிரி ராஜா, மூன்று முகம், தனிக்காட்டு ராஜா, புதுக்கவிதை மற்றும் எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்களில் நடித்தார். மூன்று முகம் படத்தில் ரஜினிகாந்த் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்தார்.[51]

1983 வாக்கில், தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் ஆனார்.[52] 1983ல், ரஜினிகாந்த் தன் முதல் இந்திப்படமான அந்தா கனூனில் நடித்தார். இப்படத்தில் இவர் அமிதாப்பச்சன் மற்றும் ஹேம மாலினியுடன் நடித்தார். அந்த நேரத்தில் மிக அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகும்.[53] இது தமிழில் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறையின் மறு ஆக்கம் ஆகும். இவரது 1984ம் ஆண்டுப் படமான நான் மகான் அல்ல பாலச்சந்தர் தயாரிக்க முத்துராமனால் இயக்கப்பட்டது. இவர் தன் முதல் கௌரவத் தோற்றத்தில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தார்.[54] நல்லவனுக்கு நல்லவன் படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.[55] இவர் தன் 100வது படமான ஸ்ரீ ராகவேந்திராவில் இந்துத் துறவி இராகவேந்திர சுவாமிகளாக நடித்தார்.[56]

1980களின் பிற்பாதியில், ரஜினிகாந்த் வணிக ரீதியான வெற்றிப் படங்களான நான் சிகப்பு மனிதன் (1985), படிக்காதவன் (1985), மிஸ்டர் பாரத் (1986), வேலைக்காரன் (1987), குரு சிஷ்யன் (1988) மற்றும் தர்மத்தின் தலைவன் (1988) ஆகியவற்றில் நடித்தார். 1988ல், இவர் தனது ஒரே அமெரிக்கத் திரைப்படமான பிளட்ஸ்டோனில் நடித்தார். இப்படத்தை டுவைட் லிட்டில் இயக்கினார். இப்படத்தில் ஆங்கிலம் பேசும் இந்திய டாக்சி ஓட்டுனராக ரஜினிகாந்த் நடித்தார்.[57][58] ரஜினிகாந்த் அந்த தசாப்தத்தின் முடிவில் ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா மற்றும் மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார். இதில் ராஜா சின்ன ரோஜா திரைப்படமானது இயல்பான திரைப்படக் காட்சிகள் மற்றும் அனிமேஷன் காட்சிகளைக் கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.[59][60]

வணிகரீதியான நட்சத்திர அந்தஸ்து (1990–2001) தொகு
1990 வாக்கில், ரஜினிகாந்த் தன்னை ஒரு வணிகரீதியான நட்சத்திரமாக நிறுவினார். இந்த காலகட்டத்தில் வெளியான அனைத்து படங்களும் வணிகரீதியாக அதிக வெற்றி பெற்றன.

இவர் அந்தத் தசாப்தத்தை பணக்காரன் (1990) என்ற ஒரு வெற்றிப்படத்துடன் தொடங்கினார். இது அமிதாப்பச்சனின் லாவரிஸ் (1981) என்ற இந்திப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இவரது அடுத்த இரு படங்கள் கற்பனை நகைச்சுவைப் படமான அதிசயப் பிறவி (1990) (சிரஞ்சீவியின் யமுடிகி மொகுடு (1988) படத்தின் மறு ஆக்கம்) மற்றும் குடும்ப ட்ராமா படமான தர்மதுரை (1991) ஆகியவை ஆகும்.[61] 1991ல், இவர் மணிரத்தினத்தின் தளபதி படத்தில் நடித்தார். இது மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும்.[62][63] இதில் இவர் மம்மூட்டி உடன் இணைந்து நடித்தார். இரண்டு அறியப்படாத கதாபாத்திரங்களுக்கிடையிலான நட்பைக் இத்திரைப்படம் கையாண்டது. அக்கதாபாத்திரங்கள் இரண்டும் கர்ணன் மற்றும் துரியோதனனை அடிப்படையாகக் கொண்டவையாகும்.[62] இப்படம் வெளியிடப்பட்ட போது விமர்சனரீதியான பாராட்டு மற்றும் வெற்றி ஆகிய இரண்டையுமே பெற்றது.[56] அண்ணாமலை (1992) நட்பை மையமாகக் கொண்ட மற்றொரு திரைப்படம் ஆகும். பி. வாசுவால் இயக்கப்பட்ட மன்னன் (1992) கன்னட நடிகர் ராஜ்குமாரின் அனுரக அரலிது (1986) படத்தின் மறு ஆக்கம் ஆகும். ரஜினிகாந்த் தன் முதல் திரைக்கதையை வள்ளி (1993) படத்திற்காக எழுதினார். இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் இவர் நடித்தார். ரஜினிகாந்த் வானவராயன் என்ற ஊர்த்தலைவர் கதாபாத்திரத்தில் எஜமான் படத்தில் நடித்தார். பின்னர் வெளியான இவரது வீரா (1994) அந்த ஆண்டின் அதிகமான இலாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது.[64]

இவர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாட்ஷா (1995) படத்தில் நடித்தார். இப்படம் திரைப்படத்துறையில் வசூல் சாதனை செய்தது.[65] இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகிய இருசாராராலும் ஒரு வெற்றிப்படமாகக் கருதப்படுகிறது. இந்தப் படம் அவரை மற்றொரு பிரபல நடிகர் என்ற நிலையிலிருந்து கிட்டத்தட்ட கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு வெகுஜனங்களிடையே உயர்த்தியது.[66] தன் நண்பர் மோகன் பாபுவுக்காக பெத்தராயுடு படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அப்படத்தின் மறு ஆக்க உரிமைகளைப் பெறவும் அவருக்கு உதவினார். அதே ஆண்டில் இவர் இந்திப்படமான அதங்க் ஹி அதங்கில் அமீர் கானுடன் இணைந்து நடித்தார். இதுவே இன்றுவரை முக்கியமான கதாப்பாத்திரத்தில் இந்தியில் ரஜினிகாந்த் நடித்த கடைசித் திரைப்படம் ஆகும். இவர் பின் பாலசந்தர் தயாரிக்க கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து (1995) திரைப்படத்தில் நடித்தார். இது வணிகரீதியாக வெற்றி பெற்ற மற்றொரு திரைப்படம் ஆகும். இது மோகன்லாலின் வெற்றிபெற்ற மலையாளப் படமான தேன்மாவின் கொம்பதின் மறு ஆக்கம் ஆகும். சப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுவாகும். இது சப்பானில் முத்து: ஒடோரு மகாராஜா (நடனமாடும் மகாராஜா) என்ற பெயரில் வெளியானது.[67] 1998 ஆம் ஆண்டு சப்பானில் இப்படம் சாதனை அளவாக $1.6 மில்லியன் வசூல் செய்தது. ரஜினிகாந்துக்கு பெரிய அளவில் சப்பானிய ரசிகர்கள் இத்திரைப்படத்திற்குப் பின்னர் உருவாயினர்.[68] சப்பானில் முத்து திரைப்படம் பெற்ற வெற்றிக்குப் பின் அமெரிக்கச் செய்திப் பத்திரிகையான நியூஸ்வீக் ஒரு 1999ம் ஆண்டு கட்டுரையில் இவ்வாறு எழுதியது "லியோனார்டோ டிகாப்ரியோவை ஜப்பானின் மிகச்சிறந்த இதயத் துடிப்பு என்ற இடத்திலிருந்து ரஜினிகாந்த் நீக்கிவிட்டார்".[69] 2006ல் சப்பானுக்கு விஜயம் மேற்கொண்டபோது, அப்போதைய இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் இரு நாடுகளுக்கும் இடையேயான நேர்மறை உறவை நியாயப்படுத்தும் வகையில் ஒரு உரையில் சப்பானில்முத்து பெற்ற வெற்றியைப் பற்றிப் பேசினார்.[70] ரஜினிகாந்த் பாக்ய தேபடா என்ற திரைப்படம் மூலம் வங்காள சினிமாவிலும் நுழைந்தார். இத்திரைப்படம் 1995ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. 1997ன் அருணாச்சலம் மற்றொரு வணிகரீதியான வெற்றிப்படமாக இருந்தது. அந்த ஆயிரம் ஆண்டுகளில் தன் இறுதித் திரைப்படமான படையப்பாவில் (1999) ரஜினிகாந்த் நடித்தார். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படக் கதாபாத்திரம் தான் நடிகர் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த முக்கியக் கதாபாத்திரமாகும்.

போராட்டங்கள், எழுச்சி மற்றும் பாராட்டுக்கள் (2002–2010) தொகு
சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2002ல் பாபா படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். இவர் அத்திரைப்படத்திற்குத் திரைக்கதையும் எழுதியிருந்தார்.[71] இப்படத்தின் திரைக்கதை ஒரு ரவுடி திருந்துவதைப்போல் அமைக்கப்பட்டிருந்தது. அவர் பின்னர் இந்துத் துறவி மகாவதார் பாபாஜியின் மறுபிறப்பு என்று தெரியவருகிறது. அவர் அரசியல் ஊழலுக்கு எதிராகச் சண்டையிடுகிறார்.[71] இப்படத்தால் சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. விநியோகஸ்தர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ரஜினிகாந்தே விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை திருப்பிக் கொடுத்தார்.[72][73] இந்தப் படம் "ரோஜா தன் வாசத்தை இழந்து விட்டது" மற்றும் "தங்கம் இனிமேல் மின்னப்போவதில்லை" ஆகிய கருத்துக்களைப் பெற்றது.[74]

இரண்டு ஆண்டுகள் கழித்து, ரஜினிகாந்த் பி. வாசுவின் சந்திரமுகியில் (2005) நடித்தார். இப்படம் மிக வெற்றிகரமாக ஓடியது. 2007 இல் இது மிக நீண்ட நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற சாதனையைப் பதிவு செய்தது.[75] சந்திரமுகி துருக்கிய மொழியிலும் மற்றும் டெர் கெயிஸ்டெர்ஜகெர் என்ற பெயரில் செர்மானிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அந்தந்த நாடுகளில் வெளியிடப்பட்டது.[76] இரண்டு ஆண்டு படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிறகு சிவாஜி (2007) திரைப்படம் அந்த ஆண்டின் கோடைகாலத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டபோது இது ஐக்கிய இராச்சியம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வெளியான பத்து சிறந்த திரைப்படங்களில் ஒரு திரைப்படமாக ஆனது.[77][78] ரஜினிகாந்த் இப்படத்தில் தனது பங்கிற்கு 26 கோடி சம்பளம் பெற்றார். அது ஜாக்கி சானுக்குப் பிறகு ஆசியாவில் இரண்டாவது அதிக சம்பளம் பெற்ற நடிகராக இவரை ஆக்கியது.[79][80][81]

"61 வயதில், ஆண்டின் மிகவும் வெற்றிகரமான திரைப்படம் ஒன்றில் நட்சத்திரமாக நடிக்கிறார், தெற்கில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்? இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி சொல்லவேண்டியது ஏதாவது மீதம் இருக்கிறதா? சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவியல் புனைகதை எந்திரன் மூலம் மீண்டும் தான் ஒரு மிடாஸ் டச் உள்ள நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். இவர் ஒரு லட்சியமுள்ள விஞ்ஞானி, ஒரு அப்பாவி ரோபோ மற்றும் உலகை அழிக்க நினைக்கும் ஒரு தீய ஆன்ட்ராய்ட் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் […] இவர் மாதங்களுக்கு இவரைப் பற்றியே பேசும்படி அத்தகைய தன்னம்பிக்கையுடன் செய்துள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கலாம், ஆனால் இவர் நடிக்கும்போது, அனைத்தையும் அப்படியே நின்றுபோகச் செய்கிறார்."
——எந்திரனில் ரஜினிகாந்தின் நடிப்பு பற்றி ரெடிஃப்.காம்[82]
இவர் மீண்டும் பி. வாசு இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்தார். இது மலையாளப் படமான கத பறயும் போலின் மறு ஆக்கம் ஆகும். இது தெலுங்கிலும் ஒரே நேரத்தில் கதாநாயகடு என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் இவர் ரஜினிகாந்தாகவே, ஒரு இந்திய சினிமா நட்சத்திரமாக மற்றும் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு சிறந்த நண்பராக ஒரு நீட்டிக்கப்பட்ட கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ரஜினிகாந்தின் கூற்றுப்படி, இப்படம் சற்றே இவரது ஆரம்ப வாழ்க்கையை விவரித்தது.[83] எனினும் இந்தப் படம் வணிகரீதியாகச் சரியாகப் போகவில்லை.[84] குசேலன் பட இழப்பைச் சரிசெய்ய ரஜினிகாந்தும் தான் பிரமிட் சாய்மீரா பட நிறுவனத்துடன் மீண்டும் பணியாற்றுவேன் என்று கூறினார்.[85][86]


எந்திரன் (2010) படப் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் அறிவியல் புனைகதைத் திரைப்படமான எந்திரனில் பணியாற்றினார்.[87] இந்தப் படம் அதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரான இந்தியத் திரைப்படம் என்ற சிறப்புடன் 2010ல் உலகளவில் வெளியிடப்பட்டது. இறுதியில் அந்நேரத்தில் இந்தியாவின் இரண்டாவது மிக அதிக வசூல் செய்த படமானது.[88][89][90] இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் 45 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.[91] இப்படத்தின் வெற்றி காரணமாக, இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத், சினிமாவின் வியாபாரத்தையும் மற்றும் அதன் வெற்றிக் கதையையும் பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு வழக்குப் படிப்பாக தற்காலத் திரைப்படத் தொழில்: ஒரு வியாபார முன்னோக்கு என்று அழைக்கப்படும் முதுகலைப் பட்டதாரி தேர்வு மேலாண்மை படிப்பில் இத்திரைப்படத்தைப் பயன்படுத்தியது. இப்படிப்பு முத்து படத்தையும் ஆய்வு செய்யும்.[92]

உடல்நலக்குறைவு மற்றும் திரும்புதல் (2011–தற்போது) தொகு
ஜனவரி 2011ல் ரஜினிகாந்த் ரானா படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படம் சவுந்தர்யா ரஜினிகாந்தால் தயாரிக்கப்பட்டு கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்படுவதாக இருந்தது.[51] 29 ஏப்ரல் 2011 அன்று படத்தின் பிரதான புகைப்படம் எடுக்கும்போது, இவர் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு லேசான உணவுவழி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். இது வாந்தி, நீரிழப்பு மற்றும் சோர்வுக்கு வழிவகுத்தது.[93] இவர் ஒரு நாள் புனித இசபெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார்.[94] ஐந்து நாட்கள் கழித்து, மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[95] இவருக்கு மூச்சுக்குழல் அழற்சி ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒரு சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்தார்.[96] மருத்துவமனையில் இருந்து வெளியேறிய தேதி குறித்தும் மற்றும் ரஜினிகாந்தின் உடல்நலம் சீர்குலைந்து விட்டதாகவும் பல முரண்பட்ட அறிக்கைகள் வெளியாயின.[97] அவரது கடைசி வெளியேற்றத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து, ரஜினிகாந்த் 16 மே 2011 அன்று ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடர் சுவாச மற்றும் இரைப்பை சிக்கல்களுக்காக அனுமதிக்கப்பட்டார்.[98] ரஜினிகாந்த் நிலையான நிலையில் இருந்தார் மற்றும் சிகிச்சைக்கு நேர்மறையான பதிலை காட்டினார் என்று மருத்துவமனை கூறியது.[97] இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று பரவலாக தகவல்கள் வெளியாயின. இது பின்னர் தனுஷால் மறுக்கப்பட்டது.[99]

21 மே 2011 அன்று, ஐஸ்வர்யா, தான் மற்றும் ரஜினிகாந்த் மருத்துவமனை வார்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.[100] மருத்துவமனை அங்கீகரிக்கப்படாத பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தியது.[101] ரஜினிகாந்தின் சகோதரர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட், திடீர் உடல்நலக்குறைவானது விரைவான எடை இழப்பு, உணவு மாற்றங்கள், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தலை நிறுத்தியது ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தத்தால் ஏற்பட்டதாகக் கூறினார்.[102] ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு 4 நிமிட டிஜிட்டலில் பதிவு செய்த குரல் செய்தியில் ரசிகர்களுக்கு உரையாற்றிய பின்னர், ரஜினிகாந்த், அமிதாப் பச்சனின் ஆலோசனையின் படி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் 21 மே 2011 அன்று பயணித்தார். அங்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நெப்ரோபதிக்கு மேலும் சிகிச்சை பெறச் சென்றார்.[103][104] மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்ற பிறகு, இறுதியாக ஜூன் 15, 2011 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் மீண்டும் தொடர்ந்து இருந்தார். 13 ஜூலை 2011 அன்று சென்னை திரும்பினார்.[105][106]

இவர் திரும்பிய பிறகுரானா படத்தை மீண்டும் தொடங்குவதற்கு பல முயற்சிகள் தோல்வியடைந்த போதிலும், ரஜினிகாந்த் தனது எந்திரன் பாத்திரமான, சிட்டியாக, பாலிவுட் அறிவியல் புனைகதை படமான ரா ஒன்னில் (2011) கௌரவத் தோற்றத்தில் தோன்றினார்.[107] நவம்பர் 2011 இல், ரானா கைவிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக கோச்சடையன் என்கிற புதிய படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.[108] கோச்சடையன் 2014ல் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[109] கோச்சடையன், மற்றும் 2012ல் சிவாஜியின் முப்பரிமாண வெளியீடு,[110] ஆகியவை ரஜினிகாந்தை உலக சினிமாவின் நான்கு வெவ்வேறு வடிவங்களில் தோன்றிய முதல் இந்திய நடிகராக்கியது. அவ்வடிவங்கள் கருப்பு வெள்ளை, வண்ணம், முப்பரிமாணம் மற்றும் மோஷன் கேப்சர்.[111] கோச்சடையன் முடிந்த பிறகு, ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமாருடன் அடுத்த படமான லிங்காவிற்குத் தயாரானார்.[112][113] இவரது பிறந்தநாளான டிசம்பர் 12, 2014 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.[114] இருவிதமான விமர்சனங்களையும் பெற்றது.[115] ரஜினிகாந்தின் அடுத்த படம் இயக்குனர் பா. ரஞ்சித்தின் கபாலி. இது எஸ். தாணு தயாரிப்பில் ஜூலை 2016ல் வெளியானது.[116] பா. ரஞ்சித்தின் மற்றொரு படமான காலா 2018 ஜூன் 7 ஆம் தேதி தனுஷ் தயாரிப்பில் வெளியானது.[117] எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 நவம்பர் 29, 2018ல் வெளியாக இருக்கிறது.[118]

பாபா படம் சர்ச்சை தொகு
2002 ஆம் ஆண்டில் வெளியான பாபா படத்தில் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. அந்த காட்சியை நீக்கக்கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் ரஜினிகாந்த் இந்த காட்சியை நீக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான அன்று திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர், இதனால் பாமகவினருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ரஜினிகாந்த் ரசிகர்கள் தாக்கப்பட்டனர்.[119]

இதை மனதில் கொண்டு 2004- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்ய உத்தரவிட்டார் ரஜினிகாந்த். ஆனால் அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிலிருந்து ரஜினிகாந்த் அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருந்தார்.[120][121]

அரசியல் தொடர்பு தொகு
1990களில் ரஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரஜினிகாந்த் 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார்.

சோ. இராமசாமி போன்ற அரசியல் விமர்சகர்கள் ரஜினிகாந்த் அவரது புகழ் மற்றும் ரசிகர் தளம் ஆகியவற்றை மட்டுமே வைத்து இந்திய அரசியலில் வெற்றிகரமாக வர சாத்தியம் உள்ளதாகக் கூறினர். 1996 தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள இவரது பல ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு, குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்குப் போட்டியிட அழைப்பு விடுத்தனர். ரஜினிகாந்த் டிசம்பர் 31, 2017 அன்று தன் அரசியல் வருகையை அறிவித்தார். தான் ஆரம்பிக்கப்போகும் அரசியல் கட்சி 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தன் கட்சி ராஜினாமா செய்யும் என்றும் கூறினார்.[122]

புத்தகங்கள் தொகு
ரஜினி சகாப்தமா? என்ற தலைப்பில் ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து ஜெ. ராம்கி எழுதிய புத்தகம் 2005ல் வெளியானது
ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில் இவரது படங்களில் உள்ள 30 முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம்.[123] இப்புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
பாட்சாவும் நானும் என்னும் நூலில் ரஜினியை சந்தித்தது முதல் ரஜினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
ரஜினி இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான ரஜினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன.
அரசியல் பிரவேசம் தொகு
ரஜினிகாந்த் 2017 திசம்பர் 31 அன்று, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் காலம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு முடிவெடுத்து சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார்.[124]

நடித்த திரைப்படங்கள் தொகு
முதன்மைக் கட்டுரை: ரஜினிகாந்து திரை வரலாறு
விருதுகள் தொகு
இந்திய நடுவண் அரசின் விருதுகள் தொகு
பத்ம பூஷன் விருது, 2000[125]
பத்ம விபூசன் விருது, 2016
தமிழக அரசின் விருதுகள் தொகு
1984 ஆம் ஆண்டு கலைமாமணி விருது
1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருது
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி தமிழக அரசு திரைப்பட விருதுகள்
1978 முள்ளும் மலரும் காளி தமிழ் தமிழக அரசு திரைப்பட விருதுகள்
1982 மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான் தமிழ் தமிழக அரசு திரைப்பட விருதுகள்
1984 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1994 முத்து முத்து,
எஜமான் தமிழ் தமிழக அரசு திரைப்பட விருதுகள்
1999 படையப்பா ஆறுபடையப்பன் தமிழ் தமிழக அரசு திரைப்பட விருதுகள்
2005 சந்திரமுகி டாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன் தமிழ் தமிழக அரசு திரைப்பட விருதுகள்
2007 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் தமிழ் தமிழக அரசு திரைப்பட விருதுகள்
பிலிம்பேர் விருதுகள் தொகு
வருடம் படங்கள் வகை பலன்
1977 புவனா ஒரு கேள்விக்குறி சிறந்த திரைப்படம் வெற்றி
1978 முள்ளும் மலரும் சிறந்த திரைப்படம் வெற்றி
1979 ஆறிலிருந்து அறுபது வரை சிறந்த திரைப்படம் வெற்றி
1982 எங்கேயோ கேட்ட குரல் சிறந்த திரைப்படம் வெற்றி
1984 நல்லவனுக்கு நல்லவன் சிறந்த நடிகர் வெற்றி
1985 ஸ்ரீ ராகவேந்திரா சிறந்த திரைப்படம் வெற்றி
1991 தளபதி சிறந்த நடிகர் வெற்றி
1992 அண்ணாமலை சிறந்த நடிகர் வெற்றி
1993 வள்ளி சிறந்த கதாசிரியர் வெற்றி
1995 பாட்ஷா, முத்து சிறந்த நடிகர் வெற்றி
ஆனந்த விகடன் விருது தொகு
2017 ஆம் ஆண்டு கபாலி பட நடிப்புக்காக 'சிறந்த நடிகர்' விருது

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வெள்ளி, 22 நவம்பர், 2019

கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் நினைவு தினம் நவம்பர் 22.


கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் நினைவு தினம் நவம்பர் 22.

*06/07/1930 — 22/11/2016*

 பாலமுரளி கிருஷ்ணா சில குறிப்புகள் .

தந்தை பட்டாபிராமைய்யா - இசை கலைஞர், இசை ஆசான்

தாய் சூர்யகாந்தம் - வீணை இசை கலைஞர்

இசை ஆசான் - பாருபள்ளி ராமக்ரிஷ்ணய்யா பந்துலு

இசை அரங்கேற்றம் - எட்டு வயதில்

வாசிக்கத் தெரிந்த வாத்தியங்கள் - வயோலா, வயலின், மிருதங்கம், கஞ்சிரா

வயலின் கலைஞராக அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்யநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், ஜி என் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு பக்க வாத்தியம் வாசித்துள்ளார்.

வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர்

திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்

இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர்

பின்னணி பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றவர்

72 மேளகர்த்தா ராகங்களிலும்  கிருதிகளை உருவாக்கி உள்ளார்

பண்டிட் பீம்சென் ஜோஷி உள்ளிட்ட பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் இணைந்து ஜுகல் பந்தி

பிரபல நடிகர் கமல்ஹாசன், பாடகர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இசை கற்றுத்  தந்த ஆசான்

பிரபலமான தமிழ் பாடல்கள்

தங்க ரதம் வந்தது வீதியிலே-கலைக்கோவில் திரைப்படத்தில்

ஒரு நாள் போதுமா -திருவிளையாடல்

புத்தம் புது மேனி - சுப தினம்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்- கவிக்குயில்

ஆயிரம் கோடி காலங்களாக- கவிக்குயில்

மௌனத்தில் விளையாடும் -நூல் வெளி

தாயே மூகாம்பிகேயே - தாய் மூகாம்பிகை (எம் எஸ் வி, சீர்காழி உடன் திரைப்படத்தில் தோன்றி  பாடியது )

அருட்ஜோதி தெய்வம் -திசை மாறிய பறவைகள்

பாஞ்சாலி கதறுகிறாள் - சிகரம்

ரகுவரா நின்னு - இசை பாடும் தென்றல்

வித்தியாசமான பாடல் -புரட்சித் தலைவருக்காக குன்னக்குடி இசையில் நவரத்தினம் திரைப்படத்தில்  குருவிக்கார எனத் தொடங்கும் பாடல்

இறுதி வரை சுருதி விலகாத சாரீரத்தை கொண்டிருந்தவர்

சுமுகம், மஹதி ஆகிய நான்கு ஸ்வரங்களை கொண்ட ராகங்கள், சர்வ ஸ்ரீ , ஓம் காரி ஆகிய மூன்று ஸ்வரங்களை கொண்ட ராகங்கள், பிரதி மத்யமாவதி உள்ளிட்ட ராகங்கள் இவர் உருவாக்கியவை.

இறை அருளால் இசை தந்த மகான். திருவிளையாடல் படத்தில் கவியரசர் இவர் பாடுவதாக எழுதிய வரிகள்- கானடா....இசை தெய்வம் நானடா ...மிகையில்லைகர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா
. பாரம்பரிய
இசைக்கு தனிப் பரிமாணம்
கொடுத்தவர்
பாலமுரளிகிருஷ்ணா. மகிழ்வின்
பாவனைகளைப் பதிவிடுவதில் அவர்
தனித்திறமை கொண்டவர். துயரும்
அவருடைய குரலில் குழைவைக்
கொண்டிருந்தது....'நீ தய
ராதா...'  'சின்ன கண்ணன் அழைக்கிறான் ....'அவருடைய குரலில் சிறப்புப்
பெற்றது....

   இவருக்கு வயது 86. பத்ம விபூஷன், செவாலியே விருது பெற்றுள்ளார்.2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். திரைப்படபாடல்களும் பாடியுள்ளார்.இளையராஜாவின் இசையில் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலையும் பாடியுள்ளார். பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

புதன், 6 நவம்பர், 2019

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 07.


நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 07.

இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 7, 1954

பிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா

தொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியா

 ஆரம்ப கால வாழ்க்கை

கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.

இல்லற வாழ்க்கை

1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலக வாழ்க்கை

தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.

1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.

அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

இலக்கிய படைப்புகள்

தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.

பொதுநலப் பணிகள்

‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.

விருதுகள்

சிறந்த நடிப்பிற்காக மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ வழங்கப்பட்டது.
18 முறை  ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.
1990ல், ‘பத்மசிறீ விருது’ பெற்றார்.
2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
முக்கியமான திரைப்படங்கள்

கமல்ஹாசன் அவர்களின், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களுள் சில…

களத்தூர் கண்ணம்மா
16 வயதினிலே
மூன்றாம் பிறை
நாயகன்
அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காமராஜன்
குணா
மகாநதி
தேவர் மகன்
இந்தியன்
அவ்வை சண்முகி
ஆளவந்தான்
தெனாலி
தசாவதாரம்


சுவாரஸ்ய தகவல்கள்
1981 ஆம் ஆண்டு வெளியான ராஜபார்வை கமல்ஹாசனின் 100 வது திரைப்படம். இத்திரைப்படம் மூலம் திரைப்பட தயாரிப்பிலும் அறிமுகமானார். பார்வையற்றோர் குழுவின் வயலின் வாசிப்பு அவருக்கு பிலிம்பேர் விருது பெற்றுதந்தது.

இவர் ஒரு நாத்திகர் ஆவார்.

2018 பிப்ரவரியில் தனது கட்சி மற்றும் அதன் வழிகாட்டு கொள்கைகளை அறிவித்த கமல், தன்னுடைய அரசியல் அபிலாஷைகளை உண்மையாக்க இனி நடிக்கபோவதில்லை என அறிவித்தார்.

தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றை "பவர் ப்ரோக்கர்கள்" என விமர்சித்த கமல், அவர்களுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். தனது அரசியல் கட்சி மூலம் ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் உறுதியளித்தார்.இது அவரது கட்சிக்கு வலுவான அடித்தளமாக இருக்கும் என பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அரசியல் காலவரிசை
2018
பிப்ரவரி 2018 ல், கமல் ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
முந்தைய வரலாறு
1972
கல்விக்காக திரைப்படத்துறையில் ஒன்பது ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய கமல்ஹாசன், அடுத்த நான்கு தசாப்தங்களாக பல திரைப்படங்களில் நடித்து, நமது காலக்கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார்.
1960
கமல்ஹாசன் தனது 4 வயதில் களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தின் மூலம் திரைவாழ்வை துவங்கினார். ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக மேலும் ஐந்து திரைப்படங்களில் நடித்தார் .

செவ்வாய், 1 அக்டோபர், 2019

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம் அக்டோபர் 01,1927


நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம் அக்டோபர் 01,1927.

#Sivaji_Ganesan

சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலும் தகவல் பெற, அவரது இந்த வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: 1 அக்டோபர் 1927

பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: 21 ஜூலை 2001

தொழில்: நடிகர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

ஆரம்பகால வாழ்க்கை

சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.

திரையுலக வாழ்க்கை:

திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.

தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.



அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை

அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகள்:

1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

1966 – பத்ம ஸ்ரீ விருது

1984 – பத்ம பூஷன் விருது

1995 – செவாலியே விருது (Chevalier)

1997 – தாதா சாகேப் பால்கே விருது

1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144