செவ்வாய், 17 ஜனவரி, 2017

இயக்குனர் வீணை எஸ். பாலச்சந்தர் பிறந்த தினம் ஜனவரி 18 .


இயக்குனர் வீணை எஸ். பாலச்சந்தர் பிறந்த தினம் ஜனவரி 18 .

எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர் (Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். தான் இயக்கிய திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.

குடும்பமும் இளமையும்

பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம் வட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் கிராமம் ஆகும். தந்தை சுந்தரம் ஐயர் சென்னைக்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் மைலாப்பூரில் வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார். சென்னையிலேயே பாலச்சந்தர் பிறந்தார். பாலச்சந்தரின் அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.

தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். கஞ்சிரா பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் வீணை, தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா, தில்ருபா, சித்தார் மற்றும் செனாய் இசைக்கருவிகளை ஆசான் எவரும் இன்றி இசைக்கக் கற்றார்.

பாலச்சந்தர் 1952-ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.
பணிவாழ்வு

தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் சிதார் இசைப்பதில் தனிக் கச்சேரி நடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராக பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியத் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது[1].கருநாடக இசை தவிர இந்துத்தானி இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

திரைப்படங்கள்

1934 ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் சீதா கல்யாணம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை சனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: தேவகி (1951), ராஜாம்பாள் (1951 திரைப்படம்), ராணி (1952), இன்ஸ்பெக்டர் (1953), பெண் (1954), கோடீஸ்வரன் (1955), டாக்டர் சாவித்திரி (1955) மற்றும் மரகதம் (1959).

திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். இது நிஜமா (1948), என் கணவர் (1948), கைதி (1951), அவனா இவன்? (1962), பொம்மை (1964) மற்றும் நடு இரவில் (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளிலும் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.

எதி நிஜம் (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

விருதுகள்

    சங்கீத நாடக அகாதமி விருது, 1977
    சங்கீத கலாசிகாமணி விருது, 1982, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி


திரைப்படங்கள்


ஆண்டு     திரைப்படம்     மொழி     தயாரிப்பு     குறிப்பு
1934     சீதா கல்யாணம்     தமிழ்     பிரபாத் பிலிம் கம்பனி     நடிகர்
1941     ரிஷ்யசிருங்கர்     தமிழ்     தமிழ்நாடு டாக்கீசு     நடிகர்
1942     ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்     தமிழ்     கந்தன் & கம்பனி     நடிகர்
1948     இது நிஜமா     தமிழ்     கே. ஜி. புரொடக்சன்சு     நடிகர், துணை இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர்
1948     என் கணவர்     தமிழ்     அஜித் பிக்சர்சு     நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தொகுப்பாளர், பாடகர்
1951     கைதி     தமிழ்         நடிகர் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர்
1951     தேவகி     தமிழ்     கணபதி பிக்சர்சு     நடிகர்
1951     ராஜாம்பாள்     தமிழ்     அருணா பிலிம்சு     நடிகர், எம். எஸ். ஞானமணியுடன் இணைந்து இசையமைப்பு
1952     ராணி     தமிழ்     ஜுபிட்டர் பிக்சர்சு     நடிகர்
1953     இன்ஸ்பெக்டர்     தமிழ்         நடிகர்
1954     அந்த நாள்     தமிழ்     ஏவிஎம்     இயக்குனர்
1954     பெண்     தமிழ்     ஏவிஎம்     நடிகர்
1954     சங்கம்     தெலுங்கு     ஏவிஎம்     நடிகர்
1955     கோடீஸ்வரன்     தமிழ்     சிறீ கணேஸ் மூவிடோன்     நடிகர்
1955     டாக்டர் சாவித்திரி     தமிழ்     அருணா பிலிம்சு     நடிகர்
1956     எதி நிஜம்     தெலுங்கு     பிரதீபா பிலிம்சு     இயக்குனர்
1958     பூலோக ரம்பை     தமிழ்     அசோகா பிக்சர்சு     கே. ராம்நாத்தின் இறப்புக்குப் பின்னர் டி. யோகானந்துடன் இணைந்து இயக்குனர்
1958     அவன் அமரன்     தமிழ்     தி பீப்பில்சு பிலிம்சு     இயக்குனர்
1959     மரகதம்     தமிழ்     பக்சிராஜா ஸ்டூடியோஸ்     நடிகர்
1962     அவனா இவன்     தமிழ்     எஸ். பி. கிரியேசன்சு     நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர்
1964     பொம்மை     தமிழ்     எஸ். பி. கிரியேசன்சு     நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர்
1965     நடு இரவில்     தமிழ்     எஸ். பி. கிரியேசன்சு     தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர்

மறைவு

பாலச்சந்தர் 1990, ஏப்ரல் 15 இல் சத்தீசுக்கர் மாநிலத்தில் பிலாய் நகரில் கச்சேரி நடத்தச் சென்றிருந்த போது காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக