சனி, 10 டிசம்பர், 2016

பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி நினைவு தினம் டிசம்பர் 11 , 2004 .

பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி நினைவு தினம் டிசம்பர் 11 , 2004 .

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக
அறியப்படும் மதுரை சண்முகவடிவு
சுப்புலட்சுமி ( செப்டம்பர் 16, 1916 -
டிசம்பர் 11 , 2004 ) ஒரு புகழ்பெற்ற
கருநாடக இசைப் பாடகியாவார். 1998
ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த
விருதான பாரத ரத்னா விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டார். தமிழ் , கன்னடம் ,
மலையாளம் , தெலுங்கு, வங்காள
மொழி , இந்தி , சமஸ்கிருதம் ,
குஜராத்தி ஆகிய பல
மொழிகளில் இவர்
பாடியுள்ளார். இவர் உலகின் பல
நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச்
சென்று பல நிகழ்ச்சிகள்
நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள்
அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை
நிகழ்த்தியுள்ளார்.
பிறப்பும், குடும்பப்
பின்னணியும்
எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916
புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி அன்று
தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்
மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப்
பிறந்தார். [1] அவரது தந்தையார்
சுப்பிரமணிய அய்யர் என்று
பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி
தெரிவித்து இருக்கிறார். இவர் தம்
சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள்
ஆகியோருடன் இசை தொடர்பான
சூழலில் வளர்ந்தார். இவரது தாயார்
சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை
மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு
மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும்
அவர்கள் இருவரும் இளவயதிலேயே
காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின்
பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின்
கலைஞர்.
இசையுலகில் காலடி
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில்
குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து
பாடி வந்த இவர் இசையில்
வெகுவிரைவில் புகழ் பெற்றார்.
சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது
சென்னை ஆளுநர், சண்முகவடிவின்
வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச்
சென்றார். அப்போது மகளையும் பாடச்
சொன்னார். சிறுமி சிறிதும்
தயங்காமல் "மரகத வடிவம்" என்ற
செஞ்சுருட்டி இராகப் பாடலை
உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட
ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும்
ஒளிப்பதிவு செய்து
கொண்டார்.
ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை
இசைக்கச்சேரி செய்து
கொண்டிருந்த போது வெளியில்
சிறுமிகளுடன் விளையாடிக்
கொண்டிருந்தாள். திடீரென
மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி
அழைத்து வருமாறு தாய் பணித்தாள்.
வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு
ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து
விட்டு "பாடு" என கண்டிப்பான குரலில்
கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள்.
மக்கள் கரகோஷம் செய்து "இவள்
தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள்.
சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து
கொள்ளும் வயதல்ல ஆகையால்
திரும்பவும் சென்று விளையாட வேண்டும்
என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச்
சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி
ஆவார்.
இசை ஆர்வம்
இசைப்பின்னணியைக் கொண்ட
குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே
சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில்
ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன்
பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு.
செம்மங்குடி சிறீனிவாச ஐயர், முசிரி
சுப்பிரமணிய ஐயர் , செம்பை
வைத்தியநாத பாகவதர் , ராஜ
மாணிக்கம் பிள்ளை , டி. என். ராஜரத்தினம்
பிள்ளை , பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்,
ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற
இசையுலக முன்னோடிகள் இடம் பெறும்
இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில்
சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ்.
சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன்
கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய
கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை
வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான
கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது.
இந்துஸ்தானி இசையை இவர் பண்டித
நாராயணராவ் வியாசி யிடமிருந்து
கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும்
பாதே குலாம்கானின் இசையையும் இவர்
இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு
எல்.பி இசைத்தட்டில் "மரகத வடிவும்
செங்கதிர் வேலும்" எனும் பாடலை
சண்முகவடிவின் வீணையும், எம். எஸ்.
சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து
வெளிவந்தது. எம். எஸ்.
சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு
இதுவாகும். மிருதங்க ஜாம்பவான்
எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை
தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க
காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின்
வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார்.
அவரது மணிவிழாவில் எம். எஸ்.
சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக்
கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத்
திறனை வெளியுலகம் அறியச்
செய்தது. அதே ஆண்டு மைசூர்
சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர்
மகாராஜாவின் அரசவையில்
திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள்
மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி
கச்சேரி செய்தார். அது
முதற்கொண்டு
தென்னிந்தியாவின் எல்லா
ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின்
கச்சேரிகள் நடைபெற்றன.
திரைத்துறை பங்களிப்புகள்
எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட
திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை.
நாட்டாமை மல்லி. என். எம். ஆர்.
வெங்கடகிருஷ்ணன் மற்றும்
இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை
"சேவாசதனம்" படத்தின்
கதாநாயகியாக நடிக்க வைத்தனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில்
உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில்
நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு
துணையாக வந்தவர் சதாசிவம். 1936-
1937 களில் வெளிவந்த படத்தில்
"ஆதரவற்றவர்க்கெல்லாம்" என்ற
ஜோன்புரி இராகப்பாடலும்,
"இஹபரமெனுமிரு" என்ற
சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும்
பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
சகுந்தலை
காளிதாசனாரின் சகுந்தலை படத்தில்
சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப்
புகழ் பெற்றார். "மிகக் குதூகலிப்பதும்
ஏனோ" , "எங்கும் நிறை நாதப்பிரம்மம்" ,
"பிரேமையில் யாவும் மறந்தேனே" ஆகிய
பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன.
இப்படத்தில் துஷ்யந்தனாக ஜி. என்.
பாலசுப்பிரமணியம் நடித்தார். எம். எஸ்.
சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான
இசைவாணி என விளம்பரம்
செய்யப்பட்டார். சகுந்தலை
திரைப்படத்தைத் தயாரித்தவர் கல்கி
சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ்.
சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு
கொண்டதனால் 1940ம் ஆண்டு
இருவரும் திருமணம் செய்து
கொண்டனர்.
சாவித்திரி
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில்
எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில்
நடிக்க வேண்டினார்கள். ஆனால்
ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து
விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும்
ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து
வெளியேறி இருந்தார். கல்கியும்
சதாசிவமும் சேர்ந்து
சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க
விருப்பம் கொண்டனர். ஆனால்
கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால்
சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க
ஒப்புக் கொண்டு அதற்கான
சம்பளத்தை வாங்கிக்
கொடுத்தால் அந்தப் பணத்தைக்
கொண்டு புதுப்பத்திரிகை
ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம்.
எஸ். சுப்புலட்சுமியிடம்
சொன்னார். அதற்காகவே
சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர்
வேடத்தில் நடித்தார். அதில்
கொடுக்கப்பட்ட
ஊதியத்தொகையில் கல்கி வார
இதழ் தொடங்கப்பட்டது.
சாவித்திரி படத்தில் "மனமே கணமும்
மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே" ,
"மங்களமும்பெறுவாய்" போன்ற சில
பாடல்கள் புகழ் பெற்றவை.
மீரா
பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல்
வெளியிடப்பட்டது. "காற்றினிலே வரும்
கீதம்" , "பிருந்தாவனத்தில் கண்ணன்
வளர்ந்த" , "கிரிதர கோபாலா" , "எனது
உள்ளமே" போன்ற பாடல்கள்
பிரபலமானவை. பக்த மீரா இந்தி
மொழியில் தயாரிக்கப்பட்டு, வட
நாட்டவருக்கு அறிமுகம்
செய்யப்பட்டது. அப்போது அரசியல்
பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர்
மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர்
ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி
நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும்
சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது.
இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு
"இசையின் இராணிக்கு முன்னால் நான்
சாதாரண பிரதமர் தானே" எனப்
பாராட்டினார்.
மீரா திரைப்படத்தில்
சுப்புலட்சுமி
ஆண்டு படம் மொழி
1938 சேவாசதனம் தமிழ்
1940 சகுந்தலை தமிழ்
1941 சாவித்திரி தமிழ்
1945 மீரா தமிழ்
1947 மீராபாய் இந்தி
பெற்ற சிறப்புகள்
இந்தியில் வெளியான மீரா
பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே
சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித்
தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து
கன்னியாகுமரி வரையான பக்தர்களையும்
இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது.
1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி
இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார்.
மனைவியின் குரலை பொதுநலத்திற்குப்
பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின்
எண்ணமே இதற்குப் பின்புலமாக
அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல்,
ஆராய்ச்சி, கல்வி மற்றும்
சமயத்தொண்டு
ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
"இந்தியா இந்த தலைமுறையில் ஓர்
மாபெரும் கலைஞரை
உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள்
பெருமிதம் கொள்ளலாம்"
என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி
நாயுடு ஒருமுறை கூறினார்.
பெற்ற விருதுகள்
பத்ம பூசண் , 1954
சங்கீத நாடக அகாதமி விருது, 1956 .
சங்கீத கலாநிதி , 1968
இசைப்பேரறிஞர் விருது , 1970
மக்சேசே பரிசு , 1974
பத்ம விபூசண் , 1975
சங்கீத கலாசிகாமணி விருது, 1975
காளிதாஸ் சம்மன் விருது, (1988 -1989)
நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா
காந்தி விருது, 1990
பாரத ரத்னா - 1998

**********************************
எம்.எஸ்.
சுப்புலட்சுமியின் முதல் கச்சேரியும்,
முடிவுக் கச்சேரியும் நடந்தது சங்கீத
வித்வத் சபை என்ற மியூசிக்
அகாடமியில்தான். இந்த மியூசிக்
அகாடமியின் தற்போதைய தலைவராக
இருப்பவர் ‘தி இந்து’ குழுமத்தின் இணைத்
தலைவர் என்.முரளி என்பது கூடுதல்
தகவல். பிரபல கர்னாடக சங்கீத
பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ்.
அம்மா என்று அன்புடன் கர்னாடக
சங்கீத வித்வான்களால் மட்டுமல்ல,
இசை ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர்.
இவரது காலத்தில் பிரபல கர்னாடக
இசைக் கலைஞர்கள் பலர் இருந்தாலும்,
இவரது புகழ் ஐக்கிய நாடுகள் சபை வரை
பரவியதற்கு அவரது உழைப்புதான்
காரணம் என்று அவரது கணவர்
சதாசிவம் ஒரு பேட்டியில்
குறிப்பிட்டுள்ளார். உணவுக்காவது,
விரதம் இருந்தால் விடுமுறை விடுவது
இவரது வழக்கம். ஆனால், பாடல்
பயிற்சியை அனுதினமும்
செய்வதால் அதற்கு மட்டும்
விடுமுறையே கிடையாது. எம்.எஸ். பாட
நேரடியாகக் கேட்டவர்கள்
பாக்கியவான்கள்.
ஆத்மநாதன்
(சதாசிவம் – எம்.எஸ். சுப்புலட்சுமி
தம்பதியரின் ஐம்பது ஆண்டு கால
உதவியாளர்)
எம்.எஸ் அம்மாவின் இனிய இசையை விட
அவர் மிக இனிமையானவர் என்பது
அவரது புகழ் வெளிச்சத்தில்
மறைந்துதான் போய்விட்டது.
எப்பொழுதுமே எளிமையானவர்.
பலரிடம் கீர்த்தனைகளைக்
கற்றிருந்தாலும் ஒவ்வொரு
கீர்த்தனையும் உயர்தரமாக
இருந்ததற்கு, அவரின் சாதகமே
காரணம். இதற்கான அவரின்
உழைப்பு அசாத்தியமானது. அதற்கு
உதாரணமாக ‘காலைத் தூக்கி
நின்றாடும், குறை ஒன்றும் இல்லை,
காற்றினிலே வரும் கீதம்’ ஆகிய
பாடல்களைக் கூறலாம். அவர்
கச்சேரிகளில் தனது ஆத்ம
திருப்திக்காக மட்டுமே பாடினார்.
ஆனால், இதனைக் கேட்ட அனைத்து
ரசிகர்களுக்கும் அந்த இசை ஆத்ம
திருப்தியை அளித்து அவர்களின் நிலை
உயரக் காரணமானது
என்பதுதான் நிதர்சனம்.
இளைய தலைமுறை இசைஞர்களுக்கு அவர்
இசை தெய்வம்; ரசிகர்களுக்கோ அவர்
மேடையில் தோன்றிய தெய்வத் திருவுரு
என்று சொன்னால்
மிகையில்லை. அவரை அறிந்த நாளில்
இருந்தே அவர்நல்ல ஆரோக்கியத்தில்
இருந்தார் என்றுசொல்ல
முடியாது. ஆனால், உடல்நிலை
சரியில்லை என்ற காரணத்துக்காக
ஒரு கச்சேரியைக் கூட அவர் வாழ்நாளில்
ரத்து செய்தது இல்லை என்பது
ஆச்சரியகரமானது. தன்னை விட இளைய
இசைஞர்களின் இசையை மதிப்பதில்
அவருக்கு இணை யாருமில்லை.
கெளரி ராம்நாரயணன்
(மூத்த பத்திரிகையாளர் (ஓய்வு) - தி
இந்து)
பிரபல வாக்கேயக்காரர்கள்
தெலுங்கு, கன்னடம் போன்ற
மொழிகளில் பாடல்கள்
இயற்றி இருக்க, அதனையே பலரும் பல
முறை மேடைகளில் பாட அவை
பிரபலமாகிக் கொண்டே
வந்தது. தமிழ் இசைக்காக எம்.எஸ்.
செய்த சேவை தமிழ் இசை என்ற
இயக்கமாகவே மாறிவிட்டது.
சுத்தானந்த பாரதியின் பாடல்கள்
இவரது கணவர் சதாசிவத்துக்கு
மிகவும் பிடித்திருந்த தால், கச்சேரியின்
முதல் பாடலாக இருக்க ஹிந்தோள
ராகத்தில் அமைந்த ‘அருள் புரிவாய்
கருணைக் கடலே’ உகந்தது என்று கூறி
இந்த தமிழ் பாடலை எடுத்துக்
கொடுத்தார். ‘சபாபதிக்கு
வேறு தெய்வம்
சமானமாகுமா?’ என்ற
கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்
தேனினும் இனிய அவரது குரலில்,
வெளிவந்து, மிகவும்
பிரபலமடைந்தது.
வாக்கேயக்காரரான பாபநாசம்
சிவன் நேரடியாகவே தனது பாடல்களை
எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு
கற்றுக்கொடுத்தாராம்.
இதனைக் குறிப்பிட்டு கூறிய எம்.எஸ், இது
பெரும் கொடுப்பினை என்று
ஒரு பேட்டியில் சொல்லி
வியந்திருக்கிறார்.
கல்கியின் மகள் ஆனந்தியும்,
சதாசிவம் மகள் ராதாவும்
இணைந்து அரங்கேற்றிய பரதநாட்டிய
நிகழ்ச்சிக்கு, எம்.எஸ்.தான்
வாய்ப்பாட்டு. அந்நாளில் `யாரோ
இவர் யாரோ’ மற்றும் `ஏன் பள்ளி
கொண்டீர் ஐயா’ ஆகிய
பாடல்கள் அவரது குரலின்
இனிமையையும், கம்பீரத்தையும் பெற்று
வலம்வந்தன. தமிழ் பாடல்கள் தன்
தகுதியைப் பெறத்
தொடங்கின. யதிகுல
காம்போதியில், மத்யம சுருதியில் அவர்
பாடிய `காலைத் தூக்கி’
என்றுதொடங்கும் பாடல்
இன்றும் பிரபலம்தான். உச்ச
ஸ்தாயியில் அவர் பாடிய
`செந்தமிழ் நாடெனும்
போதினிலே’ என்ற சுப்பிரமணிய
பாரதியின் பாடலில் அவரது முழு
சக்தியும் குடிகொண்டிருந்தது.
கல்கி சதாசிவம், சுப்பிரமணிய
பாரதியின் பாடல்களுக்கு ரசிகர். ஒரு
முறை கார்ப்ப ரேஷன் ரேடியோவுக்கு
எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி பதிவு
நிகழ்ந்துகொண்டிருந்தது.
அப்போது, பிரிட்டிஷ் அரசு,
பாரதியாரின் பாடல்களுக்குத்
தடைவிதித்திருந்தது. அதனால்
அப்பாடலைப் பாட ரேடியோ அனுமதிக்க
வில்லை. அதனால் சதாசிவம்,
பாதியிலேயே அக்கச்சேரியை நிறுத்தி,
எம்.எஸ். சுப்புலட்சுமியை
அழைத்துக்கொண்டு
வெளியேறிவிட்டார். இந்த
நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி
சொல்வதில் எம்.எஸ்.
சுப்புலட்சுமி ஆச்சரியகரமான ஆர்வம்
கொண்டிருந்தார். இவர் பல
மொழிகளில்
பாடியிருந்தாலும், தமிழ்
மொழிப் பாடல்களைப்
பிரபலப்படுத்தியது
சரித்திரமாகிவிட்டது.
சபரி கிரிஷ்
(பாடகர், திருப்பதி இசைக் கல்லூரி
விரிவுரையாளர்)
கீர்த்தனைகள்தான் எம்.எஸ்.
பாடுவார் என்றே எண்ணியிருந்த
காலம். அப்போது
வானொலியில் மீரா பஜன்
ஒன்றை ஒலிபரப்பினார்கள். அவர்
இசையில் பன்முகத் திறமை
கொண்டவர் என்பதை அறிய
வியப்பாய் இருந்தது. அது 1988-ம்
ஆண்டு, எனக்கு 10 வயது. அப்போது
புரசைவாக்கம் முத்தையா
செட்டியார் பள்ளியில்,
ஆதிசங்கரர் இயற்றியவற்றை மட்டுமே
கொண்ட கச்சேரி நிகழ்ந்தது.
கச்சேரி முடிந்து அவர் எழுந்து நடந்து
வந்ததைப் பார்த்தபோது, தேனினும் இனிய
குரலில் பாடிய தேவதை நடந்து
வந்ததுபோல் பிரம்மிப்பாக இருந்தது.
சென்னை சுந்தரத்தில் சாய்
பாபா முன்னிலையில் பஜன் பாட,
நாங்கள் கூடி இருந்தோம். அப்போது
எம்.எஸ். அம்மா, சதாசிவம்
மாமாவுடன் வந்திருந்தார்.
நாங்கள் பாடிய பஜனைப்
பாடல்களை, வாங்கிப் பாடினார்
எம்.எஸ். உலகளாவிய புகழ்
கொண்ட கர்னாடக இசைப்
பாடகி இவ்வளவு எளிமையாகக்கூட
இருப்பாரா என்று ஆச்சரியமாக
இருந்தது.
திருப்பதியில் எம்.எஸ். கச்சேரி அன்றைய
தினம் மாலையில் இருந்தது. அதற்கு
முன்னர் பெருமாள் தரிசனம்
செய்ய முடிவுசெய்தனர்
அத்தம்பதியர். அப்போது கூட்ட வரிசையை
நிறுத்தி, வி.ஐ.பி தரிசனத்துக்கு வழிவிடும்
வரை சன்னதிக்கு எதிரே கருடாழ்வார்
சன்னதிக்கு அருகே காத்திருக்க
வேண்டிவந்தது. ஒரு கோணிப்பையை
விரித்திருந்தார்கள் நிர்வாகத்தினர்,
அதில் முகமலர்ச்சியோடு அமர்ந்து
காத்திருந்தார்கள் அத்தம்பதியினர்.
அவரது பகட்டில்லாத எளிய பக்திக்கு
இதுவும் ஒரு சான்று. அன்றைய தினம்
காந்தி ஜெயந்தி. கச்சேரியில் ‘ஹரி
தும ஹரோ’ பாடல் இடம்
பெற்றதைவிட ஆச்சரியம், மேடையேற
பல படிகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில்
89 வயது சதாசிவம் மாமாவும், 74
வயது எம்.எஸ். அம்மாவும்
கைகோத்துக்கொண்டு, கிடுகிடு
என்று படிகளில் ஓடி ஏறினார்கள்.
சங்கீதம் அவர்களுக்குத் தந்த சக்தி
இது.
திருநீர்மலையில், மலை மீதுதான் தன்னை
விட 15 வயது மூத்த சதாசிவத்தை
எம்.எஸ்.
மணந்துகொண்டார்.
பின்னர், சதாசிவத்துக்கு 90-வது
பிறந்தநாள் அன்று திருப்பதியில்
நிர்வாகத்தினர் கொடுத்த
மாலையினை இருவரும்
மாற்றிக்கொண்டார்கள்.
அப்போது எம்.எஸ். முகத்தில் பளீரிட்ட
வெட்கத்துக்கு அளவே இல்லை.
திருப்பதி தயிர் அவருக்கு
ரொம்பப் பிடிக்கும்.
கொஞ்சம் சர்க்கரை கலந்து
சாப்பிடுவார். பீமாஸ் ஹோட்டலில்
தங்கியிருந்த எம்.எஸ். அங்கு ஆந்திரா
ஸ்பெஷல் பெசரெட்
தோசையும், இஞ்சி வெல்லச் சட்னியும்
கேட்டு வாங்கி விரும்பிச் சாப்பிடுவார்.
எம்.எஸ். சித்தூர் புளி போட்ட ரசத்தை
விரும்பிச் சாப்பிடுவார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் இறுதி
நாட்களில் அவரை ஒரு குழந்தையைப் போல்
கவனித்துக் கொண்டவர்
ஆத்மாதான். அவரது கச்சேரிகளில்
அவரும் பாடலும் வேறு வேறு என்று
இல்லாமல் ஒன்றி இருந்ததுதான்
அபூர்வமான மாயாஜாலத்தை
உருவாக்கியது என்று
சொல்ல வேண்டும்.
துக்கடாக்கள்
* தனது 88 ஆண்டு கால வாழ்வில்
80 ஆண்டுகள் இசை சாதனையைச்
செய்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி
என்றால் மிகையாகாது.
* எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு சங்கீத
கலாநிதி, பாரத ரத்னா ஆகிய
விருதுகள் வழங்கப்பட்டதில்,
அவ்விருதுகள் பெருமையடைந்தன
என்றே சொல்லலாம். மீரா
பஜன் என்றாலே எம்.எஸ். சுப்புலட்சுமி
நினைவுகள்தான் ரசிகர்களின்
நெஞ்சில் நின்றாடும். மீரா வேறு,
எம்.எஸ். சுப்புலட்சுமி வேறு என்று
பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு
அவரது குரல், மீராவின் பக்தி
பாவத்துடன் இணைந்திருக்கும்.
* ஒரு கோயில் விழாவின் இறுதி நாள்
நிகழ்ச்சிக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின்
கச்சேரி ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த
தகவல் சுற்றுவட்டாரக்
கிராமங்களில் பறை அறிவித்து
தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக்கிராமங்களில் இருந்து மக்கள்
கூட்டம் வந்து கொண்டே
இருந்தது. கச்சேரியும் நல்ல
களைகட்டிவிட்டது.
இக்கச்சேரியைக் கேட்க அரியலூரில் இருந்து
ஒரு தம்பதியினர் 30 மைல், தூரம் நடந்தே
வந்துள்ளனர். ஆனால், அவர்கள்
வருவதற்குள் கச்சேரி முடிந்துவிட்டது.
அவர்கள் நடந்து வந்ததால் தூசியும்
தும்பும் அப்பிய ஆடையுடன் பதறி
அடித்துக்கொண்டு கச்சேரி
நடக்கும் இடத்துக்குள் நுழைந்தனர். கச்சேரி
முடிந்துவிட்டது என்பதைத் தாங்க
முடியாத ஏமாற்றத்துடன் எம்.எஸ்.
சுப்புலட்சுமியிடம் முறையிட்டனர்.
அவர்களுக்காக இரவு 12 மணியைக்
கடந்த பின்னும் ஒரு பாடலைப் பாடித்
திருப்தி அளித்தார் எம்.எஸ்.
ரசிகர்களின்உணர்வுகளை இசையைப் போலவே
மதிப்பவர் எம்.எஸ். என்பதற்கு
இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக