வெள்ளி, 9 டிசம்பர், 2016

நடிகை சுஜாதா பிறந்த நாள் டிசம்பர் 10.

நடிகை சுஜாதா பிறந்த நாள் டிசம்பர் 10.

சுஜாதா ( திசம்பர் 10, 1952 - ஏப்ரல் 6,
2011 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை .
இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,
இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி
நடிகையாக விளங்கியவர்.
பிறப்பு
சுஜாதா, 1952-ம் ஆண்டில், டிசம்பர் 10-ந்
தேதி, இலங்கையில் பிறந்தார். அவருடைய
சொந்த ஊர், கேரள மாநிலம்
காலே. அங்குள்ள பள்ளியில்
எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார்.
வாழ்க்கை
1977-ம் ஆண்டில் சுஜாதா, ஜெயகர்
என்பவரை காதல் திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு சஜித்
என்ற மகனும், திவ்யா என்ற மகளும்
இருக்கிறார்கள். திவ்யா, டாக்டருக்கு
படித்து இருக்கிறார்
திரைப்படத்துறையில்
`போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள
நாடகத்தில் முதன்முதலாக நடித்தார்.
1971-ம் ஆண்டில் டைரக்டர் ஜோஸ் பிரகாஷ்,
`தபஷ்னி' என்ற மலையாள படத்தில்,
சுஜாதாவை அறிமுகம் செய்தார்.
1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர்
இயக்கத்தில் `அவள் ஒரு
தொடர்கதை ' படத்தில்
அறிமுகமானார். அந்த படம்
வெற்றிபெற்றதை
தொடர்ந்து சுஜாதா தமிழ் பட
உலகில் பிரபலமானார். தமிழ்,
தெலுங்கு ஆகிய 2
மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட
படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
நடித்த படங்கள்
அவர்கள்,
கடல் மீன்கள்,
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது,
மயங்குகிறாள் ஒரு மாது,
அமைதிப்படை,
விதி,
வில்லன்,
நட்புக்காக,
வரலாறு
அந்தமான் காதலி
பலப்பரீட்சை,
பரீட்சைக்கு நேரமாச்சு
உழைப்பாளி,
பாபா
தெலுங்கு, தமிழ், மலையாளர் மற்றும்
இந்தி ஆகிய மொழிகளில் 300-
க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி
உள்ளிட்ட வேடங்களில் சுஜாதா
நடித்துள்ளார்.
`வரலாறு' படத்தில், அஜீத்குமாரின்
அம்மாவாக நடித்து இருந்தார்.
அதுதான் அவர் நடித்த கடைசி படம்.
அதன்பிறகு சுஜாதா நடிக்கவில்லை.
மறைவு
இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம்
அடைந்தது. 6-4-2011 பிற்பகல் 2.30 மணிக்கு
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு
சென்னையில் மரணம் அடைந்தார் .

**********************************
நடிகை சுஜாதா
பல்வேறு தமிழ்த்திரைப்படங்களின் மூலம் நம்மை
பரவசப்படுத்திய, சந்தோஷப்படுத்திய,
நெகிழச்சியூட்டிய சுஜாதா என்னும் ஒரு
சாயங்கால மேகம் நேற்று கலைந்து விட்டது
என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எல்லோருக்கும் ஒரு கிளைமாக்ஸ் உண்டு
என்றாலும், அவர் 58 வயதே
நிரம்ப்பபெற்றவர் என்ற ஒரு காரணமே,
'அதற்குள்ளாகவா' என்று
வருத்தமுறச்செய்கிறது.
1974-ல் 'அவள் ஒரு தொடர்கதை'
பார்த்தபோது, இதோ ஒரு புதிய யதார்த்த
நாயகி தமிழ்த்திரைக்கு கிடைத்துவிட்டார் என்று
திரைப்பட ஆர்வலர்கள் குதூகலித்தனர்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின்
அறிமுகத்தில் அடியெடுத்து வைத்த
சுஜாதா, முதல் படத்திலேயே குருவி தலையில்
பனங்காய் வைத்தது போன்ற கனமான
பாத்திரத்தை அநாயாசமாக
வென்றெடுத்தார். சினிமா
விசிறிகள், குடும்பத்தலைவிகள், மாணவ
சமுதாயம் என அனைத்துத்தரப்பு மக்களின்
பேராதரவோடு, முதல் படத்திலேயே வெற்றி
நாயகியானார். தொடர்ந்து
வந்த 'மயங்குகிறாள் ஒரு மாது' எனும்
திரைத்தென்றலின் மூலம் நம்பிக்கைக்குரிய
நாயகியானார். 'வாழ்ந்து காட்டுகிறேன்'
படத்தில் நடித்துக்காட்டாமல்
பாத்திரமாக வாழ்ந்து காட்டினார்.
அடுத்த தலைமுறைக் கலைஞர்களுக்கு
கதவைத்திறந்து விட்ட 'அன்னக்கிளி' வந்தது.
பண்ணைபுரத்து நாயகனின்
'பண்'ணைத்தாங்கி வந்து
வெற்றிநடைபோட்டது. பட்டி
தொட்டியெங்கும் 'மச்சானைப்
பாத்தீங்களா' பாடலும், அதற்கு
சுஜாதாவின் ஆட்டமும் ரசிகர்களை ஆட்டம்
போட வைத்தது. அதைப்பாடிய இசைக்குயில்
ஜானகி தன் திரை வாழ்க்கையில்
மறுபிறவியெடுத்தார்.
திரையுலகில் நுழையும் எல்லா நாயகியரின்
அப்போதைய இலக்குகளில் ஒன்று, இரு
பெரும் திலகங்களுடன் இணைய
வேண்டுமென்பது. மக்கள் திலகத்துடன்
நடிக்க இவருக்கு கடைசி வரை வாய்ப்பு
வரவேயில்லை.
நடிகர்திலகத்துடன் இவர் இணைந்த "தீபம்"
திரைக்காவியம் இவருக்கு ஒரு புதிய
கதவைத்திறந்து வரவேற்றது. நடிகர்திலகத்துடன்
பலர் இணையாக நடித்திருந்த போதிலும்
அவர்களில் பொருத்தமான ஜோடிகள்
என்று அமைந்தவர்கள
நாட்டியப்பேரொளி பத்மினி, எழிலரசி
தேவிகா, புன்னகையரசி கே.ஆர்.விஜயா போன்ற
ஒரு சிலரே. அந்த வரிசையில்
இடம்பெற்றார் சுஜாதா.
நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த தீபம்,
அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி
என வரிசையாக வெற்றியடைய, இவர்
பொருத்தமான ஜோடி மட்டுமல்ல
ராசியான வெற்றி நாயகியும் கூட
என்று ரசிகர்களால் போற்றப்பட்டார்.
தொடர்ந்து நடிகர்திலகத்துடன்
விஸ்வரூபம், வா கண்ணா வா, தீர்ப்பு,
தியாகி, திருப்பம், சந்திப்பு உள்பட பல
வெற்றிப்படங்கள் வெளியாகி
ரசிகர்களைக் கவர்ந்தன.
உலக நாயகன் கமலுடன் இவர் நடித்த 'ஒரு
உதாப்பூ கண் சிமிட்டுகிறது' ஒரு
வித்தியாசமான படைப்பு. அதுபோல இருவரும்
காது கேளாத, வாய் பேசாதவர்களாய்
நடித்த ‘உயர்ந்தவர்கள்’, மற்றும் ‘கடல்
மீன்கள்’ ஆகியவையும், சூப்பர் ஸ்டாருடன்
நடித்த பல படங்களில் 'அவர்கள்' படமும்
சுஜாதாவின் புகழ்க்கிரீடத்தின் வைரங்கள்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் பல்வேறு
படங்களில் நடித்திருந்த போதிலும்
பளிச்சென்று தெரியும்படியான
படம் திரு. பாலாஜி தயாரித்த "விதி".
இப்படத்தின் கோர்ட் காட்சியின்போது இருவரும்
மோதிக்கொள்ளும் விவாதக்காட்சி
கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தது.
அதுபோல இயக்குனர் சிகரத்துடன் இவர்
மீண்டும் இணைந்த 'நூல் வேலி' படமும் இவரது
சாதனைப்பயணத்தில் ஒரு மைல் கல். சிறந்த
கலைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு
வழங்கும் 'கலைமாமணி' விருதையும்
பெற்றிருக்கிறார் சுஜாதா.
சுஜாதா பழகுவதற்கு மிகவும்
இனிமையானவர் என்பதை, சென்னை
சாந்தி திரையரங்கில் நடந்த 'விஸ்வரூபம்'
படத்தின் 100-வது நாள் விழாவில்
கலந்துகொண்டபோது நேரிடையாகக்
கண்டேன். விழா முடிந்து, ரசிகைகள் கூட்டத்தில்
வந்து நின்றுகொண்டு வெகு
இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்.
தமிழ் வசன உச்சரிப்பு தெளிவாகவும்,
வசீகரிக்கும்படியாகவும் இருக்கக்கூடிய
வெகுசில நடிகையரில் சுஜாதாவும்
ஒருவர். இத்தனை காலம் திரையுலகில் இருந்தும்
எந்த ஒரு ஆபாசக்காட்சியிலோ, முகம்
சுளிக்கும்படியான தோற்றத்திலோ இவர்
நடித்ததில்லையென்பது இவர்
பெற்றிருக்கும் பெரிய வெகுமதி.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதே
தொழிலதிபரான ஜெயகர்
என்பவரைத்திருமணம்
செய்துகொண்டு, குழந்தைப்
பேற்றுடன் சிறந்த குடும்பத்தலைவியாகவும்
விளங்கியவர். சமீபகாலமாக இதய நோயின்
தாக்குதலுக்குள்ளாகியிருந்த சுஜாதா,
வெளி உலகத்தொடர்புகளில்
இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு
வாழ்ந்து வந்தார். அவர் நமக்காக
விட்டுச்சென்ற அற்புதத் திரைப்படங்களே
அவரது நினைவைப்போற்றும் சிறந்த நினைவுச்
சின்னங்களாக விளங்கும்.
அழியாத ஓவியமாய் நம்
நெஞ்சங்களில் உறைந்துவிட்ட திருமதி
சுஜாதாவை இனி எப்போது பார்க்கப்போகிறோம்?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக