சனி, 26 ஆகஸ்ட், 2017

தமிழிசைக் கலைஞர் எம். எம். தண்டபாணி தேசிகர் பிறந்த தினம் ஆகஸ்ட் 27.



தமிழிசைக் கலைஞர் எம். எம். தண்டபாணி தேசிகர் பிறந்த  தினம் ஆகஸ்ட் 27.

எம். எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு:ஆகத்து 27 , 1908 - சூன் 26 , 1972 ) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம்
நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1952 தியாகராசர் ஆராதனை சம்பவம்
1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.
நடித்த திரைப்படங்கள்
பட்டினத்தார் (1936)
வள்ளாள மகாராஜா (1937)
தாயுமானவர் (1938)
மாணிக்கவாசகர் (1939)
நந்தனார் (1942)
திருமழிசை ஆழ்வார் (1948)
விருதுகளும் பட்டங்களும்
சங்கீத சாகித்திய சிரோமணி பட்டத்தை 1951 ஏப்ரல் 3 ஆம் நாள் எம். பக்தவத்சலம் வழங்கிக் கௌரவித்தார்.
சங்கீத கலாசிகாமணி விருது , 1955, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (மிருணாளினி சாராபாய் தலைமை)
இசைப்பேரறிஞர் விருது , 1957
 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
சங்கீத நாடக அகாதமி விருது , 1969



பழம்பெரும் தமிழிசைக் கலைஞர், நடிகர்

பிரபல தமிழிசைக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எம்.எம்.தண்டபாணி தேசிகர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27). அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:
*திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் பிறந்தவர் (1908). சிவத்தொண்டு புரிந்து வரும் ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயில்களில் தந்தை பாடும்போது உடன் இருந்த இவருக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. சடையப்ப பிள்ளை என்ற சங்கீத வித்வானிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார்.
*மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடமும் இசைப் பயிற்சி பெற்றார். முதன்முதலாக இவரது சங்கீத அரங்கேற்றம் திருமருகல் ராமர் கோயிலில் நடைபெற்றது. கணீரென்ற சிறுவனது குரல் அனைவரையும் கவர்ந்தது. 18-வது வயதில் மதுரையில் நடந்து வந்த தேவாரப் பாடசாலையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
*இசை என்பது ஒரு சிலர் பாடி, கேட்டு ரசிக்கும்படியாக மட்டும் இருக்கக் கூடாது, சாதாரண மக்களும் இசையைக் கேட்டு ரசிக்க வேண்டும் என்று கருதியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது ‘தமிழ்ப் பாமாலை’ என்ற நூலை வெளியிட்டார். திருக்குறளுக்கு முதன்முதலாக இசை அமைத்து, அதை இறைவணக்கமாகப் மேடையில் பாடியவர் என்ற பெருமை பெற்றார்.
*கர்நாடக இசையில் அமைந்த பல கீர்த்தனைகளையும் இவர் புனைந்துள்ளார். 1935-ல் இவரது பாடும் திறனால் கவரப்பட்ட வேல் பிக்சர்ஸ் அதிபர்கள் இவரைப் ‘பட்டினத்தார்’ படத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்தனர். இதில் பெரும்பாலான பாடல்களை இவரே பாடினார். இப்படம் 25 வாரங்கள் ஓடியது.
*பின்னர் ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘நந்தனார்’ படத்திலும் பாடி நடித்தார். தொடர்ந்து, ‘வள்ளாள மகாராஜா’, ‘தாயுமானவர்’, ‘மாணிக்கவாசகர்’, ‘திருமழிசை ஆழ்வார்’ உள்ளிட்டப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வெண்கலக் குரலில் திரைப்படங்களில் இவர் பாடிய ‘ஜகஜனனீ’, ‘என் அப்பன் அல்லவா’, ‘வழிமறித்து நிற்குதே’, ‘காண வேண்டாமா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன.
*திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முழு நேர இசைக் கலைஞராகவே வாழ்ந்து வந்தார். தமிழகம் முழுவதும் கச்சேரிகள் நடத்தி வந்தார். ‘சங்கீத சாகித்திய சிரோமணி’, ‘சங்கீத கலாசிகாமணி’, ‘இசைப்பேரறிஞர்’, ‘சங்கீத நாடக அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
*தமிழ்ப்பாடல்களை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர். தேவாரப் பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட்டார்.
*சுருதி சுத்தமான சாரீரம், அபாரமான உச்சரிப்புத் திறன், பாடல்களின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை ஆகியவை இவரது தனித்தன்மையாக விளங்கின. தன் இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களையும் தேவார, திருமுறைகளையும் பாடி, 1940-களில் தோன்றிய தமிழிசை இயக்கத்துக்குகு வளம் சேர்த்தார்.
*இசையின் பல்வேறு நுணுக்கங்களை ஆழ்ந்து ஆராய்ந்து இடைக்கால இசை, இயலும் இசையும், இசையும் நாடகமும் உள்ளிட்ட பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
*‘நடமாடும் தமிழிசை’, ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்றெல்லாம் புகழப்பட்டவரும் தமிழகத்தின் தலைசிறந்த சங்கீத வித்வான்களில் ஒருவருமான எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1972-ம் ஆண்டு, ஜூன் மாதம், 64-வது வயதில் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக