திங்கள், 20 பிப்ரவரி, 2017

நடிகர் எம். ஆர். ராதா பிறந்த தினம் பெப்ரவரி 21 , 1907.




நடிகர் எம். ஆர். ராதா பிறந்த தினம் பெப்ரவரி 21 , 1907.
எம். ஆர். ராதா ( பெப்ரவரி 21 , 1907 –
செப்டம்பர் 17 , 1979 ) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.
பிறப்பு
எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு
சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.
சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.
குடும்பம்
நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார். அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான். பின்னர் தனலெட்சுமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கீதா என்னும் இலங்கைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் மகன்களான
எம்.ஆர்.ஆர்.வாசு , ராதாரவி, மகள்களான
ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.
எம். ஜி. ஆர். கொலை முயற்சி
முதன்மை கட்டுரை: ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967
1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா
1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார். அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன் -
சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு
திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை ,
ரத்தக்கண்ணீர் , லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக
கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மு. க. முத்து நடிப்பில் வந்த
சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975 -ல்
இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக
ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு
மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.
அதன்பின் சிங்கப்பூரிலும்
மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17 -ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
நடிப்பு
ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937 -ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு
1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.
பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து
1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக
ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது ' இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.
எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.
அரசியல் வாழ்வு
துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும், பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு
திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார். காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார். இவரது
அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
தனது சீர்திருத்தக் கருத்துக்களையும்,
பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.
நடித்த படங்கள்
எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:
ராசசேகரன்
பம்பாய் மெயில்
ரத்தக்கண்ணீர்
ஆயிரம் ரூபாய்
கை கொடுத்த தெய்வம்
பாவ மன்னிப்பு
சித்தி
புதிய பறவை
பலே பாண்டியா
பெற்றால்தான் பிள்ளையா
தாய்க்குப்பின் தாரம்
குமுதம்
கற்பகம்
தாயை காத்த தனயன்
பாகப்பிரிவினை
பணம் பந்தியிலே
நல்லவன் வாழ்வான்
எழுதிய நூல்கள்
ராமாயணத்தை தடை செய் (நூல்)
ராமாயணமா?கீமாயணமா?
இவற்றையும் பார்க்கவும்
எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967
......................................................................
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான ' எம்டன் ' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!
அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!
சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. ' நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம்
' நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான் ' என்பார்!
ராதா நடித்த முதல் படம் ' ராஜசேகரன்' (1937),
கடைசிப் படம் ' பஞ்சாமிர்தம் ' (1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!
' உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் '
என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!
ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!
ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ' நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்? ' என்று கேட்டார்!
நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். ' நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள் ' என்று அதில் எழுதிவைப்பார்!
எம்.ஜி.ஆரை ' ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா ' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!
இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!
என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ' நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும் ' என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!
எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. ' நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? ' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!
நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது!
' அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்... நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', ' ஊருக்கு ஒரு லீடர்... அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்.... நான் சென்ஸ்' - இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!
ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம் ' என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். ' மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம் ' என்று விளம்பரம் கொடுத்தார்!
' நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்? '
என்று கேட்டபோது. ' எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் ' என்றார்!
ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. ' அண்ணாவின் அவசரம் ', ' ராமாயணமா? கீமாயணமா? ' என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பிவை!
ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!
மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி ' என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர். ' நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் ' என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!
'' திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் '' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!
தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். '' போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா ''
என்பது அவரது அழுத்தமான கருத்து!
விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். ' ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால ஏத்துக்கிறேன் ' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!
' மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை'
என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!
'' சுட்டாள்.... சுட்டான்.. சுட்டேன் '' என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது!
'' தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும் '' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக