சனி, 14 அக்டோபர், 2017

இயக்குநர் ஏ. பீம்சிங் பிறந்த தினம் அக்டோபர் 15, 1924 .



இயக்குநர் ஏ. பீம்சிங்  பிறந்த தினம் அக்டோபர் 15, 1924 .

ஏ. பீம்சிங் (அக்டோபர் 15, 1924 - சனவரி 16, 1978) தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர்.
திரையுலக வாழ்க்கை
கிருஷ்ணன் - பஞ்சு என்றழைக்கப்பட்ட இரட்டை இயக்குநர்களிடம் ஒரு உதவித் தொகுப்பாளராகத் தனது தொழிலைத் துவக்கினார். பின்னர் உதவி இயக்குநர் என முன்னேறி, இயக்குநர் ஆனார். குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் படங்களை இயக்கினார். பெரும்பாலும் 'பா' என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட தலைப்புகளைத் தனது திரைப்படங்களுக்குச் சூட்டினார்.

இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்.

1. அம்மையப்பன் (1954)
2. ராஜா ராணி (1956)
3. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959)
4. பாகப்பிரிவினை (1959)
5. சகோதரி (1959)
6. படிக்காத மேதை (1960)
7. களத்தூர் கண்ணம்மா (1960)
8. பெற்ற மனம் (1960)
9. பாவ மன்னிப்பு (1961)
10. பாலும் பழமும் (1961)
11. பாசமலர் (1961)
12. படித்தால் மட்டும் போதுமா (1962)
13. பந்த பாசம் (1962)
14. செந்தாமரை (1962)
15. பார் மகளே பார் (1963)
16. பச்சை விளக்கு (1964)
17. பாலாடை
18. கணவன் மனைவி (1976)
19. சில நேரங்களில் சில மனிதர்கள், (1977)
20. நீ வாழவேண்டும் (1977)
21. இறைவன் கொடுத்த வரம் (1978).

இவரும், நடிகர் திலகமும் சேர்ந்து :ப: வரிசை படங்கள் 14 கொடுத்திருக்கிறார்கள்.
திரையுல பிரபலங்களாகத் திகழ்ந்த சிவாஜியும், ஜெமினியும் இணைந்து இவரின் பெரும்பாலான படங்களில் நடித்துள்லது சிறப்பு.
இன்றும் திருமண இல்லங்களில் தவறாமல் இடம் பெறும் "வாராயென் தோழி" பாடல் இவரது பாசமலரில் இடம் பெற்ற ஒன்று என குறிப்பிட வேண்டிய ஒன்று,
1978ல்  அமரரான இவர்    தன் குறுகிய கால வாழ்நாளில் அரும் பெரும் சாதனைகள் புரிந்த இயக்குநர்.

தேசிய விருதுகள்

1959ல் குடியரசுத் தலைவர் வெள்ளிப்பதக்கம் சிறந்தத் தமிழ்ப் படம் - பாகப்பிரிவினை
1961 மெரிட் சான்றிதழ் களத்தூர் கண்ணம்மா
1961 மெரிட் சான்றிதழ் பாவமன்னிப்பு
1961 சிறந்த படம் சான்றிதழ் பாசமலர்
1964 சான்றிதழ் - பழனி.



"பீம்சிங் அல்ல 'பா'ம்சிங்"

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை பிரகாஷ்ராவை அடுத்து இயக்குநர் பீம்சிங் தொடர்ந்து இயக்குவதற்கான வேலைகள் ஏவி.எம். ஸ்டுடியோவில் தொடங்கின. இதற்கு முன் எடுத்த காட்சிகளை வைத்துக்கொண்டு மேலும் படத்தை எப்படி நகர்த்தலாம் என்று படக் குழுவினருடன் பீம்சிங் கலந்தாலோசித்து எடுத்த அந்தப் படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.
பீம்சிங் முதன்முதலில் இயக்கிய ‘செந்தாமரை’ வெளிவர தாமதமானதால், ‘அம்மையப்பன்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதற்காக பீம்சிங் துவண்டுவிடாமல் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி பயணப்பட்டு, ‘பா’ வரிசைப் படங்களை வெற்றிகரமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். ‘பதிபக்தி’, ‘பாலும் பழமும்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, பார்த்தால் பசி தீரும்’, ‘பார் மகளே பார்’ உள்ளிட்ட அவரது ‘பா’ வரிசைப் படங்களில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும். ஏவி.எம். சரவணன் சார் ‘இவர் பீம்சிங் இல்லப்பா… பாம்சிங்’ என்பார். இந்த ‘பா’ வரிசைப் படங்களுக்கு பீம்சிங்குக்குப் பக்கபலமாக இருந்தவர் எடிட்டர் ஏ.பால்துரைசிங்கம்.
தமிழகத்தின் சிறந்த எடிட்டர்களில் ஒருவரான எடிட்டரும், இயக்குநருமான பி.லெனின், பாரதிராஜா படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இருவரும் பீம்சிங்கின் மகன்கள். அவரைப் போலவே இவர்களும் திரையில் முத்திரை பதித்து வருகிறார்கள்.
‘களத்தூர் கண்ணம்மா’ தெலுங்கில் ‘மோக நூமு’ என்கிற பெயரில் டி.யோகானந்த் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் விவசாயி எஸ்.வி.சுப்பையாவின் மகள் சாவித்திரி கர்ப்பமானதற்குக் காரணம் தன் மகன் என்று டி.எஸ்.பாலையாவுக்குத் தெரியவரும். மகள் இப்படி நிலைகுலைந்து நிற்கிறாளே என்கிற கோபத்தில் ‘அவன் யாரு… சொல்லு? சொல்லுலேன்னா உன்னைக் கொன்னுடுவேன்’ என்று எஸ்.வி. சுப்பையா கோபத்தில் கையைத் தூக்குவார். அந்த சமயம் அங்கு வரும் பாலையா ‘அந்தப் பொண்ண கொன்னுட்டா, நீ கொலையாளி ஆகிடுவே. பொண்ணுக்கு மானம் போயிடும். இதுக்கு ஒரே வழி. பேசாமல் அவளை கூட்டிட்டு வெளியூருக்குப் போயிடு’ என்று தன் மகன் செய்த தவறை மறைத்து, எஸ்.வி. சுப்பையாவுக்கு உதவுவதைப் போல சாதூர்யமாகப் பேசி, வெளியூருக்கு அனுப்பி வைப்பார். பாலையாவின் நடிப்பில் மிளிர்ந்த சிறந்த காட்சி அது.
இதே காட்சியைத் தெலுங்கில் எடுக்கும்போது சாவித்திரி நடித்த ரோலில் ஜமுனாவும், எஸ்.வி.சுப்பையாவுக்கு பதில் வி.நாகையாவும், பாலையாவுக்கு பதில் எஸ்.வி.ரங்கா ராவும் நடித்தார்கள். மெய்யப்ப செட்டியார் என்னை அழைத்து, ‘அந்தக் காட்சியைப் படமாக்குவதற்கு முன் ரங்காராவ்கிட்ட தமிழில் பாலையா நடித்த காட்சியை போட்டுக் காட்டு. அதைப் பார்த்துவிட்டு நடிக்கட்டும்’ என்றார். ரங்கா ராவிடம் சென்று ‘‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் இடம்பெற்ற காட்சியை ஒரு தடவை பார்த்துவிட்டு செட்டியார் உங்களை நடிக்கச் சொன்னார்’’ என்று சொன்னேன். ‘‘வேண்டாம். அதைப் பார்த்தால் பாலையா நடிப்போட பாதிப்பு வந்துடும்’ என்றார் ரங்கா ராவ். ‘‘செட்டியார் கோபப்படுவாரே…’’ என்ற என்னிடம் ‘‘நான் செட்டியார்கிட்ட சொல்லிக்கிறேன்…’’ என்று சொல்லி விட்டு அந்தக் காட்சியில் நடித்தார்.
படப்பிடிப்பு முடிந்ததும் செட்டியார் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து, ‘‘ஏம்பா… முத்துராமா. தமிழ்ல பாலையா நடிச்சதை ரங்கா ராவ் பார்த்தாரா?’’ என்று கேட்டார். நான் ரங்கா ராவ் சொன்னதை அவரிடம் சொன்னேன். ‘‘மக்கு மக்கு… நீயெல்லாம் 100 சதவீதம் யூஸ்லெஸ்’’ என்று என்னைத் திட்டிவிட்டு, ‘‘ரங்காராவை என்னிடம் போனில் பேசச் சொல்லு’’ என்றார். உடனே அவர் செட்டியாரிடம் பேசினார். அவரிடம் செட்டியார் ‘‘எனக்காக ஒருமுறை தமிழில் எடுத்திருக்கும் காட்சியைப் பாருங்க’’ என்று சொல்ல, ரங்கா ராவ் செட்டியாருடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.
எஸ்.வி.சுப்பையாவுக்கு சப்போர்ட் பண்ணுகிற மாதிரி பாலையா சாதூர்யமாகப் பேசி, அவர்களை வெளியூருக்கு அனுப்பும் காட்சியை பார்த்த ரங்கா ராவ், ‘‘பாலையா தந்திரமா, அருமையா நடிச்சிருக்கார். இந்த நடிப்பை நான் மிஸ் பண்ணிட்டேன். ஸாரி சார். அந்தக் காட்சியைத் திரும்ப எடுத்துவிடலாம்’’ என்றார். திரும்பவும் அதை எடுத்தப் பிறகு காட்சி மேலும் பிரமாதமாக வந்திருந்தது.
அன்று என்னை செட்டியார் ‘மக்கு மக்கு 100 சதவீதம் யூஸ்லெஸ்’ என்று திட்டியதால்தான் இன்றைக்கு 100 சதவீதம் யூஸ்ஃபுல்லாக இருப்பதாக நினைக்கிறேன். மேல்அதிகாரிகள் திட்டும்போது, அவர்கள் ஏன் திட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், தவறைத் திருத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை இன்றைய தலை முறைக்கு சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.
‘பாவமன்னிப்பு’ சிவாஜி - பீம்சிங் - சந்திரபாபு
‘சகோதரி’ படத்தை பீம்சிங் இயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபுவின் கதை ‘அப்துல்லா’வை படமாக்க நினைத்தார் பீம்சிங். நாயகன் இந்துவாகப் பிறந்து, முஸ்லிமாக வளர்ந்து, கிறிஸ்துவப் பெண்ணை மணம் முடித்துக்கொள்வது போன்ற கதை. இதை ஏவி.எம்.சரவணன் சாரிடம் பீம்சிங் சொன்னதும், அவருக்கும் பிடித்து, அவர் செட்டியாரிடம் சொல்ல பாட்னர்ஷிப்பில் படத்தை எடுக்கலாம் என்று முடிவானது.
வலம்புரி சோமநாதன், சோலை மலை, இறைமுடி மணி, கு.மா.பால சுப்ரமணியம், பாசுமணி ஆகியோர் கொண்ட ஒரு கதைக் குழுவை பீம்சிங் வைத்திருந்தார். குழு விவாதம் என்று அமர்ந்துவிட்டால் விவாதங்களில் சூடு பறக்கும். பீம்சிங்குக்கு இணை இயக்குநர்களாக இருந்த திருமலை, மகாலிங்கம், ராமநாதன் மூவருமே யார், யார் என்னென்ன பேசினார்கள் என்பதை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் ஒரு விவாதத்தில் அமர்ந்து முன்பு பேசப்பட்டதில் சுவாரஸ்யமான நல்ல விஷயங்களைத் தனியே எடுத்துக் கொண்டு, வைரத்தை பட்டைத் தீட்டுவது மாதிரி கதையின் தன்மையை மிகச் சிறப்பாக வடிவமைப்பார்கள்.
இப்படி சிறந்த முறையில் வடிவமைத்த பிறகு சரவணன் சாரிடம் ‘‘அப்துல்லா கதையை டெவலப் செய்ததில் ரொம்ப நல்லா வந்துள்ளது. ஆனால், இந்தக் கதைக்கு சந்திரபாபு நாயகனாக நடிக்க முடியாது. கதாபாத்திரம் மிக உணர்ச்சிகரமாக அமைவதால் சிவாஜிதான் அந்த பாத்திரத்தில் ஜொலிக்க முடியும்’ என்றார் பீம்சிங். ‘‘கதை சந்திரபாபுவுடையது. அவர் ஹீரோ இல்லேன்னா எப்படி சார்?’’ என்று சரவணன் சார் தயங்கினார். ‘‘ நான் சந்திரபாபுகிட்ட பேசி ஒப்புதல் வாங்கிவிட்டேன்’’ என்று கூறி, பீம்சிங் பெரிய பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து, பெரிய பட்ஜெட்டில் எடுத்த படம்தான் ‘பாவமன்னிப்பு’.
பீம்சிங் படங்களுக்கு பெரும்பாலும் கவியரசர் கண்ணதாசன்தான் பாடல்கள் எழுதுவார். மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்திதான் இசையமைப்பாளர்கள். அந்த இசைக் கோர்வையில் (மியூசிக் கம்போஸிங்) அப்படி ஓர் இனிமை, குளுமை, ஒருங்கிணைப்பு இருக்கும்.
அப்படி ஓர் இசைக் கோர்வை நிகழும் இடத்துக்கு கவியரசர் கண்ணதாசன் வந்தார். எம்.எஸ்.வியைப் பார்த்து ‘‘விசு.. இன்னைக்கு மெட்டுக்குப் பாட்டா… பாட்டுக்கு மெட்டா?’’ என்று கேட்டார்.


ஏ.பீம்சிங் [இயக்குநர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர்]
ஒரு இயக்குநர் என்பவன் எடிட்டராகவும் இருக்க வேண்டும் என்று சொன்னவர் தமிழ் சினிமாவின் “வெற்றி இயக்குனர் ஏ.பீம்சிங்”. அவரது படங்களை அவரே எடிட்டிங் செய்திருக்கிறார். பீம்சிங்,அழுத்தமும், ஆழமும் நிறைந்த திரைப்படங்களைத் தருவதில் வல்லவர். இயக்குனர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கிய ஒரு திரைக் கலைஞன்.
திருப்பதியை அடுத்த ராயலசெருவு என்ற கிராமத்தில் பிறந்த பீம்சிங்கின் பெற்றோர், சென்னையில் குடியேறினார்கள். சென்னை புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில், பீம்சிங் பள்ளிக்கல்வியை படித்தார். படிப்பை முடித்ததும், “ஆந்திரபிரபா” என்ற தெலுங்குப் பத்திரிகையில் சிறிது காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அந்த காலக்கட்டத்தில் தான், அவருக்கு சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து, “டைரக்ஷன்” மட்டுமின்றி “எடிட்டிங்” துறையிலும் பயிற்சி பெற்றார். பராசக்தி படத்தில் வசனங்களை சிவாஜி கணேசனுக்கு சொல்லிக்கொடுக்கும் பணியைச் செய்தார், இவர்.
மு.கருணாநிதி வசனம் எழுதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜி.சகுந்தலா நடித்த “அம்மையப்பன்” திரைப்படம்தான், ஏ.பீம்சிங் இயக்கிய முதல் படம். 1954-இல் வெளிவந்த இப்படம், வெற்றி பெறவில்லை. இதற்குப்பிறகு, பீம்சிங் டைரக்ட் செய்த படம் “ராஜா- ராணி.” இதற்கும் கதை-வசனம் எழுதியவர் மு.கருணாநிதி தான். அந்த படத்தில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்தனர். இதில் சிவாஜி நடித்த “சாக்ரடீஸ்”, “சேரன் செங்குட்டுவன்” ஆகிய ஓரங்க நாடகங்கள் மிகச்சிறப்பாக அமைந்தபோதிலும், படம் வெற்றிகரமாக ஓடவில்லை.
தொடர்ந்து இரண்டு தோல்விபடங்களை கொடுத்த பீம்சிங்குக்கு, புதிய வாய்ப்பு ஏதும் வரவில்லை. இந்நிலையில் பீம்சிங், இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன், கதாசிரியர் சோலைமலை, அந்த காலகட்டத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஜி.என்.வேலுமணி ஆகிய நால்வரும் சேர்ந்து, 1958–இல் புத்தா பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, “பதிபக்தி” என்ற படத்தை தயாரித்தார்கள்.
சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, சந்திரபாபு, விஜயகுமாரி ஆகியோர் நடித்த இந்தப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, பீம்சிங்கின் வெற்றி சக்கரம் வேகமாகச் சுழன்றது. சிவாஜியுடன் பீம்சிங் கூட்டணியில் பாகப்பிரிவினை, படிக்காதமேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் என்று “ப” வரிசைப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்றன. பீம்சிங் தமிழ் சினிமா வரலாற்றில் நீக்கமுடியாதவராய் நிலைபெற்றார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச்சிறந்த படங்கள் பலவற்றை டைரக்ட் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் ஏ.பீம்சிங்.
தமிழ் மொழியை தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களையும் பீம்சிங் டைரக்ட் செய்தார். “களத்தூர் கண்ணம்மா”வை, ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் இந்தியில் தயாரித்தார்கள். அந்த படத்தை பீம்சிங் டைரக்ட் செய்தார். படம் வெற்றி பெற்றது. ஜி.என்.வேலுமணி தமிழில் தயாரித்த “பாகப்பிரிவினை” படத்தின் கதையை வாசுமேனன் வாங்கி, “கான்தான்” என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார்.
தமிழில் சிவாஜிகணேசன் நடித்த வேடத்தில் சுனில்தத் நடித்தார். பீம்சிங் டைரக்ஷனில் உருவான இந்தப்படம், “சூப்பர் ஹிட்”டாக அமைந்தது. வட நாட்டில் 60 வாரம் ஓடி வசூலைக் குவித்தது. இந்தப்படத்தின் லாபத்தைக் கொண்டு பிலிம் சென்டர் ஸ்டூடியோவை வாசுமேனன் வாங்கி “வாசு ஸ்டூடியோ” என்ற பெயரில் நடத்தினார். படிக்காத மேதை, முரடன் முத்து ஆகிய படங்களும், பீம்சிங் டைரக்ஷனில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன.
பீம்சிங், சிவாஜிகணேசனை வைத்து, சொந்தமாக “பழநி” என்ற படத்தை எடுத்தார். அவருக்கு ராசியான “ப” எழுத்தில் பெயர் வைத்தும் படம் ஓடவில்லை. நீண்ட பயணத்திற்கு பிறகு தோல்வி இவரை நெருக்கியது, “பழனி” என்ற படத்தை தொடர்ந்து “பாதுகாப்பு” என்ற படமும் திரையில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் பீம்சிங்கின் பிற்காலப் படங்கள் வெற்றிகரமாக ஓடியது.
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை, படமாக அதே பெயரில் தயாரித்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அகில இந்திய சிறந்த நடிகைக்கான “ஊர்வசி” விருதை நடிகை லட்சுமிக்கு பெற்று தந்தது. இவ்வாறாக, தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த பீம்சிங்கின் கடைசி படம் “கருணை உள்ளம்”. 1978–ஆம் ஆண்டில் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் வெள்ளித்திரையில் மின்னியது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இரண்டு மனைவியர். மூத்தவர் சோனா. இரண்டாமவர் நடிகை சுகுமாரி. இத்தம்பதியர்களுக்கு பி.லெனின், சுரேஷ் பீம்சிங், பி.கண்ணன், நரேன் பீம்சிங் என்ற நான்கு மகன்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக