சனி, 8 ஜூலை, 2017

இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்த தினம் , ஜூலை 9, 1930.



இயக்குநர்  கே. பாலச்சந்தர் பிறந்த தினம் , ஜூலை 9, 1930.

கைலாசம் பாலச்சந்தர் ( K. Balachander , கே. பாலச்சந்தர் , சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார்  . இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன் , எதிர் நீச்சல் ,
வறுமையின் நிறம் சிகப்பு , உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
வாழ்க்கையும், கல்வியும்
இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி. தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர். "கவிதாலயா " என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அறிமுகப்படுத்திய புதுமுகங்கள்
இயக்குனர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லவெனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.
அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.
மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.
எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த
மேஜர் சுந்தரராஜன் ( மேஜர் சந்திரகாந்த் ) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது.
எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.
சுவையான தகவல்கள்
தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன் , நாகேஷ் , மேஜர் சுந்தரராஜன் ,
கமலஹாசன் முத்துராமன் ஆகியோர்.
நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இயக்குனர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த
பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின்
புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

சிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி . 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.
பாலச்சந்தர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த
பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா , பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது),
பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.
அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்),
அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.
பல ஆண்டுகளுக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய நடிகர்கள் இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.
நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும்,
எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத் தாய் என்னும் அத்திரைப்படம் ஆர். எம். வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி. மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக
சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார்.
இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.
சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் . ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.
பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.
பாலச்சந்தர் இயக்கிய படங்கள்
நூல் வேலி
நீர்க்குமிழி
நாணல்
மேஜர் சந்திரகாந்த்
இரு கோடுகள்
பூவா தலையா
பாமா விஜயம்
தாமரை நெஞ்சம்
நான் அவனில்லை
புன்னகை
எதிர் நீச்சல்
சிந்து பைரவி
அபூர்வ ராகங்கள்
தண்ணீர் தண்ணீர்
அச்சமில்லை அச்சமில்லை
வறுமையின் நிறம் சிகப்பு
புதுப்புது அர்த்தங்கள்
பார்த்தாலே பரவசம்
நூற்றுக்கு நூறு
டூயட்
சிந்து பைரவி
சொல்லத்தான் நினைக்கிறேன்
ஒரு வீடு இரு வாசல்
ஜாதிமல்லி
பொய்
அக்னிசாட்சி
கல்கி
வானமே எல்லை
பாலச்சந்தர் இயக்கிய இந்தித் திரைப்படங்கள்
ஏக் தூஜே கே லியே - தெலுங்கில் மரோசரித்ரா
ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு
ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்
இவற்றில் முதலாவதைத் தவிர மற்றவை இரண்டும் பெரும் தோல்வியைத் தழுவின.
விருதுகள்
பத்மஸ்ரீ விருது , 1987
தாதாசாகெப் பால்கே விருது , 2010
மறைவு
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலசந்தர் திசம்பர் 23, 2014 அன்று காலமானார்.



தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர் கே.பாலசந்தர் (K.Balachander) பிறந்த தினம் இன்று (ஜூலை 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார் (1930). தந்தை, கிராம அதிகாரி. அதே ஊரில் பள்ளிப் படிப்பு பயின்றார். சிறு வயதிலேயே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 12 வயது முதலே நிறைய நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார். இதனால் சினிமா ஆசை விழுதுவிட்டது.
* சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. விலங்கியல் முடித்தார். கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது ஆகிய திறன்களை பட்டை தீட்டிக்கொண்டதால், கல்லூரி விழாக்களில் இவரது நாடகம் தவறாது இடம்பெறும். சென்னை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
* ஓய்வு நேரங்களில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக் கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இயக்கினார். இந்த நாடகம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 'நீர்க்குமிழி', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
* எம்.ஜி.ஆர். நடித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்துக்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை 1964-ல் தொடங்கினார். அடுத்த ஆண்டில் இவரது கதை, வசனம், இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது. 1981-ல் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
* தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறைந்த செலவில் நிறைவானப் படங்களைக் கொடுத்தவர். ரஜினி, நாசர், டெல்லி கணேஷ், சார்லி, விவேக், எஸ்.பி.பி., சரிதா, சுஜாதா, பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
* 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'பொய்', 'ரெட்டைச் சுழி', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்களில் மனித உறவு முறைகளுக்கு இடையேயான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் கருப்பொருளாக விளங்கின.
* கலைஞர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். 'தண்ணீர் தண்ணீர்', 'அபூர்வ ராகங்கள்', 'எதிர் நீச்சல்', 'வறுமையின் சிறம் சிவப்பு', 'அக்னி சாட்சி', 'வானமே எல்லை', 'உன்னால் முடியும் தம்பி', 'சிந்துபைரவி' உள்ளிட்ட ஏராளமான படங்கள் இவரைப் புகழேணியின் உச்சியில் ஏற்றின.
* 'இயக்குநர் சிகரம்' எனப் போற்றப்பட்டார். திரைத் துறையில் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் இவரை குருவாகப் போற்றினர். 'ரயில் சிநேகம்', 'கை அளவு மனசு' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். சின்னத்திரையில் நெடுந்தொடர் முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான்.
* இயற்கையை நேசித்தவர். மலையருவியும் கடற்கரையும் இவரது படங்களில் நிச்சயம் இடம்பெறும். 1995-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2010-ல் தாதா சாகேப் பால்கே விருது, எட்டு முறை தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், பத்ம அண்ணா விருது, கலைமாமணி, 12 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் வென்றவர்.
* அரை நூற்றாண்டுக்கும் மேல் திரையுலகில் வெற்றி உலா வந்தவரும், திரைப்பட 'உலக பிரம்மா', 'கலையுலக பாரதி' என்றெல்லாம் போற்றப்பட்டவருமான கே.பாலசந்தர் 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 84-வது வயதில் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக