வியாழன், 8 செப்டம்பர், 2016

இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு தினம் செப்டம்பர்08,


இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு தினம் செப்டம்பர்08,
குன்னக்குடி வைத்தியநாதன் (மார்ச் 2, 1935 - செப்டம்பர் 8, 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.


வாழ்க்கைச் சுருக்கம்
1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.

ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.

அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின் தவிலுடன் பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.

திரைப்பட உலகில்
வா ராஜா வா (1969) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதனுக்கு திருமலை தென்குமரி (1970) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

இசையமைத்த பிற திரைப்படங்கள்
தெய்வம்
கந்தன் கருணை
திருவருள்
பிற பங்களிப்புகள்
தோடிராகம் (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். டி. என். சேஷகோபாலன் இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.

சிறப்புகள்
திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.

விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 1989
சங்கீத நாடக அகாதமி விருது, 1993
சங்கீத கலாசிகாமணி விருது, 1996; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
பத்மஸ்ரீ விருது; வழங்கியது: இந்திய அரசு.
கலைமாமணி விருது; வழங்கியது: தமிழக அரசு
மறைவு
இவர் 2008, செப்டம்பர் 8 ஆம் நாள் தனது 75 ஆவது வயதில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9மணியளவில் மாரடைப்பால் காலமானார். வைத்தியநாதன் பாகீரதி தம்பதியினருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

வயலின் கலைஞர், இசையமைப்பாளர்

பிரபல வயலின் இசைக் கலைஞர், திரைப்பட இசை யமைப்பாளரான குன்னக்குடி வைத்தியநாதன் (Kunnakudi Vaidyanathan) . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி யில் (1935) பிறந்தார். தந்தை ராமஸ்வாமி சாஸ்திரி கர்னாடக இசைக் கலைஞர். புல்லாங்குழல், கிதார், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் படைத்தவர். அவரிடம் பாட்டு கற்றார்.

# சண்முகநாதபுரம் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், தந்தை நடத்திய ‘சண்முக வித்யாசாலை’ என்ற சமஸ்கிருத பாடசாலையில் படித்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞர்கள். சகோதரிகள் பாட, இவரது அண்ணன் மிருதங்கம் வாசிப்பார். இப்படி பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

# ஒருமுறை இவர்களது கச்சேரிக்கு வயலின் கலைஞர் வரவில்லை. காரணம் கேட்டதற்கு, ‘‘ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!’’ என்றார் நக்கலாக. அதையே சவாலாக எடுத்துக்கொண்ட தந்தை 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் தந்தார்.

# சிரத்தையுடன் கற்றுக்கொண்டவர் 12-வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு பக்க வாத்தியம் வாசித்ததுதான் இவரது அரங்கேற்றமாக கருதப்படுகிறது.

# ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து கச்சேரிகளில் பங்கேற்றார். 1976 முதல், வயலின் இசையையே பிரதானமாகக் கொண்டு கச்சேரி செய்தார்.

# திருவையாறு தியாகப்பிரம்ம மகோத்சவ சபை செயலராக 28 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்தார். ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி, இசையால் நோய்களை குணப்படுத்துவது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

# பிரபல தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து 3000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார். தோடி ராகம் வாசிப்பதில் நிகரற்றவர். தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர்.

# 1969-ல் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். ‘தெய்வம்’, ‘அகத்தியர்’, ‘திருவருள்’ உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘திருமலை தென்குமரி’ படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றார். இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்ம உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

# வயலின் இசைக்கருவியில் பல புதுமைகளை செய்தார். இவரது வயலின் பேசும், பாடும்! கர்னாடக இசை, மெல்லிசை, திரைப்பட இசையோடு பறவைகள், மிருகங்களின் ஒலிகள், இயற்கையின் சப்தங்களையும் வயலினில் பிரதிபலித்தார்.

# கர்னாடக இசை பற்றி தெரியாதவர்கள்கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவர். ‘வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்’ என்று போற்றப்பட்டார். 61 ஆண்டுகள் தன் இசையால் மக்களை மெய்மறக்கவைத்து, ‘வயலின் சக்கரவர்த்தி’ என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 73-வது வயதில் (2008) மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக