செவ்வாய், 10 அக்டோபர், 2017

நடிகை மனோரமா நினைவு தினம் அக்டோபர் 10.


நடிகை மனோரமா நினைவு  தினம் அக்டோபர் 10.

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.


பிறப்பு: மே 26, 1943
பிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.


நாடகத் துறையில் ஒரு பயணம்

ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.
திரைப்படத்துறையில் அவரது பயணம்
அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.


கலையுலக வெற்றிப் பயணம்

தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.


தனிப்பட்ட வாழ்க்கை

சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.


விருதுகளும், மரியாதைகளும்.

தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மறைவு
மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.


கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்!

* 1957-ம் வருஷம், கவிஞர் கண்ணதாசன் திருச்சிக்குப் போனபோது, மனோரமாவின் நாடகத்தைப் பார்த்தார். 'சிறப்பான வார்த்தை உச்சரிப்பும் நடிப்புத் திறமையும் உன்னிடம் இருக்கு. மெட்ராஸ் வந்தால் என்னை வந்து பாரு. சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தரேன்'னு சொன்னார். இந்நிலையில், தன் நாடக கம்பெனியில் மனோரமாவை நடிக்கவைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னைக்கு அழைச்சுட்டு வந்தார். அப்புறம், 'மாலையிட்ட மங்கை' படத்துக்காக, தயாரிப்பாளர் கண்ணதாசன் நடிகையாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சினிமா, நாடகம் என மாறி மாறி நடிச்சாங்க.
* 'மாலையிட்ட மங்கை' படத்தின் நாயகனாக டி.ஆர்.மகாலிங்கம், நாயகிகளாக பண்டரிபாய் மற்றும் மைனாவதி ஒப்பந்தம் செய்யப்பட்டாங்க. அதனால், 'உனக்கு நகைச்சுவை வேடம். உனக்கு ஜோடி,
'காக்கா' ராதாகிருஷ்ணன்' என கண்ணதாசன் சொன்னார். 'நகைச்சுவை வேடம் வேண்டாம். கதாநாயாகியாகவே நடிப்பேன்' என்றார் மனோரமா. அவங்களை சமாதனம் செய்தே அதில் நடிக்கவெச்சார் கண்ணதாசன். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு காபி கொடுத்து பேசுவதுதான் மனோரமாவின் முதல் காட்சி. நீளமான வசனம். பலமுறை சொல்லிக்கொடுத்தும் மனோரமாவால் சரியாகப் பேச முடியலை. இதனால், 'மனோரமாவைப் படத்திலிருந்து நீக்கிடலாம்'னு டைரக்டர் சொன்னார். 'பயிற்சி கொடுத்தா நல்லாப் பேசுவாங்க'னு நான் சொன்னேன். மனோரமாவின் வீட்டுக்கே போய் பயிற்சி கொடுத்தேன். மறுநாள் ஒரே டேக்ல சிறப்பா நடிச்சு கைத்தட்டல் வாங்கினாங்க.


* 'நான் ஆசைப்பட்ட மாதிரி கதாநாயகியா நடிச்சிருந்தால் பத்து வருஷத்தில் ஃபீல்ட் அவுட்டாகியிருப்பேன். காமெடி நடிகையா நடிச்சதால்தான் 1,500 படங்களுக்கும் மேலாக, அஞ்சு தலைமுறையா நடிச்சுட்டிருக்கேன். என் வளர்ச்சியில் உங்க பங்கு மகத்தானது' என என்னிடம் கண்ணீர்விட்டு பேசுவார். 'உன்னை மாதிரி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதில் நீதான் பெரிய நட்சத்திரமா வந்த; அதுக்கு முழுக் காரணம், உன் உழைப்பும் திறமையும்தான்'னு நானும் சொல்வேன்.
* கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியா நடிச்சுட்டிருந்தாலும் நாடகத்தில் நடிக்கிறதை வழக்கமா வெச்சிருந்தார். தினமும் அவங்க அம்மா காலைத் தொட்டு வணங்கிட்டுதான் ஷூட்டிங் கிளம்புவார். காலையில் ஏழு மணிக்குக் கிளம்பினால், ஷூட்டிங் முடிச்சுட்டு வீடு திரும்ப நடுராத்திரியாகிடும்.
* மன்னார்க்குடியில் பிறந்து, நான்கு வயசிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க மனோரம்மா. மன்னார்குடி நாடக கம்பெனியில் நடிச்சுட்டிருக்கும்போது, சக நடிகரான ராமநாதனை காதலிச்சாங்க. அம்மாவின் எதிர்ப்பை மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. மகன் பூபதி பிறந்த கொஞ்ச நாளில் மனோரமாவைப் பிரிஞ்சு ராமநாதன் இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டார். அம்மா, மகன் மட்டும்தான் மனோரமாவின் துணை. ராமநாதன் இறந்தச் சமயத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பி, அவங்க குடும்பச் செலவுக்கு 25,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். 'உன்னைத் தவிக்கவிட்டுப்போனவரின் இறப்புக்குப் போகக்கூடாது'னு அவங்க அம்மா சொல்லியும், கணவரின் உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினாங்க மனோரமா.

* வறுமையோடு சென்னைக்கு வந்தாலும், தன் திறமையால் ஆயிரக்கணக்கான படங்களில் நடிச்சு கோடிக்கணக்கான சொத்துக்களைச் சம்பாதிச்சாங்க. ஆனால், நல்லத் தூக்கம் இல்லாம, சரியா சாப்பிடாம, எந்த உறவுகளின் அரவணைப்பும் இல்லாம, நிறைய நம்பிக்கை துரோகங்களைச் சந்திச்சாங்க. புகழ் மற்றும் வசதிகளுக்கு இடையே ஆச்சி சந்திச்ச சவால்கள் ரொம்ப அதிகம். தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் அடிக்கடி என்னைச் சந்திச்சு மனம்விட்டுப் பேசி அழுவாங்க. மூட்டுவலியால் ரொம்பவே வேதனைப்பட்டாங்க. ஆனாலும், எதையுமே காட்டிக்காமல், சினிமாவில் நடிச்சு மக்களை மகிழ்விச்சாங்க.
* நடிகர் சிவாஜி கணேசனும் மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தன் வீட்டிலிருந்து சாப்பாட்டைக் கொண்டுவந்து, ஷூட்டிங்கில் சிவாஜிக்கு தன் கைப்பட பரிமாறுவாங்க மனோரமா. சிவாஜி மறைந்த பிறகும் அவர் குடும்பத்தின் உறுப்பினராகவே இருந்துவந்தாங்க.

* ஒருநாளில் எத்தனை படங்களில் நடிச்சாலும், கொடுத்த கால்ஷீட்படி சரியா முடிச்சு கொடுத்துடுவாங்க. சினிமாவில் சில டேக் வாங்குவாங்க. ஆனா, மேடை நாடகங்களில் எத்தனை பக்க டயலாக்கா இருந்தாலும் சுலபமா நடிச்சுடுவாங்க.
* தமிழ் மட்டுமே தெரிஞ்சிருந்தாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடிச்சுப் புகழ்பெற்றாங்க. 'சின்ன கவுண்டர்', 'சின்ன தம்பி' படங்கள் ஆச்சிக்கு ரொம்பப் பிடிக்கும்.
* ஒரு பிரச்னையின் காரணமாக நடிகர் நாகேஷ், தன் மனைவியுடன் சிறிது காலம் மனோரமாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, ஏற்பட்ட ஒரு பிரச்னை ஆச்சியை ரொம்பவே கஷ்டப்படுத்துச்சு. அந்த நிகழ்வுக்குப் பிறகு, 'நாகேஷ் அண்ணன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கிறார். எனக்கு நரக வேதனையா இருக்கு'னு சொல்லி பல வருஷங்களா புலம்பினாங்க.
* தன்னுடன் நடித்த நடிகர்களை பற்றி எங்கேயும் எந்தக் குறையும் சொல்ல மாட்டார் மனோரமா. கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், 'கோவை' சரளா போன்ற சக நகைச்சுவை கலைஞர்களை எப்பவுமே உயர்வாகப் பேசி, பாராட்டிட்டே இருப்பாங்க. பிற்காலத்தில் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித்குமார் என தன் மகன்களாக நடித்த எல்லா நடிகர்களிடமும் சொந்த அம்மா மாதிரி பாசம் காட்டிப் பழகினாங்க.


* 'சில வருஷங்களாகவே தொடர்ந்து பல மூத்த சினிமா கலைஞர்களும் இறந்துட்டிருக்காங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு'னு அடிக்கடி சொல்லிட்டிருந்தாங்க. கே.பாலசந்தர் இறந்தபோது, என்னைப் பார்க்க வந்தாங்க. 'நம்ம ஆளுங்களில் சிலர் மட்டும்தான் அண்ணா உயிரோடு இருக்காங்க. எனக்கும் உடம்பு ரொம்பவே முடியலை. அடுத்து நானாகூட இருக்கலாம்'னு சொன்னாங்க. அதன்படியே சில மாசத்தில் மனோரமா இறந்துட்டாங்க.


* காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, ஒருமுறை மனோரமாவின் ஒரு திரைப்படத்தைப் பார்த்து, அவர் நடிப்பை ரொம்பவே பாராட்டினார். இது தெரிஞ்சதும், காமராஜரைச் சந்திக்க அனுமதி வாங்கச்சொன்னார். அதன்படி, தன் மகனுடன் என்னையும் அழைச்சுட்டுப்போய் காமராஜரைச் சந்திச்சார். 'உங்க நடிப்பு ரொம்பவே சிறப்பா இருக்கு. நீங்க பெரிய கலைஞரா உயர்ந்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கணும்'னு காமராஜர் வாழ்த்தினதும் நெகிழ்ந்துபோயிட்டாங்க.

* கற்பகம் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்காக நடிச்சுட்டிருந்தாங்க. டிரஸ் மாற்றும் சமயத்தில் அவங்களை பாம்பு கடிச்சுடுச்சு. மயிலாப்பூரில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மனோரமாவை என் மனைவி சுகுணா அழைச்சுட்டுப்போனாங்க. ரெண்டு நாள் மட்டுமே சிகிச்சை எடுத்துகிட்டு, மீண்டும் ஷூட்டிங்ல கலந்துகிட்டாங்க. இதுபோல, ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் குதிரையிலிருந்து கீழே விழுந்து மயங்கிட்டாங்க. ஒரு வாரம் சிகிச்சை பெற்றவங்க, முழுசா குணமாகும் முன்பே படப்பிடிப்பில் கலந்துகிட்டாங்க. தன் உடலுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக்கூடாதுனு நினைக்கிறவங்க மனோரமா.

* அம்மா மற்றும் மகனுடன் மட்டுமே வாழ்ந்த காலத்தில், தன் வீட்டில் சில நாய்களைப் பாசமாக வளர்த்தாங்க. 'மனுஷங்க பலரும் நம்பவெச்சு ஏமாத்திட்டாங்க. ஆனால், இந்த ஜீவன்கள் நன்றி விசுவாசத்தோடு இருக்கு'னு அடிக்கடி சொல்வாங்க. அந்த நாய்களை பிள்ளைகள்போல அன்பு காட்டி வளர்த்தாங்க.

* அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்திருந்தவர். அவங்களோடு நல்ல நட்பில் இருந்தார். அவங்க மாற்றுக் கட்சிகளாகவும், தங்களுக்குள் போட்டி உணர்வுடனும் இருந்தாலும், ஆச்சியிடம் ஒரே மாதிரியான நட்போடு இருந்தாங்க.
* ஆயிரக்கணக்கான சினிமா படங்களில் நடிச்சிருந்தாலும், மேடை நாடகங்களில் நடிக்கிறதையே பெருமையா நினைப்பாங்க. நாடக நடிகர்கள் பலரும் ஏழ்மையில் இருந்ததால், அவங்க பசங்களின் கல்யாணத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவி செய்வாங்க . இந்தப் பழக்கம் ஆரம்பத்திலிருந்து, ஆச்சியின் இறுதி காலம் வரைக்கும் தொடர்ந்துச்சு. இந்த விஷயம் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது.

* வார்த்தைக்கு வார்த்தை என்னை அண்ணா எனவும், என் மனைவியை அண்ணி எனவும் கூப்பிடுவாங்க. எனக்குத் தெரியாமல் ஒரு வீடு வாங்கி, தக்கச் சமயத்தில் அதை எனக்குப் பரிசாகக் கொடுத்து உதவின என் உடன்பிறவா தங்கை ஆச்சி மனோரமா.நன்றி விகடன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக