புதன், 24 மே, 2017

பாடகர் டி. எம். சௌந்தரராஜன் நினைவு தினம் மே 25 , 2013 .



பாடகர் டி. எம். சௌந்தரராஜன் நினைவு தினம் மே 25 , 2013 .

டி. எம். சௌந்தரராஜன் ( மார்ச் 24 , 1923 - மே 25 , 2013 ) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். சௌந்தரராஜன் 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன்
காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது
கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி , தேவகி , சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.
சிறப்புகள்
இவர் சிவாஜி , எம்.ஜி.ஆர் , ஜெமினி ,
ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் ,
முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்[1] .
நடிகராக
1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது.
செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள்
மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )
வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )
மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 )
ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )
ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 )
மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )
யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )
சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959)
உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 )
நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 )
இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 )
நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 )
நினைத்து நினைத்து ( சதாரம் 1956 )
முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )↑
பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )
சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )
சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 )
முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 )
டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே )
முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை )
கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் )
என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் )
வெண்ணிலா வானில் ( மன்னிப்பு )
வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை )
கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் )
மெல்ல மெல்ல அருகில் ( சாரதா )
குயிலாக நான் ( செல்வமகள் )
மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் )
ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )
பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் )
முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )
கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )
ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் )
எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )
திருடாதே பாப்பா ( திருடாதே )
காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )
தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )
ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )
ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )
மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் )
கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் )
அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா )
அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி )
அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் )
பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு )
நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )
அஹா மெல்ல நட ( புதிய பறவை )
அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் )
யார் அந்த நிலவு ( சாந்தி )
சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே )
பொன்மகள் வந்தாள் ( சொர்கம் )
என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் )
உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் )
சத்தியம் இது ( வேட்டைக்காரன் )
சத்தியமே ( நீலமலைத் திருடன் )
நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி )
எங்கே நிம்மதி ( புதிய பறவை )
தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி )
சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் )
நண்டு ஊறுது ( பைரவி )
அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் )
உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் )
எங்கே அவள் ( குமரிக் கோட்டம் )
ஒரு தரம் ( குமரிக் கோட்டம் )
யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா )
அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாகாரன் )
மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் )
ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )
உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )
அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )
அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )
ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )
முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை )
மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் )
நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் )
மலர் கொடுத்தேன் ( திரிசூலம் )
கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் )
அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் )
நீயும் நானும் ( கெளரவம் )
தெய்வமே ( தெய்வ மகன் )
யாருக்காக ( வசந்த மாளிகை )
நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )
பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )
வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )
பெற்ற விருதுகள்
பத்மசிறீ
கலைமாமணி விருது
மறைவு
இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் சென்னையில் காலமானார்.



தெய்வப் பாடகர் ‘டி.எம்.எஸ்’ அவர்களின் பிறந்த தினம் தெய்வப் பாடகர் ‘டி.எம்.எஸ்’ அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.
‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர். பின்னணித் துறையில், ‘டி.எம்.எஸ்’ மற்றும் ‘பி.சுசீலா’ அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டாக்டர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: மார்ச் 24, 1922
பிறந்த இடம்: மதுரை, தமிழ்நாடு, பிரிட்டிஷ் இந்தியா
தொழில்: பாடகர், நடிகர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி, 1922 ஆம் ஆண்டில், மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர், வேத நூல்களைக் கற்று அறிஞராகத் திகழ்ந்தவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர், காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற அவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் கவனித்தார். ஆகவே, அவரது அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ். அவர்கள் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.
திரையுலக வாழ்க்கை
1950ல் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், ‘மந்திரி குமாரி’ என்ற படத்தில், ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப் பாடினார். பிறகு ‘தேவகி’, ‘சர்வாதிகாரி’ போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. 1951ல் வெளியான ‘தேவகி’ என்ற படத்தில் வந்த ‘தீராத துயராலே’ என்ற பாடலைப் பாடி, நடிக்கவும் செய்திருந்தார். 1952ல், ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார். இதற்குப் பின், சில ஆண்டுகள் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்ததால், கே.வி. மகாதேவனுடன் இணைந்து பக்திப் பாடல்கள் பாடினார். 1955ல் வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், ஆர். சுதர்சனம் அவர்களின் படைப்பான இரண்டு டூயட் பாடல்களை, எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து பாடினார்.
இதற்கிடையில், சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின்னணிப் பாடிய சி.எஸ். ஜெயராமனுக்கு பதிலாக, டி.எம்.எஸ் அவர்களைப் பாட வைக்கும் நோக்கமாக மருதகாசி அவர்கள், அவரை இசையமைப்பாளார் ஜி. ராமநாதன் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘சிவாஜி கணேசன் அவர்களுடைய குரலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்துமா?’ என்று ஐயம் கொண்டார், இசையமைப்பாளார். ஆகவே, சிவாஜிக்கு, டி.எம்.எஸ்சை அறிமுகம் செய்து வைத்தார். ஒரிரண்டு சந்திப்புகளிலேயே, அவரது குரலைப் படித்த அவருக்கு, ‘சுந்தரி சௌந்தரி’ மற்றும் ‘ஏறாத மலைதனிலே’ என்ற பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலைப் போலவே, அவர் பாடியதால், மிகவம் மகிழ்ச்சி அடைந்த ஜி. ராமநாதன், அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாட வாய்ப்பு வழங்கினார். மேலும், அப்படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிப் பெற்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டி.எம்.எஸ் அவர்கள் மிகவும் பிரபலமானார். பின்னர், ஆர். ஆர். பிலிம்ஸ் தயாரிப்பான ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தில், ‘கொஞ்சும் கிளியானப் பெண்ணை’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பைக் கைப்பற்றினார், டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள், அவரது குரல் வளத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரது அடுத்த படமான ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் எழுதிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இந்தக் காலக்கட்டங்களில், இவருக்கு ‘வேடன் கண்ணப்பா’, ‘ரிஷி ஸ்ரிங்கார்’, ‘நீள மலைத் திருடன்’ போன்ற பாடங்களில் பாட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது. பின்னர், ‘குமுதம்’ என்ற படத்தில், எம்.ஆர்.ராதா அவர்களின் குரலைப் பின்பற்றும் விதமாக, ‘சரக்கு இருந்தா அவுத்து விடு’ என்ற பாடலை, அவரைப் போலவே பாடி அனைவரின் மனத்தையும் கவர்ந்தார். 1955 ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிவாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவருக்குப் பின்னணிப் பாடினார். 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை, மற்றும் 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவர்கள் இருவருக்கும், அவரே பின்னணிப் பாடி வந்தார். 1950 களில் இருந்து 1980 வரை, தமிழ்த் திரையுலகின் பின்னணித் துறையில், முடிசூடாமன்னனாகத் திகழ்ந்தார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2500 பக்திப் பாடல்களையும் பாடி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்து, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’ & ‘கவிராஜ காலமேகம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்த டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பெற்ற விருதுகளும், அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.
அவருக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் சில
2012 – ‘கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது’
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’ பெற்றார்.
“பாரத் கலாச்சார் ” விருது
“சவுராஷ்டிரா சமூக அங்கீகாரம்” விருது
வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி. ஆர் நினைவு விருது
வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது
‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.
1964 – “அறிஞர் அண்ணாத்வாரியா அங்கீகாரம்” பெற்றார்.
மலேசிய, சிங்கப்பூர், பிரஞ்சு, ஐக்கிய ராஜ்யம், கனடா, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், மற்றும் பெர்த்தில் வாழும் தமிழ் ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பல முறைப் பெற்றுள்ளார்.
மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் அவர்களிடமிருந்து தனிப்பட்ட பாராட்டுப் பெற்றார்.
இந்திய ஜனாதிபதிகளான டாக்டர் சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன், வி.வி.கிரி, ஆர் வெங்கட்ராமன், மற்றும் ஜெயில் சிங் போன்றோரிடமிருந்தும் தனிப்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில், சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மாகங்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தற்போது, அவர் தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள மந்தவளிப்பாக்கத்தில் வாழ்கிறார்.
மிகப் பிரபலமானப் பாடல்களில் சில
‘வசந்த முல்லை’ – சாரங்கதாரா
‘யாரடி நீ மோகினி’ – உத்தம புத்திரன்
‘முத்தைத்தரு’ – அருணகிரிநாதர்
‘பாட்டும் நானே’ – திருவிளையாடல்
‘வாழ நினைத்தால்’ – பலே பாண்டியா
‘கொடி அசைந்ததும்’ – பார்த்தால் பசி தீரும்
‘ஒளிமயமான எதிர்காலம்’ – பச்சை விளக்கு
‘மலர்களைப் போல் தங்கை’ – பாசமலர்
‘எத்தனை காலம்தான்’ – மலைக்கள்ளன்
‘திருடாதே பாப்பா’ – திருடாதே
‘காசேதான் கடவுளப்பா’ – சக்கரம்
‘தூங்கதே தம்பி’ – நாடோடிமன்னன்
‘பூ மாலையில்’ – ஊட்டி வரை உறவு
‘பொன்மகள் வந்தாள்’ – சொர்கம்
‘நிலவைப்பார்த்து வானம்’ – சவாளே சமாளி
‘எங்கே நிம்மதி’ – புதிய பறவை
‘அங்கே சிரிப்பவர்கள்’ – ரிக்சாகாரன்
‘ஏன் பிறந்தாய் மகனே’ – பாகப்பிரிவினை
‘உலகம் பிறந்தது எனக்காக’ – பாசம்
‘அதோ அந்த பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்
‘அன்று வந்ததும் அதே நிலா’ – பெரிய இடத்துப் பெண்
‘ஒரு ராஜா ராணியிடம்’ – சிவந்த மண்
‘மலர் கொடுத்தேன்’ – திரிசூலம்
‘தெய்வமே’ – தெய்வ மகன்
‘யாருக்காக’ – வசந்த மாளிகை
‘நான் ஆணையிட்டால்’ – எங்க வீட்டுப் பிள்ளை
காலவரிசை
1922: மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
1946: தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1946: ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தமானார்.
1952: ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார்.
1955: 1955ல், வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து இரண்டு டூயட் பாடல்களைப் பாடினார்.
1977: 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடினார்.
1995: 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடி வந்தார்.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.



‘கௌ ரவம்’ படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல... இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு...அப்புறம் சூட் பண்ணிக்கலாம்...”
Advertisement
எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் “என்னண்ணே ஏதாவது பிரச்னையா...சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா...? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறியிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்... காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.
Advertisement
உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.!
கவுரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா...” என்ற அந்த பாடலில் சிவாஜிக்கு சவால் தந்த டி.எம்.எஸ்க்கு தபால் தலைவெளியிட்டு கவுரவம் செய்திருக்கிறது மத்திய அரசு. கடந்த 30-ம் தேதி இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே.
தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். சவுந்தரராஜன், மதுரையில் 1923- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். தன் திறமையை மெருகேற்றிக்கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில் கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். “டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ” என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது. புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி செய்ய வந்திருந்தார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன் ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச் சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல் பாடிக் காண்பித்தான் சிறுவன். “சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர். திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.
சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடினார்.
மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின் சகாப்தம் துவங்கியது.
எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல...அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.
உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்...ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.
பாடல்களை பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின் இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெறும் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன் தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ் ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை.
மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல . திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.
“டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்...தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.
ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ்.
கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார்.
அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், “அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா” என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.
“வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்” என புகழ்ந்தார்.
“ லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும் டி.எம்.எஸ் சுருதி விலகி பாடமாட்டார். அதுதான் டி.எம்.எஸ்” என இன்னும் ஒரு படிமேலாக டி.எம்.எஸ் பற்றி எம்.எஸ்.வி குறிப்பிட்டார் ஒருசமயம்.
உண்மைதான், இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர் டி.எம்.எஸ். தான் இசையமைத்த ஒரு படத்தில் தன் இருமகன்கள் இசையுலகில் தலையெடுத்த நேரத்திலும் பாடலின் சுவைக்காக அவர்களை தவிர்த்து மற்றொரு புகழ்பெற்ற பாடகர் திருச்சி லோகநாதனின் மகனான டி.எல்.மகராஜனை பாடவைத்தார். பாடகருக்கு புகழ் கிடைக்கும் பாடல் என்று தெரிந்தும் இசைக்கே முக்கியத்துவம் அளித்து வேறொருவரை பாடவைத்த அவரது பண்பு ஆச்சர்யமானது.
தமிழை அட்சர சுத்தமாக அழகாக உச்சரித்து தமிழுக்கு பெருமை சேர்ந்த டி.எம்.எஸ், தமிழை தாய்மொழியாக கொண்டவரல்ல என்பது ஆச்சர்யமான தகவல்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “செம்மொழியான தமிழ்மொழியாம்” என பாடியதுதான் இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். 3 தலைமுறையினரை தன் இனிய குரலால் மகிழ்வித்த 'மதுரை மாங்குயில்' டி.எம்.எஸ்ஸின் புகழ் தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும்.





டி.எம்.சௌந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
டி.எம்.எஸ்.... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!
· டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ் ’ என்றால், செளந்தரராஜன்: `எம் ’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி ’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா ’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!
· டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!
· மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.
· டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் `ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!
· மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஒடியது!
· டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.... ’ `உள்ளம் உருகுதய்யா முருகா ’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!
· டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய
`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் ’
இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!
· `அடிமை பெண் ’ படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம்.
`பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு. அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா! ’
· பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர்.
`இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா!
`பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ! ’ ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு ’ என்பார்!
· கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல். `இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது ’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!
· `நீராரும் கடலுடுத்த.. ’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன ’
என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!
· தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸீக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!
· `வசந்தமாளிகை ’ படத்தில் வரும்
`யாருக்காக ’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி)
வைக்கச் சொன்னார். `அதெல்லாம் வீண் வேலை ’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட
`எக்கோ எஃபெக்ட் ’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!
· வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் `யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு ’. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்தை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!
· காஞ்சிப் பெரியவர். புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி ’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!
· கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் `சாக வேண்டும்’ என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் `சாகவேண்டும் ’ என்பதை
`வாடவேண்டும் ’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!
· நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையவாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு. பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!
· எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி ஜெயலலிதா என அனைவைரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!
· `பாகப் பிரிவினை ’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து ’
பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!
· `நவராத்திரி ’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
· `பட்டினத்தார், `அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!
· மத்திய அமைச்சர் மு.க அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ் பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!
· தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)
· சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை.
· எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!




வாழ்க்கை வரலாறு ;
டி.எம்.சவுந்திரராஜன், 1922, மார்ச் 24ம் தேதி, மதுரையில் பிறந்தார். திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தார். 1946ம் ஆண்டு முதல், திரையுலகில், 60 ஆண்டு காலம் பணியாற்றினார். வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.
சிறு வயதில் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். பல ஆண்டுகள் கச்சேரியில் பாடியவருக்கு, 1950ம் ஆண்டு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. சுந்தரராவ் நட்கர்னியின் "கிருஷ்ண விஜயம்' படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகதேடி' என்ற பாடலை பாடினார். "தேவகி' என்ற படத்தில் பாடி, நடிக்கவும் செய்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள், அழியாப் புகழ் பெற்றவை. 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு' பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் "கலைமாமணி' உட்பட பல விருதுகளை பெற்றார்.
பட்டங்கள் ; இவரது திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர் போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...நீங்கிடாத துன்பம் பெருகுதே!
* ஏழிசை அரசருக்கு ரசிகர்கள் இசையாஞ்சலி
மதுரை : "இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாகும்...!,' என்ற வைரவரிகளுக்கு வர்ணம் பூசியவர். பாடல்களில், வார்த்தைகளுக்கு உயிர்வார்த்தவர். வசீகரக் குரலால் இசைப்பிரியர்களின் உள்ளங்களை வளைத்து, மனதில் குடிகொண்டவர். தேனருவி போல் செவிகளுக்கு விருந்தளித்து, இசையுலகில் கோலோச்சியவர்... அவர் ,"ஏழிசை அரசர்' டி.எம்.சவுந்திரராஜன். அவர் உயிர், இவ்வுலகை விட்டுப்பிரிந்திருக்கலாம். ஆனால், அவரது குரலோசை வானம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கும். காற்றோடு கலந்து, நம் காதுகளில் ரீங்காரமிடும். அவர் பாடிய பாடலை, பொழுதெல்லாம் முணுமுணுத்து கொண்டிருக்கும் ரசிகர்களிடம், அவர் பாடல்களில் பிடித்த பாடல் என்ன என்று கேட்டோம்.
ரசிகர்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை... இசையாஞ்சலியாக... பொழிந்தனர்.
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே
வந்ததே... நண்பனே
நா.மம்மது (இசை ஆராய்ச்சியாளர், மதுரை): கவிஞர்கள் எந்த உணர்வில் பாடல்கள் எழுதினரோ, அதே உணர்வில், பொருளை புரிந்து கொண்டு பாடக்கூடிய திறமையாளர். மிகச்சிறந்த உச்சரிப்பு, குரலிசை, குரல் அழுத்தம் இருக்கும். பாடும்போது சுரத்தை அவரே எழுதி பாடுவார். இதனால், ராகங்களை துல்லியமாக வெளிக்கொணர முடிந்தது.
"மருதநாட்டு இளவரசி'யில் "பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா...' (மோகனராகம்), "அம்பிகாபதி'யில் "சிந்தனை செய் மனமே...'(கல்யாணிராகம்), "தாரங்கதாரா'வில் "வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்...' (சாருகேசி ராகம்) பாடல்களை சிறந்த பண்களுக்கு (ராகம்) உதாரணமாக இன்றும் இசை விமர்சகர்கள், இசையமைப்பாளர்கள் குறிப்பிடுவதுண்டு.
பாடல்களை மட்டுமல்ல வசனத்தையும் பாடக்கூடியவர். "உயர்ந்த மனிதன்' படத்தில் "அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே', "செல்வம்' படத்தில் "அவளா சொன்னாள்... இருக்காது, அப்படி எதுவும் நடக்காது...நம்ப முடியவில்லை...' என வசனத்தில் அமைந்த சிரமமான பாடல்களை, ரசிக்கும்படி எளிதாக பாடியவர்.
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே...
எம்.பி.சக்தி(குடும்பத்தலைவி, மதுரை): ""அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. நண்பனே... நண்பனே... நண்பனே... இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே... அது ஏன்... ஏன்... நண்பனே, சட்டி சுட்டதடா... கை விட்டதடா, கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்ற பாடல்களை ஆயிரக்கணக்கான முறை கேட்டுள்ளேன். என் மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டிருப்பேன்.
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எல்.என்.சுப்பிரமணியன்(75 வயது ரசிகர், மதுரை): "உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை. எனக்காக்க உனையன்றி யாரும் இல்லை. முருகா... முருகா... முருகா...' என்ற டி.எம்.எஸ்.பாடலில் உயிரோட்டம் இருக்கும். இப்பாடலை எப்போது கேட்டாலும் அழுது விடுவேன். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அவர் இறக்கவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா
டி.கே.சரவணன்(வர்த்தகர், மதுரை): "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ...' மற்றும் "ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா... அவ உதட்டக்கடிச்சுக்கிட்டு அங்கே மெதுவா சிரிக்கிறா... சிரிக்கிறா...' என்ற பாடல்கள் தேன் வண்டு ரீங்காரம் இடுவதுபோல் செவிகளில் இன்றளவும் ரீங்காரமிடுகிறது. தேனினும் இனிய குரலோசை மன்னர் டி.எம்.எஸ்., குரல் சாகாது.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சாந்தி(குடும்பத்தலைவி, மதுரை): "ஆறுமனமே ஆறு. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு. இனும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே', என்ற பாடல் டி.எம்.எஸ்., இளைமை பருவத்தில் பாடியது. அந்தக்குரல் வேறொருவருக்கு இல்லை.
அச்சம் என்பது மடமையடா...
ரா.சொக்கலிங்கம் (கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர்):
மக்களிடம் உணர்வுகளை ஊட்டிய பாடல், "மன்னாதி மன்னன்' படத்திலுள்ள "அச்சம் என்பது மடமையடா'. "ஊட்டி வரை உறவு' படத்தில் தமிழ், ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பை எந்த வித கலப்புகளும் இல்லாமல் "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி' என்ற வரிகளால் வெளிநாட்டினரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பாடி மகிழவைத்தார்.
எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்த முதல்தர பாடல்களில் "நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு', என்ற தத்துவ பாடல், அவரின் புகழை பன்மடங்கு மக்களிடம் எடுத்துச் சென்றது. "பொன்னூஞ்சல்' படத்தில் உள்ள "ஆகாய பந்தலிலே' பாடல் அந்த காலத்தில் ஒலி நாடா விற்பனையில் முதலிடம் பிடித்தது சாதனையாக பேசப்பட்டது.
மதுரையும் - டி.எம்.எஸ்ஸூம்
மதுரை : மதுரையில் பிறந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். அவரையும், மதுரையையும் பிரிக்க முடியாது. பின்னணி பாடகருக்கு, முதல்முறையாக ரசிகர் நற்பணி மன்றம் அமைத்து மதுரையில் தான். அதுவும் டி.எம்.எஸ்.,சிற்கு தான்! மதுரை தெற்குமாசிவீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் - வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம்.சவுந்திரராஜன், பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம் போட்டார். சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்த டி.எம்.எஸ்., முதல் முறையாக 1946ல் வெளியான "கிருஷ்ண விஜயம்' என்ற சினிமாவில், ""ராதை என்னை விட்டு ஓடாதடி,'' என்ற பாடலை பாடி ரசிகர்களின் உள்ளங்களை பரவசப்படுத்தினார். முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது. அடுத்தடுத்து டி.எம்.எஸ்., பாடிய 15 ஆயிரம் பாடல்கள், இசை எனும் இமயமலைக்கு அதிபதியாக்கியது.
சென்னையில் வசித்து வந்தாலும். அவர், அடிக்கடி மதுரைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டார். மதுரை நரசிம்மபுரத்தில் முதல்முறையாக 1980ல் "அகில இந்திய டி.எம்.எஸ்., தலைமை நற்பணி மன்றம்' ஏற்படுத்தப்பட்டது. பின், இதே பகுதியில் 1986ல் "மதுரை நரசிம்மபுரம் பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.எஸ். ரசிகர் மன்றம்' உதயமானது. இச்சங்களின் தலைவர் எம்.பி.பாலன் கூறுகையில், ""பின்னணி பாடருக்கு முதல்முதலில் ரசிகர் நற்பணி மன்றம் வைத்தது நாங்கள் தான். இம்மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறோம். டி.எம்.எஸ்ஸின் 91வது பிறந்த நாள் விழாவை மதுரையில் நடத்த இருந்தோம். அவர், உடல் நிலை சரியில்லாததால் முடியாமல் போனது,'' என்றார்.
சவுராஷ்டிரா பள்ளியில் "வாக்கிங்' : தனலட்சுமி, சீனிவாசனை அடுத்து டி.எம்.எஸ்., பிறந்தார். இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். மதுரையில் டி.எம்.எஸ்., இருக்கும்போது சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாட்டில், கருணாநிதி தலைமையில், 2008ல் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சீனிவாசனின் பேரன் டி.எஸ்.ஆர்.மணிகண்டன், ""கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற தாத்தாவின் பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தான் சொல்வேன். எங்கள் பரம்பரையில் மூத்த அவர் இறந்து விட்ட செய்தியை கேட்டதும் துவண்டு விட்டோம். எனினும், அவரது குரல் வாழ்ந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.
டி.எம்.எஸ்ஸின் கடைசி நிகழ்ச்சி ;
டி.எம்.சவுந்திரராஜன் - சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். தந்தை உயிருடன் இருக்கும்போதே மகன் செந்தூரனுக்கு திருமணம் செய்ய வேண்டும், என பால்ராஜ் தீர்மானித்தார். இந்நிலையில் டி.எம்.எஸ்ஸூக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். சற்று உடல் நலம் தேறிய அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் செந்தூரான், விஜயலட்சுமி திருமணம் மே 22ல் நடந்தது. அதை டி.எம்.எஸ்., முன்நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
டி.எம்.எஸ் - சங்கீத மும்மூர்த்திகள் ; "சங்கீத மும்மூர்த்திகள்' என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கில முதல்எழுத்து "டி' "எம்' "எஸ்' என வரும். ""சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களை எனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்,'' என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.
சவுராஷ்டிரா மொழியில் கடைசி பாடல் ; "வாலிபர்கள் சுற்றிய உலகம்' என்ற சினிமா 2005ல் வெளியானது. இப்படத்தில் டி.எம்.சவுந்திரராஜனும், பி.சுசிலாவும் இணைந்து பாடினர். அதன் பின் சினிமாவில் டி.எம்.எஸ்., பாடவில்லை. எனினும், சவுராஷ்டிரா மொழியில் "கெட்டி விடோ' (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் ரசிகர் மன்றத் தலைவர் எம்.பி.பாலன் முயற்சியில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., சவுராஷ்டிரா மொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக