சனி, 24 செப்டம்பர், 2016

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் செப்டம்பர் 27 ,

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் செப்டம்பர் 27 ,

நாகேஷ் ( செப்டம்பர் 27 , 1933 - ஜனவரி
31 , 2009 ) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை
நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர
நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000
திரைப்படங்களுக்கும் மேல் நடித்த
பெருமைக்குரியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக்
கொண்ட நாகேஷ் கன்னடப்
பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
தமிழ்நாடு , தாராபுரம் பகுதியில் கன்னட
மாதவர்கள் வாழும்
கொழிஞ்சிவாடி என்ற ஊரில்
பிறந்தார். தந்தை பெயர்
கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி
அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே
என்ற ஊரில் தொடருந்து நிலைய
அதிபராகத் தொழில் பார்த்தவர்.
நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன்.
நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும்
நண்பர்களால் குண்டுராவ் என்றும்
அழைக்கப்பட்டார் [1] .
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு
படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி
கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில்
இரண்டாம் ஆண்டு படித்துக்
கொண்டிருந்தபோது தான் அம்மை நோய்
வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும்,
ரெயில்வேயில் எழுத்தராகப்
பணிபுரிந்தார். புதுவசந்தம் , சேரன்
பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த
ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.
நடிப்புத் துறையில்
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக்
கொண்ட நாகேஷ் அமெச்சூர்
நாடகங்களில் நடித்து வந்தார். மணியன்
எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை
தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை"
என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால்,
'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில்
Thai என்பதை 'தாய்' என்று மாற்றி
படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என
அழைக்கப்பட்டார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில்
புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில்
முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர்
சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்
கொண்டிருந்தார். ஸ்ரீதரின்
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய
நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது
மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
அவருக்குப் பல படங்களில் ஜோடியாக
நடித்தவர் மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர்
சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து
குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து
விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற
கதாபாத்திரம், தில்லானா
மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற
பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.
சிவாஜி கணேசன் , எம்ஜிஆர் போன்றோருடன் பல
படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்
இவர் நடித்துள்ளார்.
கதாநாயகனாக
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை
கதாநாயகனாக நடிக்க வைத்தார்
இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம்
மிகப்பெரிய வெற்றியைப்
பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை
கொண்டவர் நாகேஷ் என்பதை
ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம் ,
நவக்கிரகம் , எதிர் நீச்சல் , நீர்க்குமிழி,
யாருக்காக அழுதான், அனுபவி ராஜா
அனுபவி போன்ற படங்களில்
கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன்
உடனான நட்பு
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள்
படத்தில் கொடும் வில்லனாகவும்
அவர் தோன்றினார். அதற்குப் பின் பல
கமலஹாசன் படங்களில் நாகேஷ்
நடித்தார். மைக்கேல் மதன காமராஜன் ,
மகளிர் மட்டும் , அவ்வை சண்முகி , பஞ்சதந்திரம்
போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப்
படம் தசாவதாரம் ஆகும், இதுவும்
கமலஹாசன் படமாகும்.
புதுவசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட
படங்களில் நடித்த ஆனந்த்பாபு இவர்தம்
மகனாவர்.

************************************
நடிகர் நாகேஷ் மிகவும் ஆசாரமான,
கன்னடம் பேசும் பிராமணக் குடும்பத்தில்
பிறந்தவர். பூர்வீகம் மைசூரு. கர்நாடக
மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன்
மாஸ்டராகப் பணியில் இருந்தவர்
நாகேஷின் தந்தை. குடும்பம் தாராபுரத்தில்
இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம்
அவருடைய அக்கா கெங்குபாய்.
எம்.ஜி.ஆரின் புகழாரம்:
தொடக்க காலத்தில் நாகேஷ்
ரயில்வே துறையின் சிற்றுண்டியகத்தில்
பணியாற்றி வந்தார். நாடகத்தில் நடிக்க
வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அவர்,
ம.ரா. என்பவரைத் சந்தித்து வாய்ப்புக்
கேட்டார். ம.ரா. எழுதி இயக்கிய நாடகத்தில்
நாகேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் வயிற்று
வலியால் அவதிப்படும் நோயாளியாக
நடித்தார். சிறிய வேடமே என்றாலும், கிடைத்த
வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக்
கொண்டார்; நாடகத்தின்
பதினேழாவது காட்சியில் ஒன்றரை
மணித்துளிகளே வந்தாலும், அதில்
தனித்திறமையைக் காட்டினார்.“ஒன்றரை
நிமிடங்களுக்கு விதம் விதமான ஏற்ற
இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து
அம்மா என்று அலறி துடித்துக்
கதறி...யாரடா இவன்! திடீரென்று
வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே!
என்று பார்வையாளர்களுக்கெல்லாம்
அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத்தட்டலில்
அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை
அனுபவம் குறித்துச் சிரித்து வாழ வேண்டும்
என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார்
நாகேஷ்.அன்று நாடகத்திற்குத் தலைமை
விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து
நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர்
யார் தெரியுமா? மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர்.தான். “ஒரே ஒரு சீனில் வந்தாலும்
அபாரமாய் நடித்து, அனைவரையும்
கவர்ந்துவிட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற
ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக
வந்தாரே, அவரைத்தான்
சொல்கிறேன்!” என்று
சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த
இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன?”
என்று கேட்டுத் தெரிந்து கொண்டு.
“நாகேஸ்வரன் என்ற பெயர்
கொண்ட அவருக்கு நடிப்புக்கான
முதல் பரிசைக் கொடுக்கிறேன்!” என்று கூறி
நாகேஷுக்கு எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கினார்.
பிற்காலத்தில் நாகேஷ் என்கிற
அற்புதமான நகைச்சுவை நடிகர்
உருவாவதற்குப் பிள்ளையார் சுழி போட்ட அரிய
நிகழ்ச்சி இது!
செதுக்கிய பாலசந்தர்:
நாடகக் குழுக்களில் நடித்து வந்த நாகேஷ்,
கதாநாயகனாக நடித்த முதல் படம் சர்வர்
சுந்தரம். அந்தப் படத்தைத் தயாரித்தது புகழ்
பெற்ற ஏவி.எம்.நிறுவனம்; இயக்கியது
இரட்டையர்களான கிருஷ்ணனும் பஞ்சுவும்;
படத்திற்குக் கதை--வசனம் எழுதியது
கே.பாலசந்தர். நாகேஷ் என்னும் நடிகரின்
ஆளுமையைச் செதுக்கிப் பட்டை தீட்டியதில், -
அபாரமான திறமைகளை
வெளிப்படுத்தியதில் கே.பாலசந்தருக்குப்
பெரும் பங்கு உண்டு.கே.பாலசந்தரின் கை
வண்ணத்தில் உருவான எதிர்நீச்சல், மேஜர்
சந்திரகாந்த், பாமா விஜயம் முதலான
திரைப்படங்கள் நாகேஷ் என்னும் நடிகரின்
பன்முக ஆற்றலை என்றென்றும்
பறைசாற்றிக் கொண்டிருப்பவை. 1965-ல்
கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம்
நீர்க்குமிழி. அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
சேது என்னும் பாத்திரத்தினை ஏற்று நாகேஷ்
மிகச் சிறப்பாக நடித்தார். அதிலும்
குறிப்பாக,ஆடி அடங்கும் வாழ்க்கையடா,
ஆறடி நிலமே சொந்தமடா”என்னும்
சுரதாவின் அற்புதமான தத்துவப்
பாடலுக்கு நாகேஷ் நடித்திருக்கும் நடிப்பு,
இன்றளவும் காண்போர் உள்ளத்தை உருக்கும்.
வி.குமாரின் இசையில், சீர்காழி
கோவிந்தராஜன் அப்பாடலை அருமையாகப்
பாடியிருப்பார்.
சிகரம் தொட்ட திரைப்படங்கள்:
நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம்
தொட்ட திரைப்படங்கள் பல.
எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல
திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை
நயமாகவும் நுட்பமாகவும் அவர்
வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக,
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில்
அவர் ஏற்ற வைத்தி வேடமும், திருவிளையாடல்
படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம்
பெற்றவை. நகைச்சுவை நடிகர்கள் வேறு
எவரிடமும் காணப்பெறாத -
நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு
- நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும்
விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி
இருக்கும் எதிர்வினை ஆகும். சிவாஜிக்கு
இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக
நடிப்பில் சோபித்தார் நாகேஷ்.சந்திரோதயம்
படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல்
கொண்டு காசி யாத்திரைக்குப்
புறப்படுவார் நாகேஷ். எம்.ஜி.ஆர். அவரைத்
தடுத்தாட் கொண்டு
சமாதானப்படுத்தும் வகையில்,காசிக்குப்
போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்?
நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு
நாகேஷ்,பட்டது போதும் பெண்ணாலே -
இதைப்பட்டினத்தாரும்
சொன்னாரே!”என்று சரிக்குச்
சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று
பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்!
அன்பே வா!வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற
அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ்
என்பதை நிலைநாட்டி இருப்பார்!
கதை சொல்லும் காட்சி :
நாகேஷ் என்றதும் நம் நினைவுக்கு முதன்முதலில்
வருவது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை
திரைப்படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு அவர்
கதை சொல்லும் காட்சி. சபாஷ்!
சரியான போட்டி! என்று பாராட்டத்தக்க
வகையில் டி.எஸ்.பாலையாவும் நாகேஷூம்
அக்காட்சியில் போட்டி போட்டுக் கொண்டு
நடித்திருப்பார்கள்.அனுபவி ராஜா அனுபவி
படத்தில் மனோரமாவுடன் இணைந்து
துாத்துக்குடி மொழியில்,முத்துக் குளிக்க
வாரீகளா?மூச்சை அடக்க
வாரீகளா?”என்று பாடியிருக்கும் டூயட்
பாடலும் புகழ்பெற்றது.ரஜினி, -கமல்
படங்களில் நடிக்கும் போதும் இன்றைய
சூழ்நிலைகளுக்கு இசைவான கச்சிதமான நடிப்பை
வெளிப்படுத்தியவர். கமல்ஹாசனின்
அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி,
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படங்கள்
எக்காலத்துக்கும் ஏற்ற நடிகர் நாகேஷ்
என்பதற்குக் கட்டியம் கூறி
நிற்பவை.கமல்ஹாசனின் தயாரிப்பான
மகளிர் மட்டும் படத்தில் இதுவரை எவரும்
ஏற்றிராத - ஏற்கவும் துணியாத - ஒரு
பிணத்தின் பாத்திரத்தில் நடித்துத் திரை உலகையே
திரும்பிப் பார்க்க வைத்தவர். இந்த ஒரு
வேடத்திற்காகவே நாகேஷூக்கு ஆஸ்கார் விருது
என்ன, அதற்கும் மேலான விருதுகள்
இருந்தாலும் கொடுக்கலாம்!
ரஜினியின் தளபதியில் மம்முட்டியின்
உதவியாளர்களுள் ஒருவராக மூன்றே மூன்று
காட்சிகளில் மட்டும் வருவார்; என்றாலும்
அவரது நடிப்பு இயல்பாக அமைந்திருக்கும்.
ஆடல்- பாடல் காட்சிகளில் :
ஆடல் காட்சியிலும் தனித்திறமையை நயமாகவும்
நுட்பமாகவும் வெளிப்படுத்தியவர்
நாகேஷ். அவளுக்கென்ன? அழகிய முகம்!
(சர்வர் சுந்தரம்), தாமரைக் கன்னங்கள்! (எதிர்
நீச்சல்) இரு பாடல்கள் போதும், நாகேஷின்
ஆடல் திறனைப் பறைசாற்ற!வாழும்
காலத்தில் நாகேஷூக்குத் திரைப்பட உலகின்
எந்த உயரிய விருதும் கிடைக்கவில்லை என்பது
கசப்பான உண்மை (ஒருவேளை, வாழும்
காலத்தில் மகத்தான கலைஞர்களைக்
கண்டுகொள்ளாமல் இருப்பது தான்
தமிழனின் தனிக்குணம் போலும்!) ஆனாலும்,
மக்களின் மனங்கள் என்னும் சிம்மாசனத்தில்
தனிப்பெரும் நகைச்சுவை நாயகனாக
நாகேஷ் என்றென்றும் வீற்றிருப்பார்.-

************************************
நாகேஷ் எனும் மக்கள் கலைஞனின்
பிறந்தநாள் இன்று. குண்டுராவ்
என்றுஅழைக்கப்பட்ட இவர்,
கம்பராமாயண நாடகம் பார்த்து
நடிக்கும் ஆர்வம் ெற்று சென்னை
வந்தார்.
கவிஞர் வாலியுடன்
தங்கிக்கொண்டு, ரயில்வேயில் வேலை
பார்த்து வந்த காலத்தில் ஒரு
நாடகத்தில் வயிற்று வலிக்காரனாக
இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார்
எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார்.
ஆனால், அதையாரும் பாராட்டவில்லை.
நாகேஷை போலீஸ் கூப்பிட்டு, கோப்பையை திருடி
வந்தாயா என்று விசாரிப்பது தான்
நடந்தது.
அப்பொழுதில் இருந்து விருதுகளை
வைக்க என்று வீட்டில் எந்த இடமும்
தனியாக வைத்தது இல்லை அவர்.
ரெஜினா எனும் கிறிஸ்துவ
பெண்ணை காதலித்து திருமணம்
செய்து கொண்டார்.
வாகினி ஸ்டுடியோ ஓனரை, யாரென்று
தெரியாமல் கிண்டலடித்த
பொழுது இவரின் நடிப்பை பார்த்து
பிரமித்து போய் அவர் கொடுத்த
ஆயிரம் ரூபாயில் தான் தனது
திருமணத்தை நடத்திக்கொண்டார்
நாகேஷ்.
தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி
இருந்ததால் ஜெயகாந்தனும்
இவரும் காரில் காத்திருக்க நேர்ந்தது .
என்ன பண்ணலாம் என்று
யோசித்துக்கொண்டு இருக்கும்
பொழுதே ஜே.கே "பிச்சை
எடுக்கலாமா ?" என்று கேட்டிருக்கிறார்.
இருவரும் சட்டை,பேன்ட் ஆகியவற்றை
கழட்டிவிட்டு அண்டர் டிராயர் உடன்
அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள்.
நாகேஷ் தட்டில் குறைவாகவே பணம்
சேர்ந்திருக்கிறது
‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’,
‘அனுபவி ராஜா அனுபவி’ என்று
தொடர்ந்து ஜெயித்த நடிகர்
நாகேஷ், தில்லானா மோகனாம்பாள்
படத்தில் கொத்தமங்கலம் சுப்பு
நடித்தால் நன்றாக இருக்கும் என்று
சொல்லப்பட்ட 'வைத்தி'
கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி
எடுத்தார். மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து
கொண்டு
"தண்ணியெல்லாம் வத்திப்போச்சே"
என்று புலம்பிக்கொண்டு இருந்த
கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின்
தாக்கத்தை
அப்படியே திரையில் கொண்டு வந்து
நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான்
தருமி கதாபாத்திரம். சிவாஜி அதைப்
பார்த்து ரசித்து, கட்டே இல்லாமல் அது
ஸ்க்ரீனில் வருமாறு
பார்த்துக்கொண்டார். 'மகளிர்
மட்டும்' படத்தில் நாகேஷ் அவர்களின்
நடிப்பைப்பற்றி கமல் இப்படி
சொன்னார் "உண்மையாகச்
சொல்ல வேண்டுமானால்
நடித்து ’இருக்கவில்லை' என்றுதான்
சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இதில் நாகேஷ்
பிணமாக நடித்திருக்கிறார்'' என்றார்.
நாகேஷ் நடிப்பைப் பார்த்து பிரமித்த
வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரது
'அனுபவி ராஜா அனுபவி' படத்து
கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து
நடித்த மக்மூத் இவர் காலில் விழுந்து
மரியாதை செய்தார். நாகேஷ்
அவர்கள் வெறும் மவுனமான
உடல்மொழியின் மூலம்
காமெடி செய்யலாம் என்று
சாப்ளின்,பஸ்டர் கீட்டன் ஆகியோரை
பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு
திரையை அதிரவைத்தார்.
மதுப்பழக்கம்,ஒரு கொலை
வழக்கில் உருண்ட பெயர்
இவற்றைத்தாண்டி மீண்டும் திரையில்
மின்னினார் நாகேஷ். அவரது நடன
பாணி தனித்துவமானது. ஒரு முறை
சரியாக ஆடத்தெரியவில்லை
என்றொரு இயக்குனர் இவரை
கடிந்து கொள்ள, கதவை
மூடிக்கொண்டு பயிற்சி
செய்துவிட்டு வந்தார். நடனத்தில்
கலக்கி எடுத்தார். அப்படித்தான் அவரது
பாணி உருவானது. தமிழகத்தின்
ஜெர்ரி லூயிஸ் ஆனார் நாகேஷ்.
'பூவா தலையா?' படத்தின் ஒரு
காட்சியில் ரிக்ஷாக்காரனாக
நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம்
கூழைக் கும்பிடு போட்டு வணங்குவார். அப்போது
இல்லாத வசனமான 'இதுக்கு மேல
கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு' என்று
டயலாக் பேசி அதிரவைத்தார். 'அபூர்வ
ராகங்கள்' படத்தில் ஆக் ஷன் என்று
பாலச்சந்தர் சொன்னதும் நிழலை
பார்த்து சியர்ஸ் சொன்னார்
மனிதர் !
"உங்களுக்கு ஹீரோ மாதிரி
பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை.
ஆனா, நடிப்பு டான்ஸ்
எல்லாவற்றிலும்
பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி ?" என்று
கேட்ட பொழுது ,"மாவு நல்லா
அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு
மாசத்துக்கு ஒருமுறை கொத்து
வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன
வயசில் ஆண்டவன் வைத்த அம்மை
தழும்பால் தான் நான் நல்லா
பொளிஞ்சு இருக்கேன் !" என்றார்.
அது தான் நாகேஷ் !
'நம்மவர்' படத்துக்காக பெற்ற
சிறந்த துணை நடிகர் விருதைத் தவிர எந்த
மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான
கலைஞரை தேடிவரவில்லை.**** *****

தமிழக சார்லி சாப்ளின் நாகேஷ் பிறந்ததினம் இன்று,,


அவரைப் பற்றி...


நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்..!


* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!


* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!


* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!


* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!


* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!


* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!


* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!


* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!


* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!


* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!


* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!


* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!


* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!


* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!


* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!


* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!


* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!


* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!


* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!


* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!


* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'


* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'


* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!


* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!


* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக