சனி, 15 ஜூலை, 2017

இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் ஜூலை 16 ,2009


இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் ஜூலை 16 ,2009.

டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 , 1919 - ஜூலை 16 ,2009 . ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் , இவரது பேத்தி ஆவார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்  . மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும்  எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள்
தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி. அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார் .. அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி. கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள்
1939 ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பாரைத் திருமணம் செய்ய்துகொண்டார்.
இசைத் துறையில்
பட்டம்மாள் முறையாக கருநாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் டி. கே. ஜெயராமனுடன், 1940களில்
1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார் . பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன் ,
கோபாலகிருஷ்ண பாரதி மற்றும்
முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள்
ஜப்பான் , சிங்கப்பூர் , பிரான்சு, ஜெர்மனி ,
அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய ' அகிகோ 'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.

விருதுகள்

சங்கீத நாடக அகாடெமி விருது , 1962
பத்ம பூசண் , 1971
இசைப்பேரறிஞர் விருது , 1973
சங்கீத கலாசிகாமணி விருது , 1978, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
பத்ம விபூசண் , 1998
தேசியகுயில்
சங்கீத கலாநிதி
கலைமாமணி விருது
காளிதாஸ் சம்மன் விருது.

‘தேசியக் குயில்’ என போற்றப்பட்ட பிரபல கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் (D.K.Pattammal)  அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். சிறு வயதிலேயே மகளுக்கு பாட்டு கற்றுத் தந்தார். இயற்பெயர் அலமேலு. செல்லமாக ‘பட்டா’ என்று கூப்பிடுவார்கள். அந்த பெயரே நிலைத்துவிட்டது. நான்கு வயதில் பாடத் தொடங்கினார்.
# 3 மாதக் குழந்தையாக இருந்தபோது ரமணரிடம் மகளை அழைத்துச் சென்றார் தந்தை. அவர் குழந்தையின் நாக்கில் தேன் தடவி ஆசிர்வதித்தார். ‘இசை ஞானம், குரல் வளத்துடன் நீ நன்கு பாடுவதற்கு ரமணரின் ஆசியே காரணம்’ என்று அடிக்கடி கூறுவார் தந்தை.
# முறையாக கர்னாடக இசை கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிதுகாலம் பயின்றார். அதன் பிறகு, மேடையேற்ற தயங்கினார் தந்தை. பட்டம்மாள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்முகுட்டி அம்மாள்தான் இவரது அபூர்வத் திறனை உணர்ந்து, தந்தையிடம் வாதாடி அனுமதி பெற்றுத் தந்தார்.
# கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களைக் கேட்டே திறமையை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக, நாயனா பிள்ளையின் கச்சேரிகள் இவருக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தன. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து, விடாமுயற்சியுடன் சாதகம் செய்வார். இவரது சகோதரர்களும் சிறந்த பாடகர்கள்.
# காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது, பாரதியார் பாடலைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றார். 1929-ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் இவரது முதல் கச்சேரி அரங்கேறியது.
# காங்கிரஸ் கூட்டங்களில் பாடினார். தமிழ் கீர்த்தனைகளை பிரபலமடையச் செய்தார். இவரது பாடல்கள் இடம்பெற்ற கிராமஃபோன் தட்டுகள் ஏராளமான விற்றன.
# நாடு விடுதலை அடைந்த அன்று இரவு முழுவதும் ‘விடுதலை, விடுதலை’, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்பது போன்ற தேசபக்திப் பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். ஆனால், அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். காந்தியடிகள் மறைந்தபோதும் வானொலியில் பாடியவர் ஊதியம் வாங்க மறுத்துவிட்டார்.
# முத்துஸ்வாமி தீட்சதரின் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். ‘தியாக பூமி’ (1939) படத்தில் முதன்முதலாக ‘தேச சேவை செய்ய’ என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடினார். அதேநேரம், பக்தி அல்லது தேசபக்தி பாடல் மட்டுமே பாடுவது என்பதில் உறுதியாக இருந்தார்.
# பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவ ரது மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தனது ஜப்பானிய சீடர் அகிகோ என்பவரை திருவையாற்றில் பாட வைத்தார்.
# பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘தேசியக் குயில்’ என்று போற்றப்பட்ட டி.கே.பட்டம்மாள் 90-வது வயதில் (2009) மறைந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக