புதன், 26 ஏப்ரல், 2017

நடிகர் தி. க. சண்முகம் பிறந்த நாள் ஏபரல் 26.1912



நடிகர் தி. க. சண்முகம்  பிறந்த நாள் ஏபரல்  26.1912

திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர். நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர். ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய
தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.

பிறப்பும் கல்வியும்

சங்கரதாசு சுவாமிகளின் மாணவரும் நாடக நடிகருமான டி. எசு. கண்ணுசாமி பிள்ளை என்பவருக்கும் சீதையம்மாள் என்பவருக்கும் மூன்றாவது மகனாக திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்சந்தையில் 1912 ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தவர் தி. க. சண்முகம். தி. க. சங்கரன் (1904 – 1948.03.31), தி.க. முத்துச்சாமி ஆகிய இருவரும் இவருக்கு அண்ணன்மார் ஆவர். தி. க. பகவதி (1917 - ) இவருக்கு தம்பி ஆவார். சுப்பம்மாள் (1920 - ), காமாட்சி (1921 - ) ஆகியோர் இவருக்குத் தங்கைகள் ஆவர். இவர்கள் நால்வரை தமிழ்நாடக உலகம் டி. கே. எசு சகோதரர்கள் என அழைத்தது.
இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக
மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்.

நாடக வாழ்க்கை

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்
சங்கரதாசு சுவாமிகள் 1918 ஆம் ஆண்டில் மதுரையில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனத்தில் 1918ஆம் ஆண்டில் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி, தி. க. சண்முகம் ஆகிய மூவரும் அவர்தம் தந்தை கண்ணுசாமிபிள்ளையால் இளம் நடிகர்களாக இணைக்கப்பட்டனர். 1922ஆம் ஆண்டு ஆகத்து 3ஆம் நாள் இரவு அக்குழுவிலிருந்து அவர்கள் மூவரும் அவர்தம் தந்தையாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பால மனோகர சபையில்
தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட தி. க. சண்முகம் அவர் உடன்பிறந்தவர்களும் தெ. பொ. கிருட்டினசாமி பாவலர் நடத்திய பால மனோகர சபை என்னும் நாடகக் குழுவில் 1922 ஆகத்து 4ஆம் நாள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் விலகியதால் சங்கரதாசு சுவாமிகள் மனம்நொந்து இருப்பதாக அறிந்து, அக்டோபர் 15ஆம் நாள் பால மனோகர சபையிலிருந்து தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீண்டும் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்
1922 அக்டோபர் 16ஆம் நாள் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் மீண்டும் தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் இணைக்கப்பட்டார். [6] 1924ஆம் ஆண்டில் தி. க. பகவதியும் அக்குழுவில் இளம் நடிகராக இணைக்கப்பட்டார். இதற்கிடையில் தி.க.ச. உடன்பிறவியரின் தந்தை கண்ணுசாமி பிள்ளை இறந்ததால், தம் சிற்றப்பா, மாமா ஆகிய இருவரின் பாதுகாப்பில் வளர்ந்தனர். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் முதலாளிகளில் ஒருவரான சுப்பிரமணியபிள்ளையிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக 1925 பிப்ரவரி 15ஆம் நாள் அந்நாடகக்குழுவிலிருந்து தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் அவர்தம் பாதுகாவலர்களால் விலக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா தொடக்கம்
பின்னர் தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தவர்களும் தம் சிற்றப்பாவை உரிமையாளரென அறிவித்து 1925 மார்ச்சு 31ஆம் நாள், திருவனந்தபுரத்தில்
ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்னும் நாடகக் குழுவை உருவாக்கினர். அக்குழுவின் முதல்நாடகமாக “கோவலன்” என்னும் நாடகம் அந்நாளிலேயே அரங்கேற்றப்பட்டது. [8] அப்பொழுது எம். கந்தசாமி முதலியாரிடம் நடிப்பாசிரியராக இக்குழுவில் பணியேற்றார். அவரிடம் தி. க. சண்முகம் நாடக நுட்பங்களைப் பயின்றார்.
தேச பக்தி
வெ. சாமிநாத சர்மா எழுதிய இந்திய சுதந்திர போராட்ட நாடகம் பாணபுரத்து வீரன் இதை பிரித்தானிய அரசு தடை செய்யவே தி. க. சண்முகம் அவரது நாடகக் குழு "பாணபுரத்து வீரன் நாடகத்தை
தேச பக்தி என பெயர் சூட்டி இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் போராட்டம் நடந்தது போல பாணபுரத்துக்கும், ஈசானபுரத்துக்கும் இடையே நடக்கும் விடுதலைப்போரை அடிப்படையாக் கொண்டது- தேச பக்தி நாடகம்" வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரன் நாடகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து, இடை இடையே சில புதிய காட்சிகளையும், உணர்ச்சி மிகுந்த பாடல்கள், வசனங்களையும் எழுதிக் கொடுத்தது மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்கள் என தனது வாழ்க்கைக் குறிப்பில் கூறியுள்ளார்.
பாரதியின் பாடல்
பிரித்தானிய அரசு தடை செய்த "பாணபுரத்து வீரன் நாடகத்தை தேச பக்தி என பெயர் சூட்டி நாடகத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாது மகாகவி பாரதியின் "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்", "விடுதலை விடுதலை", ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே போன்ற தடை செய்யப்பட்ட தேச பக்திப் பாடல்களை தேச பக்தி நாடகத்தில் முதன்முதலாக பாடப்பட்டது.
முதற் கலைப்பு
1931ஆம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியதால், நாடகங்களுக்கான மதிப்புக் குறைந்தது. போதுமான வருவாய் கிடைக்கவில்லை. எனவே தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் 1932ஆம் ஆண்டில் தம் நாடகக்குழுவை ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் குத்தகைக்கு கோல்டன் கோவிந்தசாமி நாயுடு என்பவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவ்வொப்பந்தம் பதினோராம் மாதத்திலேயே முறிந்தது. தி. க. ச. உடன்பிறப்புகள் அந்நாடகக் குழுவை தற்காலிகமாகச் சில காலத்திற்குக் கலைத்தனர்.
தேவி பால சண்முகானந்த சபையில்
பின்னர் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவரின் தேவி பால சண்முகானந்த சபையில் தி. க. ச.வும் அவர் உடன்பிறந்தவர்களுடன் சென்று இணைந்தனர்.  சிறிது நாளில் தர்மராஜபிள்ளை சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனதால் அந்த நாடகக் குழுவை இவர்களே பொறுப்பேற்றுக் கலைத்தனர்.
சிறப்பு நாடகத்தில்
சிறிதுகாலம் நாடக வாழ்விலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என தி. க. ச. உடன்பிறந்தோர் நால்வரும் நாகர்கோவிலுக்குச் சென்று உறவினர்களுடன் வாழத் தொடங்கினர். அப்பொழுது அல்லி அர்ஜூனா, சதாரம் ஆகிய இரண்டு சிறப்பு நாடகங்களில் (Special Drama) தி. க. சண்முகம் நடித்தார். ஆனால் நாடக முறை அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, அதிலிருந்து விலகினார்.
இவ்வாறு இவர் 74 நாடகங்களில் 109 கதைமாந்தராக நடித்தார். 1935 ஆம் ஆண்டில் மேனகா என்னும் திரைப்படத்தின் வழியாக திரையுலகில் நுழைந்து கப்பலோட்டிய தமிழன் என்னும் படம் வரை பல்வேறு படங்களில் நடித்தார்.
இவர் தமிழகத்திற்கு வெளியே பம்பாய். தில்லி, கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கும் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தன் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தினார்.
ஔவையார் நாடகத்தில் ஔவையாராக வேடமேற்றுச் சிறப்பாக நடித்ததால் ஔவை சண்முகம் என அழைக்கப்பட்டார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்

நடித்த திரைப்படங்கள்
மேனகா (1935)
பாலாமணி (1937)
பூலோக ரம்பை (1940)
குமாஸ்தாவின் பெண் (1941)
பில்ஹணன் (1948)
ஓர் இரவு (1951)
இன்ஸ்பெக்டர் (1953)
மனிதன் (1953)
ரத்த பாசம் (1954)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
கடவுளின் குழந்தை (1960)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பெற்ற பட்டங்கள்
தி. க . சண்முகம் தனது நாடகப்பணியால் பின்வரும் பட்டங்களைப் பெற்றார்.
ஆண்டு பட்டம் / விருது வழங்கியவர்
1941 முத்தமிழ் வித்வ ரத்தினம்
மதுரைத் தமிழ்ச் சங்கம்
1944 ஔவை
ஆர். கே. சண்முகம் செட்டியார்
நாடகவேந்தர்
நடிகர்கோ
கலைமாமணி
தமிழ் இயல் இசை நாடக மன்றம்
1962
சங்கீத நாடக அகாதமி விருது
சங்கீத நாடக அகாதமி
1972 நாடகத் தொல்காப்பியர்
மு. கருணாநிதி
1971 பத்மசிறீ இந்தியக் குடியரசு
1953 ஆம் ஆண்டில் மனிதன் என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த தமிழ்ப்பட நடிகர் [10] என்னும் விருதை வழங்கியது.
1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கமும் 1962 ஆம் ஆண்டு புதுதில்லி
சங்கீத நாடக அகாதமி யும் சிறந்த நாடக நடிகர் என்பதற்கான விருதுகளை வழங்கின. [18]
பங்கேற்ற அமைப்புகள்
தி. க. சண்முகம் பின்வரும் அமைப்புகளில் முதன்மையான பொறுப்புகளை வகித்தார்: [3]
1. தமிழ் எழுத்தாளர் சங்கம்
2. தென்னிந்திய நடிகர் சங்கம்
3. தமிழ்நாடு சங்கீத நாடக அகாடமி
4. தமிழ்க் கலை மன்றம்
5. தமிழ் வரலாற்றுக் கழகம்
6. தமிழ் வட்டம் சமாதானக் குழு
7. சென்னை நாட்டியச் சங்கம் (துணைத் தலைவர்)
8. நடராஜா கல்விக் கழகம்
9. சங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம் (தலைவர்)
10. இளங்கோ கலைக் கழகம் (தலைவர்)
11. பாரதியார் சங்கம் (பொதுச் செயலாளர்)
12. தமிழரசுக் கழகம் (பொதுச் செயலாளர்)

எழுதிய நூல்கள்

தி. க. சண்முகம் அறிவுச்சுடர் என்னும் கையெழுத்து இதழை தன் நாடகக் குழுவினருக்காக வெளியிட்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் திங்கள் இதழான நடிகன் குரல் ஏட்டின் பொறுப்பாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்வரும் நூல்களை எழுதினார்:
1. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் (தவத்திரு சங்கரதாசு சுவாமி வரலாறு) 1955
2. நாடகக்கலை (சொற்பொழிவுகள்) 1959
3. நெஞ்சு மறக்குதில்லையே (நாடகமேடை அனுபவங்கள்)
4. எனது நாடக வாழ்க்கை (தன்வரலாறு) 1972
5. நாடகச் சிந்தனைகள் (கட்டுரைகளும் எழுத்துரைகளும்) 1978
தொகுத்துப் பதிப்பித்தவை
தி. க. சண்முகம் தன் குருநாதர் சங்கரதாசு சுவாமிகளின் பாடல்களைத் தொகுத்து
சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் நூலையும் சங்கரதாசு சுவாமிகளின் நூற்றாண்டு விழா 1967ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபொழுது,
சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றையும் தொகுத்துப் பதிப்பித்தார்.
மாநாட்டுக் கட்டுரை
உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் சார்பில்
1966 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநட்டில் கலந்துகொண்டு தமிழ் நாடக வரலாறு என்னும் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார்.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்
தமிழக சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக 1968 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

மறைவு

தி. க. சண்முகம் 1973 பிப்ரவரி 15 ஆம் நாள்
சென்னையில் காலமானார்.

தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ‘அவ்வை’ டி.கே.சண்முகம் (T.K.Shanmugam) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
திருவனந்தபுரம் அடுத்த புத்தன்சந்தை என்ற இடத்தில் (1912) பிறந்தார். முழு பெயர் திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம். 2-ம் வகுப்பு வரை பயின்றார். நாடக நடிகரான தந்தை இவரையும், சகோதரர்களையும் ஒரு நாடக நிறுவனத்தில் சேர்த்துவிட்டார்.
ஆறு வயதில் மேடை ஏறினார். இவரது நடிப்புத் திறனைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள், ‘அபிமன்யு சுந்தரி’ நாடகத்தில் அபிமன்யுவாக நடிக்க வைத்தார். சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியாரிடமும் நடிப்புப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தார்.
பத்து வயதில் ‘மனோகரா’ வேடத்தில் இவரது நடிப்பைப் பார்த்து ‘நாடகத் தந்தை’ பம்மல் சம்பந்தனார் பெரிதும் வியந்து பாராட்டினார். இவரது வசன உச்சரிப்பும், தோற்றப் பொலிவும் சேர்ந்து அந்த கதாபாத்திரத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று பாராட்டப்பட்டார்.
வயதுமுதிர்ந்த சித்தர், மதுரகவி, அவ்வையார் ஆகிய பாத்திரங் களில் சிறுவயதிலேயே அபாரமாக மிளிர்ந்தார். அவ்வையார் வேடத்தில் ஜொலித்ததால் ‘அவ்வை’ சண்முகம் என்றே அழைக் கப்பட்டார். இவரும் சகோதரர்களும் இணைந்து 1925-ல்  பால சண்முகானந்த சபா என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர்.
அடுத்த 25 ஆண்டுகளில் இக்குழு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஏராளமான நாடகங்களை நடத்திப் புகழ்பெற்றது. இக்குழு மூடப்பட்ட பிறகு, டிகேஎஸ் நாடகக் குழு என்ற பெயரில் புதிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி நடித்தார்.
இவரது நாடகங்கள் தேசபக்தியைத் தட்டி எழுப்பின. சமூக மறுமலர்ச்சியையும் பிரதிபலித்தன. இவரது ‘தேசபக்தி’, ‘கதரின் வெற்றி’ ஆகிய நாடகங்களை ஆங்கிலேய அரசு தடை செய்தது. ‘மேனகா’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மனிதன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது முயற்சியால் 1950-ல் நாடகக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராகச் செயல்பட்டார். இவரது முயற்சியால் நாடகத்துக்கான கேளிக்கை வரிக்கு விலக்கு கிடைத்தது. ‘நடிகன் குரல்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக 3 ஆண்டுகள் செயல்பட்டார்.
சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கப் பொருளாளர், சங்கீத நாடக சங்கம், டெல்லி சங்கீத நாடக அகாடமியின் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். நல்ல இசை ஞானம் கொண்டவர். சங்கரதாஸ் சுவாமிகளின் கீர்த்தனைகள், பாரதியாரின் பாடல்களைப் பாடி நடித்தார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராக 1968-ல் நியமிக்கப்பட்டார்.
கோலாலம்பூரில் 1966-ல் முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘தமிழ் நாடக வரலாறு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். நாடகம், திரைப்படம் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’, ‘நாடகக் கலை’, ‘நெஞ்சு மறக்குதில்லையே’, ‘எனது நாடக வாழ்க்கை’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
பாரதியாரிடம் அளவுகடந்த பற்றும் மதிப்பும் வைத்திருந்தார். முத்தமிழ் கலாவித்வ ரத்தினம், நாடக வேந்தர், நடிகர் கோ, பத்ம, சிறந்த நாடக நடிகர் விருது என ஏராளமான பட்டங்கள், விருதுகளைப் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேல் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்த ‘அவ்வை’ டி.கே.சண்முகம் 61-வது வயதில் (1973) மறைந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக