வெள்ளி, 18 நவம்பர், 2016

இசையமைப்பாளர் சலில் சௌதுரி பிறந்த தினம் நவம்பர் 19.


இசையமைப்பாளர் சலில் சௌதுரி  பிறந்த தினம் நவம்பர் 19.

சலில் சௌதுரி ( Salil Chowdhury,
வங்காள : সলিল চৌধুরী; 'சொலில்
சௌதுரி'; 19 நவம்பர் 1923 – 5
செப்டம்பர் 1995) இந்திய
இசையமைப்பாளரும், கவிஞரும்,
எழுத்தாளரும் ஆவார். இவர்
வங்காள மொழி , இந்தி , மற்றும்
மலையாளத் திரைப்படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.
இளமைப் பருவம்
சலீல் சௌதுரி மேற்கு வங்கத்தில்,
இருபத்துநான்கு பர்கானா
மாவட்டத்தில் இன்று சுபாஷ்
கிராம் என்றழைக்கப்படும் சிங்க்ரி
போதா ஊரில் 1925 நவம்பர் 19
அன்று பிறந்தார். தன் இளமைப்
பருவத்தை சலீல் சௌதுரி
அசாமியத் தேயிலைத்
தோட்டங்களில் கழித்தார்.
அஸாமிய தேயிலைத் தோட்ட
ஊழியர்களின் பாடல்களும்
அஸாமிய நாடோடிப் பாடல்களும்
அவரை மிகவும் பாதித்துள்ளன.
இசையார்வமுள்ள அவரது தந்தை
பாக், பீத்தோவன், மொஸார்ட்
போன்றவர்களின் இசைத்
தட்டுகளைச் சேர்த்து
வைத்திருந்தார். மேலை
இசையில் சலீல் சௌதுரியின்
ஈடுபாடு மிக இளம் வயதிலேயே
உருவான ஒன்றாகும். மேலை
இசையின் தாக்கமே
கருவியிசைகளின்
சாத்தியக்கூறுகளைப் பற்றியும்
இசையில் ஒத்திசைவின்
முக்கியத்துவத்தைப் பற்றியும்
அவருக்கு கற்பித்தது. சலீல்
சௌதுரியின் சாதாரண
சினிமாப் பாடல்கள் கூட
அவற்றின் ஒத்திசைவு மிக்க
அமைப்புக்காகக் கவனிக்கத்
தக்கவை. இந்துஸ்தானி
இசையைத் தன்
தந்தையிடமிருந்தும்
அண்ணனிடமிருந்தும் கற்றார்.
சிறுவயதிலேயே அவர் ஒரு
நாடோடி. அந்த அலைச்சல், வங்க
பழங்குடி இசையையும்
அவருக்குப் பழக்கப்படுத்தியது.
சலீல் சௌதுரியின் இசையில்,
மேலை இசையும் நாட்டுப்புற
இசையும் சரியான விகிதத்தில்
கலந்து அதனை அழகூட்டின.
அரசியல் ஆர்வம்
பட்டப் படிப்புக்காகக் கல்கத்தா வந்த
சலீல் சௌதுரி அன்றைய அரசியல்
அலையால் ஈர்க்கப்பட்டு
மார்க்ஸியரானார். 1946 ல் அவர்
பாரதிய ஜன நாட்டிய சங்கம் என்ற
அமைப்புக்காக பாடல்களை
எழுதி இசையமைக்க
ஆரம்பித்தார். அக்காலத்தைய
சுதந்திர தாகத்தையும்
உழைக்கும் மக்களின்
எழுச்சியையும் பதிவு செய்ததன்
மூலம் அப்பாடல்கள் வங்கக்
கலாச்சாரத்தில் அழியா
இடம்பெற்றன. 'பிஜார்பதி டொமர்
பிஜார்' . 'ரன்னீர்', 'அபாக்
ப்ரொதிபி' முதலியவை சலீல்
சௌதுரியின்
வார்த்தைகளிலேயே
'நம்பிக்கையின், விழிப்புணர்வின்
பாடல்களாக' அமைந்தவை. தன் 20
வயதில் அவர் ஹேமந்த் குமார்
பாடிய 'காயார் போது ' என்ற
பாடலை இசையமைத்து வங்க
இசையில் புதிய அலையை
உருவாக்கினார். 'ப'ல்கீர் கான்'
என்ற பெயரில் வந்த அவரது
புதியவகைப் பாடல்கள் வங்க
இசையின் அடுத்த கட்டத்தை
உருவாக்கின
இசைத் திறமை
இசையை கோர்ப்பதில் சலீல்
சௌதுரி செய்த சோதனைகளை
அன்றுவரை இந்திய இசையில்
எவருமே செய்தது இல்லை.
பல்வேறு பாடகர்களை
பலவிதமான மெட்டுக்களில் பாடச்
செய்து அவற்றை
இசையொருமையுடன் கோர்த்து
பாடல்களை அமைக்கும் அவரது
முறை அவரது திறமையின்
சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் .
அவரே பாடல்களை எழுதி அவரே
இசையமைத்து அவரே பின்னணி
இசையை நடத்தி அனைத்து
நுட்பங்களுடன் அவரே பதிவும்
செய்வார். அவர் ஒரு மிகச் சிறந்த
இசை நடத்துநர்.
நூற்றுக்கணக்கான வங்க இசைப்
பாடல்களை அமைத்த சலீல்
சௌதுரி 41 வங்க
திரைப்படங்களுக்கும்
இசையமைத்துள்ளார். அவரது
முதல் படம் பரிபர்த்தன் [மாற்றம்] 1949
ல் வந்தது. 1994ல் வந்த' மகாபாரதி
'அவரது கடைசி வங்க திரைப்படம்.
அவரது வங்கப்பாடல்கள்
அனைத்துக்கும் பெரும்பாலும்
அவரே பாடல்களையும்
எழுதினார். பிமல் ராய் 1954ல்
சலில் சௌதிரியின் கதையான
'ரிக்ஷாவாலா'வை இந்தியில்
'தோ பிகா ஜமீன்' என்றபேரில்
சினிமாவாக எடுத்தபோது சலீல்
சௌதுரி அதற்கு இசையமைத்து
இந்தியில் நுழைந்தார். அப்படம்
1954ல் கேன்ஸ் திரைப்படவிழாவில்
சிறப்பு ஜூரி பரிசு பெற்றது.
ஆயினும் அப்படத்தின் அழியாப்
புகழ்பெற்ற பாடல்களான' தர்த்தி
கஹே புகார்' , 'ஹரியாலா
சவான்', 'ஜாரே 'போன்றவை
இந்தியாவெங்கும் விரிவாகக்
கவனிக்கப்பட்டன
இந்தித்
திரைப்படங்கள்
அதன்பின் சலீல் சௌதுரி இந்தி
திரையிசையை மாயம் போல
ஆக்கிரமித்துக் கொண்டார்.
பிராஜ் பாபு, நௌகரி,
அமானாத், டாங்கேவாலி, வாஸ்,
பரிவார், ஜாக்டே ரகோ, அபராதி
கௌன், ஏக் காவ் கி கஹானி, லால்
பத்தி, முசா•பர், ஜமானா
முதலியவை பெரும் புகழ்பெற்ற
படங்கள். இப்படங்களின் பாடல்கள்
இன்றும் வாழ்கின்றன. 1958 ல்
மதுமதி படத்தில் வந்த 11
பாடல்களும் இந்தி இசையுலகை
அதிரச் செய்தபோது சலீல்
சௌதுரியின் அலை உச்சத்தை
அடைந்தது. ' ஜா ரெ பர்தேசி'
என்றபாடல் இந்திய இசையின் மிக
மிக முக்கியமான ரொமாண்டிக்
பாடல் எனலாம். 'சுஹானா ச•பர் ',
'தில் தடப் தடப் கெ 'முதலியவை
இன்றும் மீண்டும் மீண்டும்
கேட்கப்படுகின்றன. பரக் , உஸ்னே
கஹா தா , சாயா , மாயா,
காபூலிவாலா, னந்த், மேரே
அப்னே, ரஜ்னிகந்தா , சோட்டி சி
பாத், ஜீவன் ஜோதி, மிருகயா,
னந்த் மகால் கியவை தொடர்ந்து
வந்த இசை வெற்றிப்படங்கள். 1994ல்
சுவாமி விவேகானந்தா
படத்துக்கு இசையமைத்தபடி சலீல்
சௌதுரி தன் இந்திப் பட
வரிசையை முழுமை செய்தார்.
மலையாளத்
திரைப்படங்கள்
தமிழ்நாட்டினர் சலில்
சௌதிரியின் இசையை 'செம்மீன்'
மலையாளப் படத்தின் பாடல்களின்
வழியாகத்தான் உடனடியாக
அடையாளம் கண்டுகொள்வார்கள்.
'கடலினக்கர போணோரே', 'மானச
மைனே வரூ' போன்ற பாடல்கள்
அரை நூற்றாண்டு காலம் தமிழ்
நாட்டையும் வசீகரித்தவை.
இன்றும் கேரளத்தைப் போலவே
தமிழ்நாட்டுக் கடற்கரையிலும்
பலசமயம் அப்பாடல்களின் இசையே
மீனவர்களின் இசையாக
அறியப்படுகிறது. பிற்பாடு
கடற்கரை சார்ந்த படங்களுக்குப்
போடப்பட்ட பாடல்களில் எல்லாம்
அவற்றின் சாயல் உள்ளது.
அவற்றை அமைத்த சலீல் சௌதுரி
ஒரு வங்காளி. சலீதாவின்
இசையின் தனித்தன்மையைப்
புரிந்துகொள்ள முக்கியமான
தொடக்கப்புள்ளி இது. அவரது
மெட்டுகள் அனைத்துமே
அனேகமாக பற்பல இந்திய
மொழிகளுக்கு மீண்டும் மீண்டும்
போடப்பட்டவை. வங்கத்து
மழைப்பாடல் மலையாள இரவு
விடுதிப் பாடலாகும். இந்தியில்
அது சோகப் பாடலாகலாம் .
கலாச்சாரத்தின் சாரத்திலிருந்து
பிறக்கும் இசைக்கு அனைத்து
கலாச்சாரங்களையும் கடந்து
மேலே நிற்கும் ஒரு பொது
வெளியில் ஒளிவிட முடியும்
என்று நிரூபித்தவர் சலீல்
சௌதுரி.
இன்றைய இந்திய
திரையிசையின் அனைத்து
பாணிகளிலும் ஆழமாக
ஊடுருவிய தனித்துவம் மிக்க
இசை மரபுக்கு சொந்தக்காரர்
சலீல் சௌதுரி. மொழியின்
எல்லைகளைக் கடந்து நிலவியல்
தனித் தன்மைகளைக் கடந்து
இந்தியத் துணைக்கண்டத்தின்
பல்வேறு உணர்ச்சிகரங்களின்
தருணங்களை இசையில்
பதிவுசெய்தது அவரது பாணி.
லதா மங்கேஷ்கர் முதல் ராஜ் கபூர்
வரை திரையுலகின் முதல்வர்கள்
அவரை ' எக்காலத்திற்கும் உரிய
திரையிசை மேதை ' என்று
புகழ்ந்தனர்.
இசையமைப்பாளர்களான சங்கர்
ஜெய்கிஷன் முதல் இஸ்மாயில்
தர்பர் வரையிலானவர்கள்
அம்மேதையின் இசையில்
உணர்ச்சிகளுடன் கருவிகளின்
இசையை இணைக்கும்
அமைப்புமுறையை கண்டு
பிரமித்துப் பாராட்டினர்.
ஆகவேதான் சலீல் சௌதுரி வங்க
இசையில் தாகூருக்குப் பின்பு
உருவான மிகப்பெரிய அலையை
உருவாக்கியவர் என்று
கருதப்படுகிறார்.
சலீல் சௌதுரி இசையமைக்கத்
தொடங்கியது 60 ஆண்டுகளுக்கு
முன்பு. வங்காளம் , இந்தி ,
மலையாளம் ,. தமிழ் , கன்னடம் ,
தெலுங்கு , மராத்தி , குஜராத்தி ,
ஒரியா , அஸாமியம் என ஏறத்தாழ
எல்லா இந்திய மொழிகளிலும்
சலீல் சௌதுரி
இசையமைத்துள்ளார். அவர்
அடிபப்டையில் ஒரு கவிஞர் ,
பாடலாசிரியர் , எழுத்தாளர் ,
நாடகாசிரியர் அத்துடன்
வங்கத்தின் முக்கியமான அரசியல்
செயல்வீரரும்கூட . மார்க்ஸியராக
இருந்த சலீல் சௌதுரி அரசியல்
போராட்டத்தில் சிறைவாசமும்
அனுபவித்திருக்கிறார்.
கேரளாவில்
இருபது வருடங்கள் வங்கத்தில்
கோலோச்சிய பின்பு 1965ல் சலீல்
சௌதுரி தென் எல்லையில்
கேரள மண்ணுக்கு வந்தார். முதல்
படம் செம்மீன் . இன்றும் மலையாள
இசையை பல வெளி மாநிலத்தவர்
செம்மீனின் இசைமூலமே
அடையாளம் காண்கிறார்கள்
என்பது ஓர் உண்மை. ஏழு
ராத்ரிகள், ஸ்வப்னம்,
நீலப்பொன்மான், நெல்லு, ராகம்.
ராசலீலா, ப்ரதீக்ஷா, அபராதி,
துலாவர்ஷம் தொடங்கி
தும்போலி, கடப்புரம் வரை அவர்
23 படங்களில் 106 பாடல்களை
உருவாக்கியிருக்கிறார் . மற்றும்
மூன்று படங்களுக்கு அவர்
பின்னணி இசை மட்டும்
அமைத்திருக்கிறார். அரவிந்தன்
இயக்கிய 'வாஸ்துஹாரா' என்ற
மலையாளப் படத்தில் இரு
வங்கமொழிப் பாடல்களை சலீல்
சௌதுரி
இசையமைத்திருக்கிறார். சலீல்
சௌதுரி இசையமைத்த சில
படங்கள் வரவேயில்லை. பல படங்கள்
மிகப்பெரிய பாக்ஸ் •பீஸ்
தோல்விகள். ஆனாலும் அவரது
இசை ஒளி மங்கவில்லை. பல
படங்கள் இன்று அவரது
பாடலாலேயே
அறியப்படுகின்றன. சலீல்
சௌதுரியின் புதியவகை
இசைக்கு ஏற்பப் பாடலமைக்க
மலையாள பாடலாசிரியர்கள்
திணறினர் . பலசமயம் அபத்தமான
வரிகளை எழுதினர். அவை
மேலும் அபத்தமாகப்
படமாக்கப்பட்டன. ஆனாலும்
அப்பாடல்கள் மலையாள மனதுக்கு
அன்னியமாகவில்லை. அவற்றின்
இசையே அவ்வுணர்ச்சிகளை
எளிய மலையாள மனதுக்குக்
கூட அளித்தன. ஒரு பாடலில்
வரிகளும் பின்னணி இசையும்
கூடிமுயங்கி
முழுமைசெய்துகொள்ளும்
சித்திரம் அவரால்தான்
மலையாளிக்கு
அறிமுகமாயிற்று
சலீல் சௌதுரி பெரும்பாலான
இசைக்கருவிகளை வாசிக்கத்
தெரிந்தவர் என்பதை அவரது
இசையில் ஏராளமான கருவிகள்
எந்தவிதமான பிறழ்வும் இன்றி
கூடி இசைவுகொள்வதன்மூலம்
காணக்கிடைக்கிறது. 'தபலா
முதல் சரோட் வரை, பியானோ
முதல் பிகாலோ வரை
அனைத்தையும்
வாசிக்கத்தெரிந்த அபூர்வ
மேதை' என்று சலீல்
சௌதுரிவைப்பற்றி ராஜ்கபூர்
ஒருமுறை சொன்னார்.
விசித்திரமான
வாத்தியங்களைக்கூட இந்திய
இசைக்கு ஏற்பப் பதப்படுத்தி
இந்திய உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி வழிகாட்டியவர்
அவர். ஓபோ [Oboe] •ப்ரெஞ்ச் ஹார்ன்,
மாண்டலின், சாக்ஸ•போன்
போன்றவற்றை அவர் பாடல்களில்
பயன்படுத்தியுள்ள முறை
அபூர்வமானது. குறிப்பாக சலீல்
சௌதுரிக்கு, பார்க்க
கிளாரினெட் போல இருக்கும்
இரட்டை ரீட் வாத்தியமான ஓபோ
மேலுள்ள காதல் ஆச்சரியமான
ஒன்று. பலபாடல்களில் அதை அவர்
பயன்படுத்தியுள்ளார்
மேலை இசை இந்துஸ்தானி
இசை மற்றும் வங்க நாட்டுப்புற
இசை ஆகியவற்றை நுட்பமாக
ஊடுபாவாகக் கலந்து
உருவாக்கப்பட்டவை அவரது
பாடல்கள். பாடலின் திரைப்படத்
தேவை, வணிக ரீதியான
நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு
உட்பட்டுத் தன் தனித்தன்மையை
இழக்காமல் படைப்பூக்கத்துடன்
உருவாக்கப்பட்டவை அவரது
பாடல்கள் என்பதுதான்
குறிப்பாகச் சொல்லவேண்டியது.
இன்று கலப்பிசை [ •ப்யூஷன்]
மோஸ்தராக உள்ளது. சலீல்
சௌதுரி அதற்கு முக்கியமான
முன்னோடி. பாகேஸ்ரீ , கலாவதி,
ஹமிர் கல்யாணி போன்ற
ராகங்களுக்கு பின்னணி
இசையாக மேலை நாட்டு
இசையை அவர்
அமைத்திருப்பதைக் காணலாம்.
அதேசமயம் அவர் மேலைநாட்டுப்
பின்னணி இசையமைப்பு
முறையைக் கண்மூடித்தனமாகப்
பின்பற்றவும் இல்லை. சலீல்
சௌதுரியின் இசையை எந்த
ஒரு வகைமைக்குள்ளும் அடக்க
இயலாது. இசை எப்போதும்
தன்னைக் கலைத்துக் கொண்டு
மீள மீள புதுப்பித்துக் கொண்டு
காலத்தின் தேவைக்கேற்பப்
புதுவடிவங்கள் கொண்டு
வளரவேண்டும். இல்லையென்றால்
அது உறைந்து போய்விடும்.
ஆனால் முன் நகரும் உந்துதலில்
நான் என் மரபை
விட்டுவிடலாகாது என்பதே என்
எண்ணமாகும் சலீல் சௌதுரி தன்
இசையின் அடிப்படை பற்றிச்
சொன்னது இது.
இணைமெட்டைத் [ obligato ]
திறமையாக பயன்படுத்துவது
சலீல் சௌதுரியின் இசையின்
முக்கியமான உத்தி. மைய
மெட்டுக்கு எதிரான மெட்டு
பலதிசைகளில் பிரிந்து வளர்ந்து
பாடலை ஒரு பின்னலாக
மாற்றிவிடும். மேலை
மரபிசையில் ஒரு முக்கிய
அம்சமாகக் கருதப்படும் கூறு
இங்கே இசையை வளரச்செய்யும்
கூறாக கையாளப்படுகிறது.
அவரது எதிர் மெட்டுகள் ஓபோ
மாண்டலின் போன்ற வாத்தியங்கள்
வழியாகவும் கூட்டுக் குரல்
தனிக் குரல்கள் வழியாகவும்
மெட்டின் குறுக்காக ஊடுருவிச்
செல்லும்போது நாம் இசையின்
மாயத்தை அறிகிறோம்.
சலீல் சௌதுரி மெட்டுதான்
பாடல் என்று உறுதியாக
நம்பினார். கேட்பவர் முதலில்
கவனிப்பது மெட்டைத்தான்,
மெட்டுதான் பாடலின் அடிப்படை
என்றார் அவர். அவரே ஒரு சிறந்த
பாடலாசிரியராக இருந்தாலும்
ஒரு சரியான மெட்டை
கண்டடைந்துவிட்டால் அதற்குரிய
வரிகளை உருவாக்குவது
பெரியவேலை இல்லை என்றே
அவர் எண்ணினார். தன் மெட்டுகள்
மீது அவருக்கு இருந்த அபாரமான
பிடிப்பும் பயிற்சியும்
காரணமாக வங்கத்தில் ஒரு
துள்ளல் நடனத்துக்குப் போட்ட
அதே மெட்டையே மலையாளத்தில்
ஓரு உணர்ச்சிக்
கொந்தளிப்புக்கும் போட அவரால்
முடிந்தது. அவரது மலையாளப்
பாடல்களில் பல சமயம் மலையாள
மணம் இல்லை. இந்திப்பாடல்களில்
இந்தி வாசனையும்
குறைகிறது. ஆனாலும் அவை
அவரது கனவுகள். ஆகவே
அழியாத உணர்ச்சிகளினால்
ஆனவை. அவ்வுணர்ச்சிகள்
மானுடப் பொதுவானவை. இசை
அவ்வுணச்சிகளின் மொழி.
அதற்கு மொழி இல்லை.
மொழியில் ஆழ வேரூன்றிய ஒரு
கவிஞர் சலீல் சௌதுரி என்பதை
நான் இங்கு நினைக்கவேண்டும்.
அவரது கவிதைகள் இன்றும்
அழியாத முக்கியத்துவத்துடன்
உள்ளன. ரவீந்திர பாரதி
பல்கலையில்
பாடமாக்கப்பட்டுள்ளன அவை.
ஆனால் இசை என்பது
மொழிகடந்தது என்று அவர்
எண்ணினார்.
மரபுவாதிகளின் எதிர்ப்பை சலீல்
சௌதுரி எதிர்கொள்ள
வேண்டியிருந்தது. அவர் வங்க
இசையை
மேலைமயமாக்குகிறார் என்று
சொல்லப்பட்டது. ஹார்மோனியமே
மேலைநாட்டுக் கருவிதானே
என்று சலீல் சௌதுரி அதற்குப்
பதிலளித்தார். குரல் என்பது ஒரு
பாடலின் ஒரு சிறு பகுதியே
என்றார் சலீல் சௌதுரி. முன் நகர
வாய்ப்பு அளிக்காத திறனாய்வு
உதாசீனம் செய்யப்படவேண்டியது
என்றார் அவர்.
சலீல் சௌதுரி மலையாளத்தில்
இசையமைத்தபோது
பாடலாசிரியர்களிடம் மோத
நேர்ந்தது. அவர்கள் மெட்டுக்குப்
பாடல் எழுதிப்
பழக்கமில்லாதவர்கள் . மரபான
யாப்பின் சொல்லாட்சிகளைக்
கையாள்பவர்கள். சலீல்
சௌதுரியின் மெட்டுகளுக்குப்
பொருந்த அவர்கள் வரிகளை
ஒடித்து மடக்கி மொழியை
இம்சை செய்தனர். சலீல் சௌதுரி
அதில் தெளிவாக இருந்தார்.
கவிதை என்பது கட்டுப்படுத்தப்பட்ட
மொழியே என்பது அவரது
எண்ணம். யாப்புக்கு
கட்டுப்படலாமென்றால் ஏன்
மெட்டுக்குக் கட்டுப்படலாகாது?
தேவை சற்று இசையார்வம்
மட்டுமே. தன் இறுதிக்காலத்தில்
'தம்புரான் 'என்ற படத்துக்கு
இசையமைத்துவிட்டு சலீல்
சௌதுரி சொன்னார்
முதன்முறையாக
மலையாளத்தில் தன் மெட்டும்
பாட்டும் சரியானபடி இணைந்து
வந்திருக்கிறது என்று. காரணம்
அதற்குள் மெட்டுக்கு எழுத
கவிஞர்கள் பழகிவிட்டிருந்தனர்.
அவ்விஷயத்தை
மலையாளத்துக்குக்
கொண்டுவந்ததே அவர்தான்.
சலீல் சௌதுரி மொழியறியாத
மன்னா தேவ் , லதா மங்கேஷ்கர்
போன்றவர்களை
மலையாளத்துக்குக்
கொண்டுவந்தார் என்று குற்றம்
சாட்டப்பட்டார். அதே சலீல்
சௌதுரி தான் ஜேசுதாஸை
வங்கமொழியிலும் பாடச்செய்தவர்.
மன்னா தேவ் பாடிப் புகழ்பெற்ற
மலையாளப் பாடலான 'மானச
மைனே வரூ' வின் வங்க
வடிவத்தை ஜேசுதாஸ் பாடினார்.
அவரது போக்குக்குச் சிறந்த
உதாரணம் இது.
1958 ல் சலீல் சௌதுரி எழுதிய
கட்டுரை ஒன்றில் 'இந்தியத்
திரையிசையின் எதிர்காலம்'
இந்திய திரை இசை மெட்டுகள்
சார்ந்து பின்னணி இசைக்கு
அதிக இடமளித்தபடி முன் நகரும்
என்று சொல்லியிருந்தார். அவர்
போட்ட பாதையில் ஆர். டி. பர்மன்
போன்றவர்கள் முன் நகர்ந்தார்கள்.
மலையாள இசையில் சலீல்
சௌதுரியின் உதவியாளர்களான
கெ ஜெ ஜாய் , சியாம்
போன்றவர்கள் முன் நகர்ந்தனர்.
தமிழ்த்
திரையிசையில்
சவுதிரியின்
பங்கு
இன்றைய தமிழ் திரைப்பட
இசைக்கு உண்மையான
முன்னோடி சலீல் சௌதுரி
என்றால் அது மிகையல்ல. அவர்
குறைவாகவே தமிழில்
இசையமைத்திருக்கிறார். ஆனால்
இன்றைய திரையிசையின் இரு
பெரும் சக்திகளான இளையராஜா
, ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய
இருவருமே சலீல் சௌதுரியின்
வழிவந்தவர்கள்தான் .
இளையராஜா சலீல்
சௌதுரியின் குழுவில்
கித்தாரும் காம்போ ஆர்கனும்
வாசிப்பவராக அறிமுகமானவர்.
அவரிடம் சலீல் சௌதுரியின்
செல்வாக்கு நேரடியானது.
அவரது கணிசமான பாடல்கள் சலீல்
சௌதுரியின் பாணியை
அப்படியே பின்பற்றுபவை.
நாட்டாரிசையை
மேலையிசையுடன் பிணைத்தல்,
பின்னணி இசையை பாடலுடன்
பிரிக்கமுடியாதபடி பின்னி
விரித்தல் போன்றவை அவர் சலீல்
சௌதுரியிடமிருந்து கற்றுக்
கொண்டவை. தான் சலீல்
சௌதுரியின் ஒரு பெரும்
ரசிகன் என்பதை இளையராஜா
எப்போதுமே சொல்வதுண்டு.
ராஜாவின் விரிவான பின்னணி
இசை அமைப்பு முறைகள் [ chord
progressions, choral background
arrangements] மற்றும் இணை
மெட்டைத் [ parallel melody/ obligato ]
திறம்படப் பயன்படுத்தும் முறை
ஆகியவை சலில் சௌதுரியின்
பாணியிலிருந்து
கற்றுகொண்டவை
ஏ. ஆர். ரஹ்மானின் தந்தை ஆர். கே.
சேகர் சலீல் சௌதுரியின்
குழுவில் பணியாற்றியவர். அதே
பாணியில் பல படங்களுக்கு
இசையமைத்தவர். ரஹ்மானின் பல
அடுக்குகளிலான பின்னணி
இசை நகர்வுகள் சலீல்
சௌதுரியின் பாணி தான்.
தமிழ்த்
திரைப்படங்களில்
சவுதிரி
சலீல் சௌதுரி 1971ல் உயிர் என்ற
படத்துக்கு பின்னணி
இசையமைத்தார். செம்மீன்
இயக்குநரான ராமுகாரியட் தன்
கரும்பு என்ற தமிழ் படத்துக்கு
இசையமைக்க 1972 ல் சலீல்
சௌதுரிவை அழைத்தார். அப்படம்
பின்பு கைவிடப்பட்டது. ஆனால்
அதில் உள்ள 'திங்கள் மாலை
வெண்குடை' 'கண்ணே
கண்மணியே' போன்ற பாடல்கள்
எழுபதுகளில் இலங்கை
வானொலியில் மிகப் பிரபலமாக
இருந்தன. 1978ல் கமலஹாசன் நடித்த
மதனோத்சவம் தமிழில் பருவமழை
என்றபேரில் மொழிமாற்றம்
செய்யப்பட்டபோது சலீல்
சௌதுரியின் 'மாடப்புறாவே
வா' ' தேன்மலர் கன்னிகள் '
'கலைமகள் மேடை நாடகம்' 'அங்கே
செங்கதிர்' போன்ற அரிய
மெட்டுகள் இங்கே
பிரபலமடைந்தன.
1977 ல் பாலுமகேந்திரா
கன்னடத்தில் கோகிலா படத்தை
இயக்கியபோது அதற்கு சலீல்
சௌதுரி இசையமைத்தார். அவர்
1979ல் அழியாத கோலங்களை
தமிழில் இயக்கியபோது சலீல்
சௌதுரி அதற்கும்
இசையமைத்தார். அதில் உள்ள ' பூ
வண்ணம் போல நெஞ்சம்' 'நாள்
எண்ணும் பொழுது' போன்ற
பாடல்கள் புகழ்பெற்றன.
1980ல் சலீல் சௌதுரி
இசையமைத்த 'தூரத்து
இடிமுழக்கம்' அவரது கடைசி
தமிழ்ப் படம். அதில் உள்ள 5 பாடல்கள்
புகழ்பெற்றவை. 'மணிவிளக்கால்
அம்மா' 'செவ்வெள்ளிபூவே'
'வலையேந்திச் செல்வோம்'
ஆகியவற்றுடன் அதில் வரும்
ஆங்கிலப்பாடலான 'There is a rainbow
in the distant sky' யும்
முக்கியமானது.
ஆங்கிலப்பாடலை சலீல்
சௌதுரியே எழுதினார்.
ஆனால் இப்படத்தில் வரும்
'உள்ளமெல்லாம் தள்ளாடுதே'
என்றபாடல்தான் தமிழில் சலீல் சலீல்
சௌதுரியின் சிறந்த பாடல்
எனலாம். ஆனால் அன்றைய
சிவாஜி , எம். ஜி. ஆர் யுகத்தின்
தேவைகளை மென்மையும்
நுட்பமும்கொண்ட சலீல்
சௌதுரியின் இசையால்
நிறைவேற்ற முடியவில்லை.
அவரது நேரடிப்பங்களிப்புத்
தமிழில் குறைவே.
ஒர் இசையமைப்பாளராக சலீல்
சௌதுரியின் பங்களிப்பு
நுட்பமாகப் பார்த்தால் மிகமிக
ஆழமான ஒன்றாகும். இந்திய
இசையானது லாபனையை
மையமாகக் கொண்டது. நம்
காதுகள் அப்படி இசை கேட்பதற்கு
பழகிப் போனவை. இது பல
நூற்றாண்டுகளாக நம்மில் ஊறிய
விஷயம். சலீல் சௌதுரி
மேலையிசையில் ஒருவித
முழுமையை அடைந்திருந்த
இசையொழுங்கை [Orchestra] நம்
திரையிசையில் நிறுவினார்.
இன்று நாம்
இளையராஜாவையோ ஆர். டி.
பர்மனையோ ஏ. ஆர்.
ரஹ்மானையோ கேட்கும்போது
சாதாரணமாகவே பின்னணி
இசையையும் பின்னணி
ஓசைகளையும் எல்லாம்
இணைத்து நம் மனதில்
ஒட்டுமொத்தமாக
அவ்விசைக்கோலத்தை
உருவாக்கிக் கொள்கிறோம்
என்றால் அதற்கு அடித்தளமிட்டவர்
சலீல் சௌதுரி தான். இது
மேலையிசையில் உள்ள ஒரு
சிறப்பம்சத்தை இந்திய இசையுடன்
வெற்றிகரமாகப் பிணைத்ததன்
மூலம் உருவானது. இன்று உள்ள
எல்லா திரையிசைப் பாடல்களும்
இப்படிப்பட்ட கலப்பிசை தான். ஒரு
தேசத்தின் இசை ரசனையை
மாற்றியமைப்பது என்றால் அது
சாதாரணமான விஷயமல்ல .
தணியாத புதுமை நாட்டமும்
பல்வேறுபட்ட இசை மரபுகளில்
பயிற்சியும் கொண்ட சலீல்
சௌதுரி போன்ற
மேதைகளினாலேயே அது நிகழ
முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக